Global Trends in Teacher Education
பேராசிரியர் (கலாநிதி) எப்.எம்.நவாஸ்தீன்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
அறிமுகம்
ஆசிரியர் கல்வி என்பது திறமையான கல்வியாளர்களாக மாறுவதற்குத் தேவையான அறிவு, திறன்கள், மனப்பான்மைகள் மற்றும் நடத்தைகளுடன் தனிநபர்களை உருவாக்கும் விரிவான செயன்முறையாகும். இதில் இரண்டு முக்கிய நிலைகள் காணப்படுகின்றன. முன் சேவை ஆசிரியர் கல்வி (Pre-service Teacher Education) மற்றும் சேவைக்கால ஆசிரியர் கல்வி (In-service Teacher Education) என்பனவே அவையாகும்.
முன் சேவை ஆசிரியர் கல்வி என்பது ஒருவர் ஆசிரியர் தொழிலில் நுழைவதற்கு முன் பெறும் முறையான கல்வி மற்றும் பயிற்சியாகும். சேவைக்கால ஆசிரியர் கல்வி என்பது ஆசிரியராகப் பணியாற்றும் காலத்தில் அறிவு மற்றும் திறன்களை புதுப்பித்து மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான கல்வி மற்றும் பயிற்சியாகும்.
இன்றைய உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியின் அதிவேக முன்னேற்றம், இணையத்தின் வழியாக உருவான உலகளாவிய இணைப்பு, செயற்கை நுண்ணறிவின் (AI) எழுச்சி, மற்றும் தகவல் பரிமாற்றத்தின் விரைவான வளர்ச்சி போன்ற காரணங்களால் வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றங்கள் உலகின் அனைத்து துறைகளையும், மக்களின் வாழ்க்கை முறையையும் ஆழமாகப் பாதித்துள்ளன. அதேபோல், இந்த உலகளாவிய மாற்றங்கள் ஆசிரியர் கல்வியிலும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தி, புதிய போக்குகள் மற்றும் புதுமையான அணுகுமுறைகளை உருவாக்கியுள்ளன. இதனால், இன்றைய ஆசிரியர் கல்வி விரைவான மாற்றங்களை எதிர்கொள்ளும் கட்டாய நிலையில் உள்ளது. மாற்றங்களை வேண்டி நிற்கும் புதிய போக்குகள் சில இங்கு நோக்கப்படுகின்றது
1. தேர்ச்சி அடிப்படையிலான ஆசிரியர் கல்வி (Competency-Based Teacher Education)
இன்றைய உலகில் ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சம், அறிவு சார்ந்த கற்றலைத் தாண்டி, தேர்ச்சி அடிப்படையிலான கற்பித்தல் ஆகும். இது வெறும் பாடவியல் அறிவை மட்டுமின்றி, செயன்முறை தேர்ச்சிகள், வகுப்பறை முகாமைத்துவம், கணிப்பீடு-மதிப்பீட்டுத் தொடர்பான தேர்ச்சிகள், பிரச்சினைத் தீர்க்கும் திறன், ஒத்துழைப்பு, மற்றும் தலைமைத்துவத் தேர்ச்சிகள் போன்ற பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்குகிறது.
இந்த அணுகுமுறையில், ஆசிரியர் என்பது அறிவை பகிரும் ஒருவராக அல்லாது, கற்றலுக்கான சூழலை உருவாக்கும் “கற்றல் வசதியாளர்/கற்றலை இலகுபடுத்துபவர் ” (Facilitator of Learning) என்ற புதிய வகிபாகத்தில் தன்னை நிலைநிறுத்துகிறார். இதனால் மாணவர்கள் தங்களின் கற்றலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு கற்றலுக்காக கற்றல் எனும் தேர்ச்சியின் பால் தம்மை இட்டு செல்லுகின்றனர்.
உலகளாவிய ரீதியில், ஆசிரியர் கல்வி பாரம்பரிய அறிவடிப்படையிலான (Knowledge-based) பயிற்சியிலிருந்து தேர்ச்சி அடிப்படையிலான (Competency-based) பயிற்சிக்கு மாறி வருகிறது. இந்த மாற்றம், 21ஆம் நூற்றாண்டின் கல்வி தேவைகளுக்குப் பொருந்தும், புதுமைமிக்க மற்றும் சிந்தனையூக்கமான ஆசிரியர்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
யுனெஸ்கோ (UNESCO) போன்ற சர்வதேச கல்வி அமைப்புகள் அவ்வப்போது காலத்துக்கேற்ற ஆசிரியர் தேர்ச்சி சட்டகங்களை (Teacher Competency Frameworks) உருவாக்கி அறிமுகம் செய்கின்றன.
உதாரணம்:
- UNESCO ICT Competency Framework for Teachers (ICT-CFT) – 2018 (Revised Edition)
- Global Framework of Professional Teaching Standards (2019) of UNESCO and Education International (EI),
- Southeast Asia Teachers Competency Framework (SEA-TCF),
- A Framework for Teachers’ Professional Competencies – OECD (2020)
இத்தகைய சட்டகங்கள், ஆசிரியர் தேர்ச்சி (Teacher Competence) என்பது தரமான கல்வி வழங்குதலுக்கான முக்கிய அடிப்படைத் தூணாகும் என தெளிவுபடுத்துகின்றன. எனவே, ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் தற்போது “என்ன தெரியும்?” என்ற கேள்வியிலிருந்து “என்ன செய்ய முடியும்?” என்ற செயன்முறை நோக்கத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றன அல்லது செல்ல வேண்டி உள்ளன.
