கல்வியியல் ஆய்வு அடிப்படைகள்

 

கல்வியியல் ஆய்வின் அடிப்படைகள்: வரைவிலக்கணம், தன்மைகள் , ஆய்வு செயன்முறை மற்றும் ஆய்வு அணுகுமுறைகள்

Foundations of Educational Research: Definitions, Nature, Research Process, and Research Approaches

ஆக்கம்: பேராசிரியர். F .M.நவாஸ்தீன் 
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 
திகதி: 16.05.2026
நேரம்: இரவு 9 மணி

1.     அறிமுகம்

மனித சமூகத்தின் வளர்ச்சியும் அறிவின் முன்னேற்றமும் தொடர்ச்சியான தேடல் மற்றும் ஆராய்ச்சியின் விளைவாகவே உருவாகியுள்ளன. மனிதன் தன்னைக் சூழவுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ளவும், புதிய உண்மைகளை கண்டறியவும், மற்றும் தன் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வுகளைத் தேடவும் எப்போதும் முயன்று வந்திருக்கிறான். இந்தத் தேடல் முறையான, திட்டமிட்ட மற்றும் ஆதாரபூர்வமான வடிவத்தைப் பெறும் போது அதுவே ஆய்வாக (Research) மாறுகிறது.

இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் ஆய்வு என்பது பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கான அடிப்படை கருவியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கல்வித்துறையில், கற்றல்–கற்பித்தல் செயல்முறைகளைப் புரிந்துகொள்வதற்கும், மாணவர்களின் கற்றல் நடத்தை ஆராய்வதற்கும், கல்விக் கொள்கைகளை வடிவமைப்பதற்கும் மற்றும் கல்வி நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் ஆய்வு முக்கியமான பங்காற்றுகிறது.

ஆய்வு என்பது தகவல்களை வெறுமனே சேகரிக்கும் செயலல்ல; மாறாக, அது அறிவை உருவாக்கும் அறிவியல் சார்ந்த விசாரணை செயல்முறையாகும். Creswell (2012) ஆய்வு என்பது ஒரு பிரச்சினை அல்லது தலைப்பைப் பற்றிய புரிதலை அதிகரிப்பதற்காக தரவுகளை முறையாகச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து விளக்கமளிக்கும் செயல்முறை எனக் குறிப்பிடுகிறார்.

ஆகவே, ஆய்வின் அடிப்படை இயல்பு, நோக்கங்கள், முக்கியத்துவம் மற்றும் கல்வி ஆய்வின் தன்மையைப் புரிந்துகொள்வது மாணவர்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.

2.     ஆய்வு (Research): பொருள் மற்றும் வரைவிலக்கணம்

ஆய்வு என்பது மனித அறிவின் வளர்ச்சிக்கான திட்டமிட்ட தேடல் ஆகும். 'ஆய்' எனும் வினைச்சொல்லில் இருந்து ஆய்வு எனும் பதம் மருவியது. ஒன்றை மீண்டும் மீண்டும் தேடுவதையே நாம் ஆராய்ச்சி என்கிறோம் (சித்திரபுத்திரன் மற்றும் சண்முகம் 2005). ஆராய்ச்சியானது, பல துல்லியமான விஞ்ஞானத் திறன்களை உள்ளடக்கியதொரு புலமைசார்ந்த விசாரணை என தங்கசாமி (2012) ஆய்வுக்கு விளக்கம் தருகிறார். பொதுவாக “Research” என்ற ஆங்கிலச் சொல் “Re” மற்றும் “Search” என்ற இரண்டு சொற்களின் இணைப்பாக விளக்கப்படுகிறது. “Re” என்பது மீண்டும் என்றும், “Search” என்பது தேடுதல் என்றும் பொருள் தருகிறது. எனவே, ஆய்வு என்பது ஏற்கனவே அறியப்பட்ட விடயங்களை மீண்டும் ஆராய்ந்து, புதிய உண்மைகள் அல்லது ஆழமான புரிதல்களைத் தேடும் செயலாகக் கொள்ளப்படுகிறது. பல்வேறு அறிஞர்கள் ஆய்வைப் பல கோணங்களில் வரையறுத்துள்ளனர்.

  • Creswell (2012) ஆய்வை ஒரு தலைப்பு அல்லது பிரச்சினையைப் பற்றிய புரிதலை அதிகரிப்பதற்காக தரவுகளைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து விளக்கமளிக்கும் முறையான செயல்முறை என வரையறுக்கிறார்.
  • Kerlinger (1973) ஆய்வை நிகழ்வுகளுக்கிடையிலான தொடர்புகளை விளக்குவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அனுபவமூலமான மற்றும் விமர்சனப்பூர்வமான விசாரணை எனக் குறிப்பிடுகிறார்.
  • Best மற்றும் Kahn (2006) ஆய்வை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் பயன்படுத்தப்படும் முறையான செயன்முறையாகக் கருதுகின்றனர்.
  • McMillan மற்றும் Schumacher (2010) ஆய்வை தரவுகளைத் திட்டமிட்டு சேகரித்து, அவற்றைப் பகுப்பாய்வு செய்து, அர்த்தமுள்ள விளக்கங்களை வழங்கும் செயன்முறையாக வரையறுக்கின்றனர்.