மேலும், தேர்ச்சி அடிப்படையிலான ஆசிரியர் கல்வி ஆசிரியர்களுக்கு தங்களின் முன்னேற்றத்தை சுய மதிப்பீடு, தொடர்ச்சியான பின்னூட்டம், மற்றும் பிரதிபலிப்பு (Reflection) மூலம் கண்காணித்து மேம்படுத்துவதற்கான வாய்ப்பளிக்கிறது. இதனால் அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள சுய-ஒழுங்குபடுத்தப்பட்ட/ சுய-நெறிமுறைப்படுத்தப்பட்ட கற்றவர்களாக (Self-regulated learners) உருவாகின்றனர்.
2. எண்ணிம (டிஜிட்டல்) தொழில்நுட்பம் மற்றும் நிகழ்நிலை கற்றல் (Digital Technology & Online Learning)
இன்றைய உலகளாவிய சூழலில் எண்ணிம/டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு ஆசிரியர் கல்வியில் ஒரு அடிப்படை மற்றும் தவிர்க்க முடியாத அம்சமாக மாறியுள்ளது. நிகழ்நிலை கற்றல் தளங்கள், மொபைல் கற்றல், கற்றல் முகாமைத்துவ தொகுதிகள், (LMS), மற்றும் மெய்நிகர் வகுப்பறைகள் ஆகியவை இப்போது ஆசிரியர் பயிற்சியின் முக்கிய கருவிகளாக விளங்குகின்றன. இதனால் நேரம், இடம் மற்றும் வளங்களின் எல்லைகளை தாண்டி கற்றல் விரிவடைந்து வருகிறது.
COVID-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, ஆசிரியர் கல்வி மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தங்கள் கற்பித்தல் நடைமுறைகளை முழுமையாக மறுபரிசீலனை செய்தன. இதன் விளைவாக கலப்பு கற்றல் (Blended Learning), மெய்நிகர் வகுப்பறைகள் (Virtual Classrooms), மற்றும் உருவகப்படுத்துதல் அடிப்படையிலான கற்பித்தல் (Simulation-based Teaching) போன்ற புதுமையான வடிவங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆசிரியர்களிடம் இப்போது டிஜிட்டல் திறன்கள் (Digital Skills) மற்றும் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு (Cybersecurity Awareness) ஆகியவை அவசியமான அடிப்படைத் திறன்களாகக் கருதப்படுகின்றன. ஆசிரியர் கல்வி பயிற்றுவிப்பாளர்கள், தொழில்நுட்பத்தை வினைத்திறனாக ஒருங்கிணைக்கும் முன்மாதிரிகளாக (Models of Best Practice) திகழ வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எண்ணிம/டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான முக்கிய திறன்கள் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றன:
- டிஜிட்டல் எழுத்தறிவு (Digital Literacy): நிகழ்நிலை தளங்களைப் பயன்படுத்தும் திறன், இணையத்தில் உள்ள தகவல்களின் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்தல் மற்றும் பாதுகாப்பான பயன்பாடு.
- தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு (Technology Integration): கற்றல் முகாமைத்துவ தொகுதிகள் (Moodle, Google Classroom) மற்றும் இடைவினையுள்ள முன்வைப்புத் தளங்கள் ( interactive presentation tools (Nearpod, Padlet) போன்ற கருவிகளை பயனுள்ள வகையில் கற்பித்தலில் பயன்படுத்துதல்.
- உள்ளடக்க வடிவமைப்பு (Content Creation): வீடியோக்கள், இடைவினை வினாடி வினா (interactive quizzes) போன்ற டிஜிட்டல் கற்றல் வளங்களை உருவாக்குதல்.
- கணிப்பீட்டு வடிவமைப்பு (Assessment Design): Google Forms அல்லது Kahoot போன்ற தளங்களைப் பயன்படுத்தி நிகழ்நிலை கணிப்பீடுகளை / மதிப்பீடுகளை வடிவமைத்தல்.
- தரவுப் பகுப்பாய்வு (Data Analysis): மாணவர் முன்னேற்றத்தை கண்காணிக்க டிஜிட்டல் கருவிகளின் மூலம் தரவுகளை பெறுதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பயன்படுத்துதல்.
- சுய வழிப்படுத்தப்பட்ட கற்றலை சாத்தியப்படுத்தல் (Facilitation of Self-Directed Learning): வளர்ந்து வரும் எண்ணிம கருவிகளை பயனுறுதி வாய்ந்த வகையில் கையாளவும், அவற்றின் மூலம் சுய வழிப்படுத்தப்பட்ட கற்றலை சாத்தியப்படுத்துவற்கான திறன்களை வளர்த்து கொள்ளல்.
3. வாழ்நாள் நீடித்த வாண்மை விருத்தி (Lifelong Professional Development)
கல்வி என்பது ஒரு தொடர்ச்சியான கற்றல் பயணம். அதுபோல், ஒரு திறமையான ஆசிரியராக திகழ்வதற்கான பயணம் ஒரே கட்டத்தில் முடிவடையாது; அது வாழ்நாள் முழுவதும் தொடரும் வாண்மைத்துவ விருத்தி ஆகும்.
இன்றைய கல்வி சூழலில், ஆசிரியர் கற்றல் (Teacher Learning) என்பது முன் சேவை (Pre-service) பயிற்சியால் மட்டுப்படுத்தப்படவில்லை. உலகளவில் பல நாடுகள் தொடர்ச்சியான சேவைக்கால பயிற்சிகள் (Ongoing In-service Training), வாண்மைத்துவ கற்றல் சமூகங்கள் (Professional Learning Communities – PLCs), மற்றும் சிறுபட்டயங்கள் அல்லது குறுகிய அங்கீகாரங்கள் (Micro-credentialing) போன்ற புதுமையான அணுகுமுறைகளை ஊக்குவிக்கின்றன. இவை ஆசிரியர்களை புதிய கல்வி மாற்றங்களுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் இணைந்து செயல்படக்கூடியவர்களாக மாற்றுகின்றன.
வாழ்நாள் நீடித்த வாண்மை விருத்தியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு சுட்டிக்காட்டப்படுகின்றன:
- தொடர்ச்சியான கற்றல் பண்பாடு (Culture of Continuous Learning): ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் திறன்களை, மதிப்பீட்டு நடைமுறைகளை, மற்றும் வழிகாட்டும் திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
- நிகழ்நிலை கற்றல் வாய்ப்புகள் (Online Learning Opportunities): MOOCs, வலைநிகழ்வுகள் (Webinars), மற்றும் நிகழ்நிலை சான்றிதழ் பாடநெறிகள் மூலம் உலகளாவிய கற்றல் வாய்ப்புகளைப் பெற முடிகிறது.
- வாண்மைத்துவ கற்றல் சமூகங்கள் (PLCs): ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும், புதிய யுக்திகளை ஆராயும், மற்றும் ஒன்றிணைந்து தீர்வுகளை உருவாக்கும் கற்றல் வலைப்பின்னல்கள்.
- மைக்ரோ அங்கீகாரங்கள் (Micro-credentialing): குறுகிய கால பாடநெறிகள் அல்லது டிஜிட்டல் பதக்கங்கள் மூலம் (Digital Badges) குறிப்பிட்ட திறன்கள் அங்கீகரிக்கப்படுகின்றன; இது ஆசிரியர்களை தங்கள் கற்றல் இலக்குகளை அடைவதற்கு உதவுகிறது.
- வழிகாட்டல் மற்றும் சகபாடி கற்றல் (Mentoring and Peer Learning): அனுபவமுள்ள ஆசிரியர்கள் இளம் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் நடைமுறை, அனுபவ பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது.
யுனெஸ்கோ (UNESCO) மற்றும் OECD போன்ற சர்வதேச அமைப்புகள், வாழ்நாள் முழுதுமான கற்றல் ஆசிரியர் தரத்தை மேம்படுத்துவதற்கும் கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் அவசியம் என வலியுறுத்துகின்றன.
இலங்கையில், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் பெரும்பாலும் பலக்லைக்கழங்கள், தேசிய கல்வி நிறுவனம் (NIE), ஆசிரியர் பயிற்சி மையங்கள், மற்றும் தொலைக் கல்வி வாயில்கள் மூலம் வழங்கப்படுகின்றன. எனினும், நேரக்குறைவு, தொழில்நுட்ப அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, மற்றும் ஊக்கமின்மை போன்ற சில சவால்கள் இன்னும் காணப்படுகின்றன. இது ஆசிரியர் கல்வியில் தடைகளை உருவாக்குகின்றன.
இதனால், ஆசிரியர்களின் வாழ்நாள் முழுதுமான தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிக்க, கொள்கை மட்டத்திலும் (Policy Level), நிறுவன மட்டத்திலும் (Institutional Level), மற்றும் தனிநபர் மட்டத்திலும் (Individual Level) ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது. இது ஆசிரியர்களை “கற்பித்தல் செய்பவர்களாக மட்டுமல்லாது, தொடர்ந்து கற்றலில் ஈடுபடுவர்களாக மாற்றும் ஒரு முக்கிய அணுகுமுறையாக விளங்குகிறது.
4. உள்ளடங்கல் கல்வி மற்றும் சமத்துவமான கல்வி (Inclusive & Equitable Education)
இன்றைய உலகில் “கல்வி அனைவருக்கும் (Education for All)” என்ற கொள்கை வலுவாக நிலைபெற்றுள்ளது. இதன் அடிப்படை நோக்கம், ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் பின்னணி, திறன் அல்லது சூழல் எதுவாக இருந்தாலும், கற்றல் வாய்ப்புகளில் சமத்துவம் மற்றும் அணுகல் உறுதி செய்வது ஆகும்.