மேற்கண்ட வரைவிலக்கணங்களிலிருந்து, ஆய்வு என்பது வெறும் தகவல் சேகரிப்பு அல்ல; மாறாக, உண்மைகளைத் தேடுதல், காரணங்களைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் புதிய அறிவை உருவாக்குதல் போன்ற நோக்கங்களைக் கொண்ட அறிவியல் செயல்முறை எனக் கருதப்படலாம்.

3.     ஆய்வின் தன்மை (Nature of Research)

ஆய்வின் தன்மை என்பது ஆய்வு எவ்வாறு செயல்படுகிறது, அதன் அடிப்படை இயல்புகள் என்ன, மற்றும் அது எந்த அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது. ஆய்வு பல முக்கியமான பண்புகளைக் கொண்டுள்ளது.

  • முறையான செயன்முறை (Systematic Process): ஆய்வு  என்பது தன்னிச்சையாகவோ அல்லது ஏனோதானோ என்றோ செய்யப்படுவதல்ல. இது ஒரு குறிப்பிட்ட விதிகள், படிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு கட்டமைக்கப்பட்ட செயன்முறையாகும். தரவு சேகரிப்பு முதல் முடிவுகளை அறிவிப்பது வரை அனைத்தும் ஒரு முறையான ஒழுங்குமுறையைப் பின்பற்றியே அமையும்.
  • தர்க்கரீதியானது (Logical): ஒவ்வொரு ஆய்வும் தர்க்கரீதியான (Logical) விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். தூண்டல் முறை (Inductive) அல்லது பகுத்தறிதல் முறை (Deductive) மூலம் சரியான காரண காரியத் தொடர்புகளுடன் (Cause and Effect) இதற்கான முடிவுகள் எட்டப்பட வேண்டும். இதில் நியாயமான காரணங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • ஆதார அடிப்படையிலானது (Empirical): ஆய்வின் முடிவுகள் வெறும் கற்பனையோ, அனுமானங்களோ அல்லது தனிநபரின் ஊகங்களோ அல்ல. அவை நிஜ உலக அவதானிப்புகள், தரவுகள் (Data) மற்றும் சோதனைகள் மூலம் பெறப்பட்ட உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்திருக்க வேண்டும்.
  • பகுப்பாய்வுத் தன்மை (Analytical): தரவுகளை வெறும் சேகரிப்பது மட்டும் போதாது; சேகரிக்கப்பட்ட தரவுகள் அனைத்தையும் ஆழமாகப் பகுப்பாய்வு செய்து, அவற்றிற்கு இடையே உள்ள தொடர்புகளைக் கண்டறிவது ஆய்வினது  முக்கிய தன்மையாகும். இதற்குப் புள்ளிவிவர முறைகளும், பகுப்பாய்வுக் கோட்பாடுகளும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
  • நடுநிலைத்தன்மை (Objectivity): ஒரு சிறந்த ஆய்வும்  எப்போதுமே, புறவயத்தன்மையுடனும்  நடுநிலையானதாகவும்  இருக்க வேண்டும். ஆய்வாளர்  தனது சொந்த விருப்பு வெறுப்புகள், சமய , அரசியல் அல்லது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இடம் தராமல், தரவுகள் காட்டும் உண்மையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொண்டிருக்க வேண்டும்
  • சுழற்சித் தன்மை (Cyclical): ஆய்வு  என்பது ஒரு பிரச்சினையில் தொடங்கி, அதற்கான தீர்வுடன் முடிவடைவது போலத் தோன்றினாலும், அந்தத் தீர்வு மற்றொரு புதிய கேள்விக்கோ அல்லது அடுத்தகட்ட ஆய்வுக்கோ வழிவகுக்கும். எனவே, இது ஒருபோதும் முடிவடையாத தொடர் சுழற்சியாகும்.
  • மீள்சரிபார்க்கத்தக்கது (Replicable) :ஒருவர் செய்த ஆய்வினை, அதே முறையைப் பயன்படுத்தி மற்றொருவர் வேறு ஒரு சூழலில் செய்யும் போதும் அதே போன்ற முடிவுகள் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆய்வு நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும், உலகளாவிய ஏற்புடையதாகவும் (Validity) கருதப்படும்.

4.     ஆய்வின் நோக்கங்கள் (Purposes of Research)

ஆய்வு பல்வேறு நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது. அவற்றுள் சில:

  • புதிய அறிவைக் கண்டறிதல்: புதிய உண்மைகள், புதிய கோட்பாடுகள் மற்றும் புதிய கருத்துக்களை உருவாக்குவது ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.
  • பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்: கல்வி, சமூக மற்றும் அறிவியல் துறைகளில் காணப்படும் சிக்கல்களுக்கு நடைமுறைத் தீர்வுகளை வழங்குதல்.
  • ஏற்கனவே உள்ள அறிவை விரிவுபடுத்துதல்: ஆய்வு புதிய அறிவை மட்டும் உருவாக்காமல், ஏற்கனவே உள்ள அறிவை மறுபரிசீலனை செய்து விரிவுபடுத்தவும் உதவுகிறது.
  • முன் ஆய்வுகளின் குறைபாடுகளை சரிசெய்தல்: முன்னைய ஆய்வுகளில் காணப்படும் இடைவெளிகள் மற்றும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை நிரப்புவது ஆய்வின் மற்றொரு நோக்கமாகும்.

5.     ஆய்வின் முக்கியத்துவம் (Importance of Research)

Creswell (2012) ஆய்வு முக்கியமானதாக இருப்பதற்கான மூன்று முக்கிய காரணங்களை முன்வைக்கிறார்.