ஐக்கிய நாடுகளின் நிலைபேண் அபிவிருத்தி இலக்கு 4 (SDG 4: Quality Education) இதனை வலியுறுத்தி, “யாரும் புறக்கணிக்கப்படாத கல்வி சூழல் (Inclusive and Equitable Quality Education)” உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. இதனை அடைவதில் ஆசிரியர் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள், பல்வேறு கற்றல் தேவைகளைக் கொண்ட மாணவர்களுடன் திறமையாகப் பணிபுரியும் ஆசிரியர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றன அல்லது கவனம்செலுத்த வேண்டி உள்ளது. இதில், மாற்றுத் திறனாளி மாணவர்கள், சிறுபான்மை சமூகங்களிலிருந்து வரும் மாணவர்கள், பின்தங்கிய சமூகப் பின்னணியிலுள்ளவர்கள், மற்றும் மொழி அல்லது கலாச்சார வேறுபாடுகளைக் கொண்ட மாணவர்கள் ஆகியோரையும் உள்ளடக்கிய பல்வேறு கற்றல் சூழல்கள் (Diverse Learning Contexts) கருதப்படுகின்றன.
உள்ளடங்கல் மற்றும் சமத்துவக் கல்விக்கான முக்கிய கூறுகள் பின்வருமாறு:
- பல்கலாசார கற்பித்தல் அணுகுமுறைகள் (Multicultural Pedagogy): பல கலாச்சாரங்கள், மொழிகள், மற்றும் மதிப்பீட்டு பார்வைகளை உள்ளடக்கிய கற்றல் வடிவமைப்புகள்.
- பாலின உணர்வு (Gender Sensitivity): பாலின சார்ந்த பாகுபாடுகள், கருத்துக்கள், அல்லது எதிர்பார்ப்புகள் கற்றல் செயல்முறையில் வெளிப்படாதவாறு செயற்படுதல்.
- விசேட தேவைகள் சார் கல்வி (Special Needs Education): மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பொருத்தமான கற்பித்தல் உத்திகள், தொழில்நுட்ப உதவிகள், மற்றும் உளவியல் ஆதரவு வழங்குதல்.
- சமூக நீதி நோக்கம் (Social Justice Orientation): கல்வி வழியாக சமூக சமத்துவத்தையும் ஒத்துழைப்பையும் வளர்த்தல்.
- ஒத்துழைப்பான கற்றல் சூழல் (Collaborative Learning Environment): வேறுபாடுகளை மதிக்கும், ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் கற்றல் கலாச்சாரத்தை உருவாக்குதல்.
யுனெஸ்கோ (UNESCO), யுனிசெஃப் (UNICEF), மற்றும் OECD ஆகிய அமைப்புகள், ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களில் சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவை பிரதான திறன்களாக (Core Competencies) இருக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றன. உதாரணமாக, UNESCO’s Global Teacher Education Framework (2021), ஆசிரியர்களை “diversity-sensitive, equity-driven practitioners” ஆக உருவாக்குதல் என்பது தரமான கல்விக்கான முக்கிய அடித்தளம் எனக் குறிப்பிடுகிறது.
இலங்கையை பொறுத்த வரையில் , “தேசிய உள்ளடக்கக் கல்விக் கொள்கை, மாற்றுத் திறனாளிகள் மற்றும் புறந்தள்ளப்பட்ட/உள்ளடங்காத சமூக மாணவர்களைப் பொதுக் கல்வி அமைப்பில் உள்ளடங்கலுக்கான வழிமுறைகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும், விசேட தேவைகள் சார் ஆசிரியர் பயிற்சியின் பற்றாக்குறை, வளங்களின் குறைவு, மற்றும் நிருவாக சவால்கள் காரணமாக இதன் நடைமுறைகள் இன்னும் முழுமையடையவில்லை.
இதனால், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் உணர்வுப்பூர்வமான (Empathetic), பாலினம் மற்றும் கலாச்சார விழிப்புணர்வுள்ள (Gender & Culturally Aware), மற்றும் சமபங்கு (ஒப்புரவு) சார்ந்த (Equity-Oriented) ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கில் கலைத்திட்டங்களை மறுவடிவமைத்தல் அவசியமாகிறது.இத்தகைய அணுகுமுறைகள் வழியாக மட்டுமே, ஆசிரியர்கள் “ஒவ்வொரு மாணவரும் மதிக்கப்படுகிறான், ஒவ்வொருவரும் கற்றல் வாய்ப்பை பெறுகின்றனர்” என்ற உண்மையான கல்வி சமத்துவத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
5. ஆசிரியர் கல்வியின் உலகமயமாக்கல் (Globalization of Teacher Education)
இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர் கல்வி உலகளாவிய சூழலோடு ஒருங்கிணைந்தது என்பது புதிய பரிமாணமாகும். பல்கலைக்கழகங்களுக்கிடையேயான சர்வதேச கூட்டணிகள், ஆசிரியர் மற்றும் மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள் (Exchange Programs eg: Erasmus+ programme), மற்றும் உலகளாவிய ஆசிரியர் தரநிலைகள் (International Teaching Standards) ஆகியவை, ஆசிரியர் கல்வி தொடர்பான கலைத்திட்டங்களை மறுசீரமைக்க முக்கிய பங்கு வகிக்கின்றன.