  • அறிவுத்தளத்தை விரிவுபடுத்துதல்: ஒவ்வொரு ஆய்வும் அறிவுக் கட்டமைப்பில் புதிய பங்களிப்பை வழங்குகிறது.
  • நடைமுறைகளை மேம்படுத்துதல் : கல்வியாளர்கள் புதிய கற்பித்தல் முறைகள் மற்றும் கற்றல் அணுகுமுறைகளை உருவாக்க ஆய்வு முடிவுகளைப் பயன்படுத்துகின்றனர்.
  • கொள்கை முடிவுகளுக்கு ஆதாரம் வழங்குதல்: கல்விக் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடைமுறைகள் ஆய்வு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

6.     கல்வி ஆய்வு (Educational Research)

கல்வி தொடர்பான பிரச்சினைகள், கற்றல்–கற்பித்தல் செயல்முறைகள், மாணவர் நடத்தை, கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்விக் கொள்கைகளை ஆராய்வதற்காக மேற்கொள்ளப்படும் முறையான மற்றும் அறிவியல் விசாரணையே கல்வி ஆய்வு ஆகும்.

  • Creswell (2012) கல்வி ஆய்வை கல்விசார் பிரச்சினைகளை ஆராய்ந்து புரிதலை விரிவுபடுத்தும் செயல்முறையாகக் குறிப்பிடுகிறார்.
  • Gay, Mills மற்றும் Airasian (2012) கல்வி ஆய்வை கல்வி நிகழ்வுகளை விளக்கவும், புரிந்துகொள்ளவும் மற்றும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் முறையான விசாரணை என விளக்குகின்றனர்.

இந்தவகையில், கல்விப்புலத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் (Problems),  எழுவினக்கள் (Issues) தொடர்பாக கவனம் செலுத்தி அவை தொடர்பாக மேலதிக விளக்கங்களைப் பெரும் பொருட்டு மேற்கொள்ளப்படும் சகலவிதமான ஆய்வுகளும் கல்விசார் ஆய்வுகள் எனப்படும். 

கல்வியியலில் பல்வேறு கிளைத்துறைகள் காணப்படுகின்றன. இவற்றுள்கல்வி உளவியல்,        கல்வி சமூகவியல்  கல்வி முகாமைத்துவம்ஆசிரியர்கல்வி, கல்விசார்  வழிகாட்டலும் ஆலோசனை கூறலும், தொலைக்கல்வி   கல்வியின் அடிப்படைகள் , முன் பிள்ளைப் பருவக் கல்வி          ஆரம்பக் கல்வி, விஞ்ஞானக் கல்வி, கல்விசார் கணிப்பெட்டும் மதிப்பீடும்   கலைத்திட்டமும் போதனையும்   ஒப்பீட்டுக் கல்விகல்வியில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்,      கல்வித் தொழினுட்பம், கல்வியில் பால்நிலை , கல்வி சார் நிருவாகம்         விசேட தேவைகள் கல்வி,          தொழில்சார் கல்வி என்பன அவற்றுள் சிலவாகும்.  

இங்கு குறிப்பிட்ட கல்வியியல் கிளைத்துறையில் இருந்து காலத்தால் முனைப்பு பெறும் பிரச்சினைகள், எழுவினாக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்ப்படும் ஆய்வுகளை கல்வியியல் ஆய்வுகள் எனலாம். இவ்வாய்வுகள்மாணவர் கற்றல், மாணவர் நடத்தைகள், வகுப்பறை இயக்கச் செயற்பாடுகள், ஆசிரியர் கற்பித்தல் செயற்பாடுகள், ஆசிரியர் திறன்கள் மற்றும் தேர்ச்சிகள், ஆசிரியர் பயிற்சி, கலைத்திட்டத் திட்டமிடல், கலைத்திட்ட விருத்தி, கலைத்திட்ட அமுலாக்கம், பாடசாலை முகாமைத்துவம்அதிபர் தலைமைத்துவம் என கல்வியுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய இன்னோரன்ன கல்வியுடன் சார்ந்ததாக மேற்கொள்ளப்படுவனவாக காணப்படலாம். மேலும், கல்விசார் அறிவு, கற்றல்-கற்பித்தல் செயன்முறைகளின் முன்னேற்றம், அதற்குத் தேவையான கருவிகள், கற்றல்-கற்பித்தல் முறைகளைத் விருத்தி செய்தல் போன்றவற்றினை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் விசாரணைத் துறையே கல்விசார் ஆய்வு எனவும்  கல்வியியல் ஆய்வுகளுக்கு விளக்கம் தரப்படுகின்றது. 

7.     கல்வி ஆய்வின் நோக்கங்கள்

கல்வி ஆய்வு பின்வரும் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது:

  • கற்றல்–கற்பித்தல் முறைகளை மேம்படுத்துதல்
  • கல்விசார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்
  • பாடத்திட்டங்களை மேம்படுத்துதல்
  • கல்விக் கொள்கை முடிவுகளுக்கான ஆதாரங்களை வழங்குதல்
  • கல்வித் தரத்தை உயர்த்துதல்

8.     கல்வி ஆய்வின் முக்கியத்துவம்

கல்வி ஆய்வு என்பது வெறும் கல்வித் தேவையாக மட்டுமல்ல; அது சமூகத்தின் எதிர்கால வளர்ச்சியை வழிநடத்தும் கருவியாகவும் அமைகிறது. கல்வித் தரத்தை உயர்த்தவும், கற்பித்தல்–கற்றல் நடைமுறைகளை மேம்படுத்தவும், ஆதாரபூர்வமான முடிவுகளை எடுக்கவும் இது உதவுகிறது. குறிப்பாக  உயர்கல்வி மாணவர்களுக்கு கல்வி ஆய்வு பற்றிய ஆழமான புரிதல், தரமான ஆய்வுகளை முன்னெடுக்கவும், கல்வித் துறைக்கு புதிய அறிவைப் பங்களிக்கவும் உதவும்.