உலகமயமாக்கலின் ஒரு முக்கிய நோக்கம், ஆசிரியர்களை “உலக குடிமை உணர்வு (Global Citizenship)” கொண்ட நபர்களாக உருவாக்குதல் ஆகும். இதன் மூலம் அவர்கள் கற்றல் மற்றும் கற்பித்தல் செயன்முறைகளில் சர்வதேச நிலை, கலாசாரப் பன்மை, சமூக பொறுப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல்படுவார்கள்.
மேலும், உலகளாவிய அளவில் ஏற்படும் பின்வரும் சில முக்கிய மாற்றங்கள் தொடர்பாக ஆசிறியராக கல்வியில் அறிவூட்டப்படல் வேண்டும். நிலைபேண் அபிவிருத்திக்கான கல்வி (Education for Sustainable Development – ESD)காலநிலை மாற்றம் (Climate Change) எண்ணிம கருவிகளை பயன்படுத்தும் ஒழுக்க நெறிமுறைகள், கலாசார பன்மை மற்றும் மொழி வித்தியாசம் (Cultural & Linguistic Diversity) போன்றனவும் ஆசிரிய கல்வியில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் ஆகும்.உலகளாவிய இணைப்பின் மூலம், ஆசிரியர் கல்வி தற்போது உலகப் பார்வையுடன் கூடிய, சமூகப் பொறுப்புள்ள, திறமையான, மற்றும் தொழில்நுட்பமாக முன்னேறிய ஆசிரியர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இது பல்வேறு சமூகங்களின் நலன் மற்றும் உலகச் சூழலின் பாதுகாப்புக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஆசிரியர்களை உருவாக்குகின்றது
6. ஆய்வை அடிப்படையாகக் கொண்ட நடைமுறை (Research-Based Practice)
இன்றைய ஆசிரியர் கல்வி, ஆசிரியர்களை விமர்சன ரீதியான சிந்தனையுடன் செயல்படும், பிரதிபலிப்புக் செய்பவர்களாக (Reflective Practitioners) மற்றும் ஆராய்ச்சியாளர்கள் (Researchers) ஆக மாற்ற வேண்டும் எனக் கருதுகிறது. ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் நடைமுறைகளை ஆய்வு மற்றும் சான்றுகளின் அடிப்படையில் (Evidence-Based) வடிவமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களில் பின்வரும் மாற்றங்கள் தேவையாகின்றன:
- செயல்நிலை ஆய்வு (Action Research): ஆசிரியர்கள் தமது வகுப்பறை அனுபவங்களை ஆராய்ந்து, சவால்களை இனங்கண்டு அதற்குரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் செயல்நிலை ஆய்வுகளில் ஈடுபடத் தேவையான பயிற்சிகள் ஆசிரியர் கல்வியில் இணைக்கப்படுகின்றன.
- வடிவமைப்பு அடிப்படையிலான செயல்நிலை ஆய்வு (Design-Based Action Research): இதை செயல்நிலை ஆய்வு வடிவத்தின் புதிய வடிவமாகும். சிக்கலான கற்றல் பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை உருவாக்க நிஜ உலக சூழல்களில் தலையீடுகளை மீண்டும் மீண்டும் வடிவமைத்து சோதிப்பதை உள்ளடக்கிய ஒரு கல்வி ஆய்வு முறையாகும்.
- வகுப்பறை விசாரணை / ஆய்வு (Classroom Inquiry): வகுப்பறை விசாரணை என்பது செயல்நிலை ஆய்வில் இருந்து வேறுபட்டது. இது பெரும்பாலும் மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல் செயன் முறையாகும், இதில் மாணவர்கள் தங்கள் சொந்த வினாக்களை கேட்டு பதிலளிக்கின்றனர், வகுப்பறை விசாரணை தொடர்பான அறிவு ஆசிரியர்களுக்கு முக்கியமானது, ஏனெனில் இது விமர்சன சிந்தனை, பிரச்சினை தீர்க்கும் திறன் மற்றும் தன்னாட்சி போன்ற முக்கியமான மாணவர் திறன்களை விருத்தி செய்கிறது, அதே நேரத்தில் ஆசிரியரின் பங்கை கற்றலை எளிமையாக்குபவராக மாற்றுகின்றது.
- சான்று அடிப்படையிலான தீர்மானங்கள் (Evidence-Based Decisions): கல்விசார் முடிவுகள், ஆய்வு மற்றும் தரவுகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகின்றன, இன்று ஆசிரியர் கல்வி சார்ந்த ஆய்வுகள் ஏராளாமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது கற்றல்-கற்பித்தல் தரத்தை உயர்த்துகிறது. ஆகவே ஆசிரிய தொடர்பான விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் போது சான்று அடிப்படையிலான தீர்மானங்கள் எடுக்கும் திறன்கள் அர்மிமுங்கம் செய்யப்படல் வேண்டும்.