9.     ஆய்வை வடிவமைத்து முன்னெடுப்பதற்குத் தேவையான திறன்கள் (Skills Needed to Design and Conduct Research)

ஆய்வுச் செயல்முறையின் படிகளைப் புரிந்துகொள்வது மட்டும் ஒரு நல்ல ஆய்வாளராக மாறுவதற்கு போதுமானதல்ல. ஆய்வை வெற்றிகரமாகத் திட்டமிடவும் முன்னெடுக்கவும் குறிப்பிட்ட சில அறிவுசார் மற்றும் செயன்முறைத் திறன்களும் அவசியமாகின்றன. Creswell (2012) ஆய்வாளர்கள் தங்களிடம் ஏற்கனவே உள்ள சில இயல்பான திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்.

  • புதிர்களைத் தீர்க்கும் திறன் (Solving Puzzles); ஆய்வு என்பது ஒரு வகையில் புதிர்களைத் தீர்க்கும் செயல்முறையை ஒத்ததாகும். ஒரு ஆய்வாளர் ஆய்வுப் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது அதன் காரணங்கள், தொடர்புகள் மற்றும் சாத்தியமான விளக்கங்களைத் தேடுகிறார். இதனால் ஆய்வு வெறும் தகவல் சேகரிப்பாக இல்லாமல், சிந்தனை மற்றும் பகுப்பாய்வு சார்ந்த செயலாக மாறுகிறது. உதாரணமாக, மாணவர்களின் கற்றல் சாதனை ஏன் குறைகிறது என்ற கேள்வி எழும்போது, அதற்குப் பின்னால் உள்ள பல காரணிகளை  கற்பித்தல் முறை, குடும்பச் சூழல், மாணவர் உந்துதல், அல்லது வளங்களின் பற்றாக்குறை போன்றவற்றை  ஆய்வாளர் ஆராய வேண்டியிருக்கும். இவ்வாறான சிந்தனைத் திறன் ஒரு ஆய்வாளருக்கு இன்றியமையாததாகும்.
  •  கவனத்தை நீண்ட நேரம் நிலைநிறுத்தும் திறன் (Lengthening Your Attention Span): ஆய்வு என்பது குறுகிய காலத்தில் நிறைவடையும் செயற்பாடு அல்ல. ஒரு ஆய்வாளர் நீண்ட காலம் ஒரே தலைப்பில் கவனம் செலுத்தி செயல்பட வேண்டியிருக்கும். ஆய்வுப் பிரச்சினையை அடையாளம் காணுதல் முதல் இறுதி அறிக்கை எழுதுதல் வரை பல கட்டங்கள் நேரத்தையும் பொறுமையையும் கோருகின்றன. Creswell (2012) ஆய்வு தொடர்ச்சியான முயற்சி, கவனம் மற்றும் பொறுமையைத் தேவைப்படுத்தும் செயல்முறையாகக் கருதுகிறார். ஆய்வாளர் தொடர்ந்து வாசித்தல், தரவு பகுப்பாய்வு செய்தல், மீளாய்வு செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கும். எனவே நீண்டகால கவன நிலைத்தன்மை ஆய்வில் முக்கியமான திறனாகும்.
  • நூலக வளங்களைப் பயன்படுத்தும் திறன் (Learning to Use Library Resources): தரமான ஆய்வின் அடித்தளம், தரமான இலக்கிய மீளாய்வாகும். அதற்காக ஆய்வாளர் பல்வேறு நூலக வளங்களையும் மின்னணு தரவுத்தளங்களையும் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக, ஆய்வாளர்கள் பின்வரும் வளங்களைப் பயன்படுத்துகின்றனர்:

    • நூல்கள்
    • ஆய்விதழ்கள்
    • மின்னணு தரவுத்தளங்கள்
    • முனைவர் மற்றும் முதுநிலை ஆய்வேடுகள்
    • Google Scholar, ERIC, Scopus போன்ற தரவுத்தளங்கள்

தகவல்களைத் தேடுதல், தேர்வு செய்தல், அவற்றின் தரத்தை மதிப்பீடு செய்தல், மற்றும் பொருத்தமான ஆதாரங்களைப் பயன்படுத்துதல் ஆகிய திறன்கள் ஆய்வில் மிகவும் முக்கியமானவை.

  • எழுதுதல், திருத்துதல் மற்றும் மீண்டும் எழுதுதல் (Writing, Editing, and More Writing): ஆய்வின் இறுதி விளைவு ஒரு ஆய்வு அறிக்கையாகும். ஒரு நல்ல ஆய்வு மேற்கொள்ளப்பட்டாலும், அதனைத் தெளிவாக எழுத முடியாவிட்டால் அதன் பெறுமதி குறையக்கூடும்.

ஆய்வு எழுதுதல் என்பது ஒரே தடவையில் நிறைவடையும் செயல் அல்ல. பொதுவாக ஆய்வாளர்:

    • ஆரம்ப வரைவை எழுதுகிறார்
    • திருத்துகிறார்
    • மீள்பார்க்கிறார்
    • மொழிநடை மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறார்
    • மீண்டும் எழுதுகிறார்

என்ற செயல்முறைகளில் ஈடுபடுகிறார்.

Creswell (2012) ஆய்வு எழுதுதல் தொடர்ச்சியான மேம்படுத்தல் செயல்முறையாகும் எனக் குறிப்பிடுகிறார். தெளிவான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் கல்விசார் மொழிநடையுடன் எழுதும் திறன் ஒரு திறமையான ஆய்வாளரின் முக்கிய பண்பாகும்.

ஆய்வை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஆய்வு முறைகள் பற்றிய அறிவு மட்டும் போதாது. விமர்சன சிந்தனை, பொறுமை, தகவல் தேடல் திறன் மற்றும் எழுதும் திறன் ஆகியவை ஆய்வாளரின் தனிப்பட்ட திறன்களாக வளர்த்துக்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக M.Ed. மாணவர்கள் இத்திறன்களை மேம்படுத்திக் கொள்வது, தரமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கும்.

 

 கல்விசார் ஆய்வுச் செயன்முறை 

ஆய்வு என்பது சீரற்ற அல்லது தற்செயலாக நடைபெறும் செயலாக அல்ல; மாறாக, திட்டமிடப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பல படிநிலைகளை உள்ளடக்கிய அறிவியல் செயல்முறையாகும். ஒரு ஆய்வாளர் ஆய்வைத் தொடங்கும் தருணத்திலிருந்து ஆய்வு அறிக்கையை வெளியிடும் வரை பல கட்டங்களின் வழியாக பயணிக்கிறார். இந்தப் பயணத்தில் ஒவ்வொரு கட்டமும் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டுள்ளது. Creswell (2012) ஆய்வுச் செயல்முறையை ஆறு முக்கிய படிகளாக வகைப்படுத்துகிறார். இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட படிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகவும், ஒரு படியின் விளைவுகள் அடுத்த படிக்கான அடிப்படையாகவும் அமைகின்றன. அவையாவன:

  1. ஆய்வுப் பிரச்சினையை இனங்காணுதல் (Identifying a research problem)
  2. சார்பிலக்கிய மீளாய்வு செய்தல் (Reviewing the literature)
  3. ஆய்வு நோக்கங்களை குறிப்பிடுதல் (Specifying a purpose for research)
  4. தரவுகளை சேகரித்தல் (Collecting data)
  5. தரவுகளை பகுப்பாய்வு செய்து அவற்றுக்கு விளக்கமளித்தல் (Data analyzing and interpreting)
  6. ஆய்வினை அறிக்கைப்படுத்தலும் மதிப்பீடு செய்தலும் (Reporting and evaluating research)

1. ஆய்வுப் பிரச்சினையை இனங்காணுதல் (Identifying a Research Problem)

ஆய்வின் ஆரம்பப் படியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய பிரச்சினை அல்லது விடயத்தைத் தெளிவாக அடையாளம் காணுதல் கருதப்படுகிறது. எந்த ஆய்வும் ஒரு பிரச்சினை அல்லது ஆர்வமூட்டும் கேள்வியிலிருந்து தொடங்குகிறது. கல்வி சூழலில், கற்றல் குறைபாடுகள், கற்பித்தல் முறைகளின் செயல்திறன், மாணவர் நடத்தை, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு அல்லது கல்விக் கொள்கைகள் போன்ற பல்வேறு துறைகள் ஆய்வுப் பிரச்சினைகளாக மாறக்கூடும்.

Creswell (2012) ஆய்வுப் பிரச்சினையை அடையாளம் காணும்போது ஆய்வாளர் ஆய்வு செய்யப்படும் பிரச்சினையைத் தெளிவாக வரையறுப்பதுடன், அது ஏன் முக்கியமானது என்பதற்கான நியாயத்தையும் முன்வைக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். ஒரு சிறந்த  ஆய்வுப் பிரச்சினை பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்:

  • தெளிவாகவும் குறிப்பிட்டதாகவும் இருக்க வேண்டும்
  • ஆய்வு செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்
  • சமூக அல்லது கல்வி முக்கியத்துவம் உடையதாக இருக்க வேண்டும்
  • புதிய அறிவை உருவாக்கக்கூடியதாக இருக்க வேண்டும்

ஆய்வுப் பிரச்சினை தெளிவாக இல்லாவிட்டால், முழு ஆய்வின் திசை குழப்பமடைய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த நிலை ஆய்வின் அடித்தளமாகக் கருதப்படுகிறது.

 2. சார்பிலக்கிய    மீளாய்வு செய்தல் (Reviewing the Literature)

ஆய்வு பிரச்சினையை அடையாளம் கண்ட பிறகு, அதனுடன் தொடர்புடைய முன்ஆய்வுகளைப் பரிசீலிப்பது அடுத்த முக்கிய கட்டமாகும். இது இலக்கிய மீளாய்வு என அழைக்கப்படுகிறது.