எனவே, ஆய்வை அடிப்படையாகக் கொண்ட நடைமுறை ஆசிரியர்களுக்கு:
• தமது கற்பித்தல் செயல்முறைகளை விமர்சனத்துடன் பகுப்பாய்வு செய்ய,
• புதிய கற்பித்தல் நுட்பங்களை ஆராய்ந்து செயல்படுத்த,
• மற்றும் மாணவர்களின் கல்வி அடைவுகளை மேம்படுத்த,
மிகச் சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. உலகளாவிய போக்கில், ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களில் ஆய்வின் ஒருங்கிணைப்பு (Integration of Research in Teacher Education), ஆசிரியர்களை வாண்மை சார் திறன், சுய-மதிப்பீடு, மற்றும் புதுமைச் சிந்தனையில் வல்லுநர்களாக உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
7. சமூக-மனவெழுச்சி கற்றல் (Social-Emotional Learning – SEL)
இன்றைய கல்வி சூழலில், மாணவர்களின் அறிவுத்திறனை மட்டுமின்றி, அவர்களின் சமூக-மனவெழுச்சி திறன்களையும் (Social-Emotional Skills) விருத்தி செய்தல் ஆசிரியர்களின் முக்கிய பொறுப்பாக மாறியுள்ளது. இதற்காக ஆசிரியர் கல்வியில் சமூக-மனவெழுச்சி கற்றல் (SEL) கூறுகள் இணைக்கப்படுகின்றன, இது மாணவர்களில் கருணை, ஒத்துழைப்பு, மனவெழுச்சி நுண்ணறிவு (Emotional Intelligence), மற்றும் நற்பண்பு விருத்தி ஆகியவற்றை ஊக்குவிக்க உதவுகிறது.
SEL பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கும் திறன்கள்
• மனவெழுச்சி முகாமைத்துவ/ஒழுங்குபடுத்தும் திறன்கள் (Emotional Regulation): ஆசிரியர்கள் தங்களின் மனநிலை மற்றும் துலங்கல்களை சரியாக கையாளும் திறன் விருத்தி செய்து கொள்ள வேண்டும், அதேசமயம் மாணவர்களின் மனவெழுச்சிகளை புரிந்து வழிநடத்த வேண்டும்.
• உறவுகளை கட்டியெழுப்புதல் (Relationship Building): மாணவர்களுடன் நம்பகமான மற்றும் சிநேகபூர்வமான உறவுகளை உருவாக்குதல். இதற்கான வழிகாட்டல்களை வழங்குதல்
• பரிவுணர்வுடன் கூடிய வழிகாட்டல் (Empathetic Guidance): மாணவர்களின் மனநிலை மற்றும் சவால்களை புரிந்து அவர்களுக்கு உதவக்கூடிய வகையிலான திறன்களை ஆசிரியர்களுக்கு வழங்குதல்
• ஆதரவான வகுப்பறைச் சூழல் (Supportive Classroom Environment): ஆதரவான வகுப்பறை சூழல் என்பது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கற்றக் கூடிய வகுப்பறை ஆகும். இது பாதுகாப்பான, உள்ளடக்கிய, மரியாதைக்குரிய மற்றும் துலங்கக்கூடியதான (safe, inclusive, respectful, and responsive) உள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வகுப்பறைகளை குறித்து நிற்கின்றது. இது அனைத்து மாணவர்களும் மதிப்புமிக்கவர்களாகவும், அதிகாரம் பெற்றவர்களாகவும், வெற்றி அல்லது தோல்விக்கு பயப்படாமல் அறிவுசார் விடயங்களை கற்க கூடியவர்களாக உணரும் இடமாகும்.
• மாணவர்களின் நலனோம்பல் (Student Well-being): மனநிலை சீரமைப்பு, மனஅழுத்தத்தை குறைத்தல், மற்றும் சமூக நலனை மேம்படுத்த கூடிய வகையில் மனவர்க்ளின் நலன்களை பேணும் திறன்களை ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டும்.
உலகளாவிய போக்கில், ஆசிரியர் கல்வியில் SEL இணைப்பு, அறிவுசார் திறன்களை (Cognitive Skills) மட்டுமல்ல, முழுமையான கற்றல் மற்றும் மனிதநேய அடிப்படையிலான விருத்தி என்பவற்றையும் இணைக்கும் வழியாகப் பார்க்கப்படுகிறது. இது ஆசிரியர்களை, மாணவர்களின் மன வளர்ச்சி, சமூகப் பொறுப்பு, மற்றும் வாழ்வுத்திறனை மேம்படுத்தும் முன்மாதிரி கற்றல் வழிகாட்டிகளாக மாற்றுகிறது.
ஆசிரியர்களுக்கான, SEL பயிற்சி மாணவர்களின் கல்விசார் வெற்றியையும், சமூக மற்றும் உணர்ச்சி நல்வாழ்வையும் ஒரே நேரத்தில் மேம்படுத்தும், புதிய தலைமுறை திறமையான மற்றும் சமூகப்பூர்வமான பாசமிக்க ஆசிரியர்களை உருவாக்கும் முக்கிய அணுகுமுறை ஆகும்.
8. நடைமுறை சார்ந்த பயிற்சி (Practice-Oriented Training)
ஆசிரியர் கல்வியில் நடைமுறை சார்ந்த பயிற்சி என்பது ஆசிரிய மாணவர்களை, ஆசிரிய பயிற்சியின் போது பாடசாலையுடன் குறிப்பிட்ட காலம் இணைத்து பயிற்சி வழங்கும் முறையாகும். இது உலகளாவிய போக்கில் முக்கியத்துவம் பெறுகிறது. இத்தகைய பயிற்சி, உண்மையான பாடசாலை சூழல்களில் (Authentic School Contexts) நடைபெறுவதால், ஆசிரியர்-மாணவர்கள் தங்கள் கற்பித்தல் திறன்களை நேரடியாக செயற்படுத்தும் வாய்ப்பை பெறுகின்றனர்.