இலக்கிய மீளாய்வு என்பது ஆய்வுத் தலைப்புடன் தொடர்புடைய நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், கருத்தரங்க ஆய்வுகள், ஆய்வேடுகள், கோட்பாட்டு ஆவணங்கள் மற்றும் மின்னணு தரவுத்தளங்களில் காணப்படும் தகவல்களைத் தேடி, தேர்ந்தெடுத்து, விமர்சன ரீதியாக ஆய்வு செய்வதாகும்.

Creswell (2012) ஆய்வாளர் முன்னர் என்ன கண்டறியப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், அதன்மூலம் ஆய்வின் தேவையை நியாயப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். இலக்கிய மீளாய்வு பல நோக்கங்களை நிறைவேற்றுகிறது:

  • அறிவுத் தளத்தை உருவாக்குகிறது : ஆய்வு செய்யப்படும் தலைப்பில் ஏற்கனவே உள்ள அறிவை புரிந்துகொள்ள உதவுகிறது.
  • ஆய்வு இடைவெளிகளை கண்டறிகிறது: முன்னைய ஆய்வுகளில் பதிலளிக்கப்படாத கேள்விகளை வெளிக்கொணருகிறது.
  • கோட்பாட்டு அடித்தளத்தை வழங்குகிறது: ஆய்வை வழிநடத்தும் கோட்பாடுகளை அடையாளம் காண உதவுகிறது.
  • ஆய்வு முறைகளை அறிய உதவுகிறது: முன்னர் பயன்படுத்தப்பட்ட தரவுச் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு முறைகள் பற்றிய புரிதலை வழங்குகிறது.

ஒரு வலுவான இலக்கிய மீளாய்வு ஆய்வாளருக்கு ஆய்வின் தனித்துவத்தையும் அவசியத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது.

3. ஆய்வின் நோக்கத்தை வரையறுத்தல் (Specifying a Purpose for Research)

ஆய்வு பிரச்சினை அடையாளம் காணப்பட்டு இலக்கியங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர், ஆய்வின் நோக்கத்தைத் தெளிவாக வரையறுப்பது அவசியமாகிறது. ஆய்வின் நோக்கம் என்பது ஆய்வு எதை அடைய முயல்கிறது என்பதை விளக்கும் மையக் கூற்றாகும்.

Creswell (2012) ஆய்வின் நோக்கக் கூற்று முழு ஆய்வையும் வழிநடத்தும் மிக முக்கியமான கூறு எனக் குறிப்பிடுகிறார்.

இந்த நிலையில் ஆய்வாளர் பொதுவாக:

  • ஆய்வின் பிரதான நோக்கத்தை உருவாக்குகிறார்
  • ஆய்வு வினாக்களை வடிவமைக்கிறார்
  • தேவையானால் கருதுகோள்களை உருவாக்குகிறார்

4. தரவுகளைச் சேகரித்தல் (Collecting Data)

ஆய்வு வினாக்களுக்கு பதில் அளிக்கத் தேவையான தகவல்களைத் திரட்டுவது தரவுச் சேகரிப்பு நிலையாகும். ஆய்வின் தரம் பெரும்பாலும் இந்தக் கட்டத்தில் சேகரிக்கப்படும் தரவுகளின் தரத்தைப் பொறுத்துள்ளது.

இந்த நிலையில் ஆய்வாளர்:

  • ஆய்வு குடி யை அடையாளம் காண்கிறார்
  • மாதிரியைத் தேர்ந்தெடுக்கிறார்
  • அனுமதிகளைப் பெறுகிறார்
  • பொருத்தமான கருவிகளைப் பயன்படுத்துகிறார்
  • தரவுகளைத் திரட்டுகிறார்

தரவுச் சேகரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள்:

  • வினாக்கொத்து
  • நேர்காணல்
  • அவதானிப்பு
  • சோதனை
  • ஆவண பகுப்பாய்வு

Creswell (2012) துல்லியமான மற்றும் நம்பகமான தரவுகளைப் பெறுவது ஆய்வில் முக்கியமானதாகக் கருதுகிறார். கல்வி ஆய்வுகளில் நெறிமுறைச் சிந்தனைகளும் இந்த நிலையில் முக்கியம். குறிப்பாக, பங்கேற்பாளர்களின் அனுமதி, தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

5. தரவுகளை பகுப்பாய்வு செய்து விளக்குதல் (Analyzing and Interpreting Data)

தரவுகள் சேகரிக்கப்பட்ட பின்னர் அவற்றை பொருள்படுத்துவது அடுத்த கட்டமாகும். சேகரிக்கப்பட்ட தரவுகள் தாமாகவே அர்த்தத்தை உருவாக்குவதில்லை; அவற்றை ஒழுங்குபடுத்தி விளக்க வேண்டும்.

Creswell (2012) தரவு பகுப்பாய்வை “தரவுகளைப் பிரித்து மீண்டும் ஒன்றிணைத்து அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும் செயல்முறை” என விளக்குகிறார்.

தொகைசார் ஆய்வுகளில்:

  • சராசரி
  • சதவீதம்
  • தரநிலை விலகல்
  • தொடர்பு
  • பின்னடைவு பகுப்பாய்வு

போன்ற புள்ளிவிபர முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

பண்புசார் ஆய்வுகளில்:

  • குறியீடாக்கம் (coding)
  • வகைப்படுத்தல்
  • கருப்பொருள் உருவாக்கம் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் ஆய்வாளர் “என்ன நடந்தது?” என்பதைக் கூறுவதோடு மட்டுமல்லாமல் “ஏன் இவ்வாறு நிகழ்ந்தது?” என்பதையும் விளக்க வேண்டும்.

6. ஆய்வை அறிக்கையிடல் மற்றும் மதிப்பீடு செய்தல் (Reporting and Evaluating Research)

ஆய்வின் இறுதி நிலை, ஆய்வு முடிவுகளை ஒழுங்கமைக்கப்பட்ட அறிக்கையாக வழங்குவதாகும். ஆய்வு முடிவுகள் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பிற பயனாளர்களுடன் பகிரப்படுகின்றன.

Creswell (2012) ஆய்வு அறிக்கை வாசகர்களை மதிக்கும் வகையிலும் பாகுபாடற்ற மொழியுடனும் எழுதப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்.

ஒரு ஆய்வு அறிக்கையில் பொதுவாக இடம்பெறும் பகுதிகள்:

  • அறிமுகம்
  • இலக்கிய மீளாய்வு
  • ஆய்வு முறை
  • முடிவுகள்
  • கலந்துரையாடல்
  • முடிவுகள் மற்றும் பரிந்துரைகள்

இந்த நிலையில் ஆய்வு தரம், நம்பகத்தன்மை மற்றும் நடைமுறைப் பயன்பாடு ஆகியவை மதிப்பிடப்படுகின்றன.

ஆய்வுச் செயல்முறையின் ஆறு படிகளும் தனித்தனியாகத் தோன்றினாலும், அவை ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. ஒவ்வொரு கட்டமும் அடுத்த கட்டத்தின் தரத்தை நிர்ணயிக்கிறது. எனவே, M.Ed. மாணவர்கள் ஆய்வின் இந்த கட்டங்களை ஆழமாகப் புரிந்துகொண்டு முறையாகப் பயன்படுத்துவது தரமான ஆய்வை உருவாக்குவதற்கான அடிப்படைத் தேவையாகும்.

11. தொகைசார் (Quantitative) மற்றும் பண்புசார் (Qualitative) ஆய்வுகளின் பண்புகள்

நவீன கல்வி ஆய்வுகளில் தொகைசார் மற்றும் பண்புசார் ஆய்வுகள் இரண்டும் முக்கியமான ஆய்வு அணுகுமுறைகளாகக் கருதப்படுகின்றன. ஆய்வாளர் எந்த அணுகுமுறையைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது ஆய்வுப் பிரச்சினையின் தன்மை, ஆய்வு வினாக்கள், தரவின் வகை, மற்றும் ஆய்வின் நோக்கம் ஆகியவற்றைப் பொறுத்துள்ளது. Creswell (2012) ஆய்வு செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் தொகைசார் மற்றும் பண்புசார் ஆய்வுகள் வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளன எனக் குறிப்பிடுகிறார்.

இரு அணுகுமுறைகளும் அறிவை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தாலும், அவற்றின் தத்துவ அடிப்படை, தரவு சேகரிப்பு முறை, பகுப்பாய்வு முறை, மற்றும் முடிவுகளை விளக்கும் விதம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன.

தொகைசார் ஆய்வு (Quantitative Research)

தொகைசார் ஆய்வு என்பது எண் அடிப்படையிலான தரவுகளைப் பயன்படுத்தி நிகழ்வுகள், மாறிகள் மற்றும் அவற்றுக்கிடையிலான தொடர்புகளை ஆய்வு செய்யும் அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறையின் முக்கிய நோக்கம் அளவிடுதல், ஒப்பிடுதல், விளக்குதல் மற்றும் முன்கணித்தல் ஆகும்.

Creswell (2012) தொகைசார் ஆய்வில் ஆராய்ச்சியாளர் மாறிகளுக்கிடையிலான தொடர்புகளை ஆய்வு செய்வதோ அல்லது பொதுவான போக்குகளை விவரிப்பதோடு ஈடுபடுகிறார் எனக் குறிப்பிடுகிறார்.

தொகைசார் ஆய்வின் முக்கிய பண்புகள்

1. குறிப்பிட்ட மற்றும் அளவிடக்கூடிய ஆய்வுப் பிரச்சினை

தொகைசார் ஆய்வில் பிரச்சினைகள் பொதுவாக தெளிவாகவும் குறிப்பிட்டதாகவும் இருக்கும். ஆய்வாளர் எந்த மாறிகளை ஆய்வு செய்யப் போகிறார் என்பதையும் அவற்றின் தொடர்புகளையும் முன்கூட்டியே தீர்மானிக்கிறார்.

2. இலக்கிய மீளாய்வின் முக்கிய பங்கு

தொகைசார் ஆய்வுகளில் இலக்கிய மீளாய்வு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. ஆய்வாளர் ஏற்கனவே உள்ள ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு:

  • ஆய்வுப் பிரச்சினையை நியாயப்படுத்துகிறார்
  • கோட்பாட்டு அடித்தளத்தை உருவாக்குகிறார்
  • ஆய்வு வினாக்கள் மற்றும் கருதுகோள்களை உருவாக்குகிறார்

Creswell (2012) தொகைசார் ஆய்வில் இலக்கியம் ஆய்வின் திசையை நிர்ணயிக்கிறது எனக் குறிப்பிடுகிறார்.

3. தெளிவான நோக்கக் கூற்று மற்றும் கருதுகோள்கள்

தொகைசார் ஆய்வில் ஆய்வின் நோக்கமும் ஆய்வு வினாக்களும் மிகவும் குறிப்பிட்டதாக இருக்கும்.