நடைமுறை சார்ந்த பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:
• பாடசாலை அடிப்படையிலான பயிற்சி (School-Based Training – SBT): ஆசிரியர்-மாணவர்கள் நேரடியாக பாடசாலை சூழலில் பங்கேற்று, முழு பாடசாலை சமூகத்துடன் இணைந்து கற்பித்தல் அனுபவத்தைப் பெறுகிறார்கள். இது செயல்முறை திறன்கள், பிரச்சினைத் தீர்க்கும் திறன், வகுப்பறை முகாமைத்துவம் , மற்றும் மாணவர் ஈடுபாடு ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது.
• கற்பித்தலுக்கான பயிற்சி மையங்கள் (Teaching Practicum Schools): கற்பித்தல் முறைகளை ஆசிரிய மாணவர்கள் பூரணமாக அனுபவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையங்கள் இவையாகும்.. இது அவர்களுக்கு திடமான கற்பித்தல் அனுபவங் களையும் தன்னம்பிக்கையும் அளிக்கிறது.
• மெய்நிகர் ஒத்திகைகள் (Virtual Simulations): கணினி வழியாக நடத்தப்படும் வகுப்பு ஒத்திகைகள், மாணவர் ஆசிரியர்களுக்கு வகுப்பறை சூழலை முன்னோக்கியபடி அனுபவிக்க உதவுகின்றன.
• பல்கலைக்கழகம் – பாடசாலை கூட்டாண்மை (University–School Partnerships): இத்தகைய கூட்டுறவுகள் ஆசிரிய மாணவர்க்ளுக்கு, சிகிச்சை அணுகுமுறையினாலான பயிற்சி, மற்றும் வழிகாட்டல் (Mentorship) வாய்ப்புகளை வழங்குகிறது.
நடைமுறை சார்ந்த பயிற்சி மாணவர் ஆசிரியர்களை அறிவுத்திறனும் செயல்முறை திறனும் இணைந்த, வகுப்பறை சூழலுக்குத் தயாராகிய திறமையான ஆசிரியர்களாக உருவாக்கும் முக்கியமான அணுகுமுறை ஆகும். இது, ஆசிரியர் கல்வியின் “கற்றல் மூலம் கற்பித்தல்” நோக்கத்தையும் மிகச்சிறந்த முறையில் நடைமுறையில் கொண்டு வருகிறது..
9. நிலைத்தன்மை மற்றும் நிலைபேண் அபிவிருத்திற்கான கல்வி (Sustainability & ESD)
இன்றைய கல்வி சூழலில், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (Sustainable Development Goals – SDGs) மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஆசிரியர் கல்வியில், சுற்றுச்சூழல் அறிவு, சமூக பொறுப்பு, மற்றும் நிலைத்த வாழ்க்கைமுறைகள் (Sustainable Lifestyles) தொடர்பான பாடங்கள் அவசியமான பகுதியாக இணைக்கப்படுகின்றன.
நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் கல்வியின் முக்கிய அம்சங்கள்:
• சுற்றுச்சூழல் விழிப்புணர்வு (Environmental Awareness): மாணவர்களுக்கு இயற்கையின் பாதுகாப்பு, வளங்கள் சேமிப்பு, மற்றும் பசுமை நோக்கங்கள் குறித்த அறிவை உருவாக்க ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.
• நிலைத்த வாழ்க்கைமுறைகள் (Sustainable Lifestyles): நாளாந்த நடவடிக்கைகளில் குறைந்த வள பயன்பாடு, மறுசுழற்சி, மற்றும் சக்தி சேமிப்பு போன்ற பழக்கவழக்கங்களை மாணவர்களில் வளர்த்தல்.
• சமூக பொறுப்பு (Social Responsibility): சமூக மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளை புரிந்து, ஒழுங்குமுறை மற்றும் பொறுப்புடன் செயல்பட மாணவர்களை கற்பித்தல்.
• விமர்சன சிந்தனை மற்றும் தீர்வு காணல் (Critical Thinking & Problem Solving): மாணவர்கள் நியான அபிவிருத்தி தொடர்பான சவால்களை இனங்கண்டு , அதற்கான தீர்வுகளை ஆராய்ந்து செயல்படுத்தும் திறனை வளர்க்கின்றனர்.
• நடவடிக்கை உணர்வு கொண்ட குடிமை உணர்வு (Responsible Global Citizenship): உலகளாவிய சூழல் சவால்கள் மற்றும் வளங்கள் பற்றிய விழிப்புணர்வுடன், மாணவர்கள் சமூகத்தில் பங்களிப்பை ஏற்படுத்தக் கற்றுக் கொள்வர்.