4. பெரிய மாதிரி மற்றும் எண் தரவுகள்

தொகைசார் ஆய்வுகள் பொதுவாக அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களை உள்ளடக்குகின்றன.

Creswell (2012) தொகைசார் ஆய்வுகள் முன்கூட்டியே அமைக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையிலானவர்களிடமிருந்து எண் தரவுகளைப் பெறுகின்றன எனக் கூறுகிறார்.

பயன்படுத்தப்படும் கருவிகள்:

  • வினாக்கொத்து 
  • தரப்படுத்தப்பட்ட சோதனைகள்
  • அளவுகோல்கள்
  • கட்டமைக்கப்பட்ட அவதானிப்புகள்

5. புள்ளிவிபர பகுப்பாய்வு

தொகைசார் ஆய்வில் தரவுகள் கணித மற்றும் புள்ளிவிபர முறைகளின் மூலம் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

பொதுவாகப் பயன்படுத்தப்படும் பகுப்பாய்வுகள்:

  • சராசரி
  • தரநிலை விலகல்
  • t சோதனை
  • ANOVA
  • தொடர்பு
  • பின்னடைவு பகுப்பாய்வு

Creswell (2012) புள்ளிவிபரங்கள் மாறிகளுக்கிடையிலான தொடர்புகளை விளக்க பயன்படுத்தப்படுகின்றன எனக் குறிப்பிடுகிறார்.

6. பொருள்சார்ந்த (Objective) அணுகுமுறை

தொகைசார் ஆய்வில் ஆராய்ச்சியாளர் தனிப்பட்ட கருத்துக்களைப் பிரித்து வைக்க முயல்கிறார். ஆய்வு அதிகபட்சமாக நடுநிலையானதாக இருக்க வேண்டும்.

ஆராய்ச்சியாளரின் நம்பிக்கைகள் அல்லது அனுபவங்கள் ஆய்வு முடிவுகளை பாதிக்காமல் இருப்பது முக்கியமாகக் கருதப்படுகிறது.

பண்புசார் ஆய்வு (Qualitative Research)

பண்புசார் ஆய்வு என்பது ஒரு நிகழ்வு, அனுபவம் அல்லது சமூகச் செயல்முறையை ஆழமாகப் புரிந்துகொள்ள முயலும் ஆய்வு அணுகுமுறையாகும். இது மனித அனுபவங்கள், உணர்வுகள், கருத்துக்கள் மற்றும் அர்த்தங்களை மையப்படுத்துகிறது.

Creswell (2012) பண்புசார் ஆய்வு ஒரு மைய நிகழ்வை (central phenomenon) ஆழமாக ஆராய்ந்து புரிந்துகொள்ள பயன்படுகிறது எனக் குறிப்பிடுகிறார்.

Creswell (2012) பண்புசார் ஆய்வு ஒரு மைய நிகழ்வை (central phenomenon) ஆழமாக ஆராய்ந்து புரிந்துகொள்ள பயன்படுகிறது எனக் குறிப்பிடுகிறார்.

பண்புசார் ஆய்வின் முக்கிய பண்புகள்

1. ஆராய்வு மற்றும் ஆழமான புரிதல்

பண்புசார் ஆய்வு, “என்ன?”, “எப்படி?”, “ஏன்?” போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது.

2. இலக்கிய மீளாய்வின் வரையறுக்கப்பட்ட பங்கு

தொகைசார் ஆய்வைப் போல இல்லாமல், பண்புசார் ஆய்வில் இலக்கியம் ஆய்வின் முழுத் திசையை நிர்ணயிப்பதில்லை.

Creswell (2012) ஆய்வாளர் பங்கேற்பாளர்களிடமிருந்து கற்றுக்கொள்வதே முக்கியம் எனக் கூறுகிறார்.

ஆகவே இலக்கியம்:

  • பிரச்சினையின் முக்கியத்துவத்தை நியாயப்படுத்துகிறது
  • பின்னணி வழங்குகிறது

ஆனால் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயிக்காது.

3. திறந்த மற்றும் பரந்த ஆய்வு வினாக்கள்

பண்புசார் ஆய்வில் பொதுவாக:

  • எவ்வாறு?”
  • என்ன அனுபவம்?”
  • எவ்வாறு அர்த்தப்படுத்துகின்றனர்?”

போன்ற திறந்த வினாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவை பங்கேற்பாளர்களுக்கு தங்கள் அனுபவங்களை சுதந்திரமாக பகிர அனுமதிக்கின்றன.

4. சிறிய மாதிரி மற்றும் வார்த்தைத் தரவுகள்

பண்புசார் ஆய்வில் குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

தரவுகள்:

  • நேர்காணல்கள்
  • அவதானிப்புகள்
  • ஆவணங்கள்
  • படங்கள்
  • தினக்குறிப்புகள்

மூலம் சேகரிக்கப்படுகின்றன.

5. கருப்பொருள் அடிப்படையிலான பகுப்பாய்வு

பண்புசார் தரவுகள் புள்ளிவிபர முறைகளால் பகுப்பாய்வு செய்யப்படுவதில்லை.

ஆய்வாளர்:

  • குறியீடாக்கம்
  • வகைப்படுத்தல்
  • கருப்பொருள் உருவாக்கம்

மூலம் தரவுகளின் அர்த்தத