Education for Sustainable Development (ESD) மூலம் ஆசிரியர்கள், மாணவர்களின் சிந்தனை திறன், சமூக பொறுப்பு, மற்றும் சுற்றுச்சூழல் நுண்ணறிவு ஆகியவற்றை வளர்க்கும் வகையில் கற்றல் செயல்முறைகளை வடிவமைக்கின்றனர். இதனால், எதிர்கால தலைமுறைகள் உலகளாவிய நிலைத்தன்மை சவால்களை எதிர்கொள்ள தயார் ஆகி, பொறுப்பான மற்றும் விழிப்புணர்வான குடிமக்களாக உருவாகலாம்.
உலகளாவிய போக்கில், பல நாடுகள் மற்றும் கல்வி அமைப்புகள் ESD மற்றும் பசுமை கல்வியை ஆசிரியர் தயாரிப்பில் ஒரு முக்கிய கூறாக இணைத்து வருகின்றன, இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவருக்குமான வாழ்வியலின் தரத்தை மேம்படுத்தும் ஒரு செயல்முறை ஆகும்
10. ஆசிரியர் கல்வியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence in Teacher Education)
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) இன்று ஆசிரியர் கல்வியின் வடிவத்தையும் செயல்முறைகளையும் மாற்றி வருகிறது. மாணவர்களின் கற்றல் பாணிகள், திறன்கள், சவால்கள் மற்றும் முன்னேற்றம் பற்றிய ஆழ்ந்த தகவல்களையும் பகுப்பாய்வுகளையும் AI ஆசிரியர்களுக்கு வழங்குகிறது, இதனால் கற்றல்-கற்பித்தல் செயல்முறைகள் மிகவும் தனிப்பட்ட (Personalized) செயன்முறையாக மாறிக்கொண்டு வருகிறது.
செயற்கை நுண்ணறிவும் ஆசிரியர் கல்வியும்
- தனிப்பட்ட கற்றல்: AI, மாணவர்களின் திறன் மற்றும் கற்றல் வேகத்திற்கேற்ப, தனிப்பட்ட பாடத்திட்டங்களை தானாகவே வடிவமைக்கும் திறன் பெற்றுள்ளது.
- தரவு பகுப்பாய்வு: மாணவர்களின் கற்றல் தரவுகளை ஆய்வு செய்து, அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை முன்கூட்டியே கணித்து, தேவையான தலையீடுகளை முன்மொழிய AI பயன்படுகிறது.
- தானியங்கி கணிப்பீடு-மதிப்பீடு: AI-அடிப்படையிலான கருவிகள், வினாத்தாள்களைத் தரப்படுத்தப்பட்ட முறையில் மதிப்பீடு செய்வதன் மூலம் ஆசிரியர்களின் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.
- திறன் மேம்பாடு: AI சார்ந்த கருவிகள் மூலம் ஆசிரியர்கள் பாடப்பகுப்பாய்வு, புதிய கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வழிகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.
- ஒழுக்கம் மற்றும் பொறுப்பான பயன்பாடு: AI-ன் நெறிமுறைப் பயன்பாடு, தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை போன்ற விஷயங்களில் ஆசிரியர்கள் பயிற்சி பெறுவது இன்றியமையாததாகிறது.
ஆசிரியர் கல்வியில் AI அறிவுத்திறன் (AI Literacy) ஒரு முக்கியத் திறனாக மாறியுள்ளது. இது, ஆசிரியர்கள் AI-யை மாணவர்களின் கற்றலை மேம்படுத்த பயன்படுத்தவும், அதேநேரம் தகவலின் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைக் கவலைகளை மதிக்கவும் உறுதி செய்கிறது. சுருக்கமாக, AI ஆசிரியர் கல்வியை மேலும் திறன்மயமான, தனிப்பட்ட மற்றும் தரவு-சார்ந்த கற்றல் சூழலாக மாற்றும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக உள்ளது.
முடிவுரை
உலகளாவிய போக்குகள் ஆசிரியர் கல்வியின் நோக்கு, வடிவம் மற்றும் செயல்முறைகளை அடிப்படையாக மாற்றி வருகின்றன. தேர்ச்சி அ டிப்படையிலான (Competency-Based), தொழில்நுட்ப ஒருங்கிணைந்த (Technology-Integrated), சமூக-உணர்வு மற்றும் ஆராய்ச்சி சார்ந்த (Research-Based & SEL) ஆசிரியர் கல்வி அமைப்புகள், எதிர்கால கல்வியின் வலுவான தளமாக அமையவுள்ளன.
இவ்வாறு மாற்றங்களுக்கேற்ப தங்களின் கலைத்திட்டங்களையும் நடைமுறைகளையும் புதுப்பிக்கும் கல்வி நிறுவனங்களே, 21ஆம் நூற்றாண்டிற்கேற்ற, புதுமையான, திறமையான மற்றும் பொறுப்பான ஆசிரியர்களை உருவாக்க முடியும்.
எனவே, இந்த உலகளாவிய போக்குகள் ஆசிரியர் கல்வியை மேம்படுத்துவதில், புதுமை கொண்ட செயல்முறைகளை நிலைநாட்டுவதிலும், மற்றும் உலக அளவில் திறமையான மற்றும் பொறுப்பான ஆசிரியர்களை உருவாக்குவதிலும் தீர்மானமான வழிகாட்டியாக செயல்படுகின்றன.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக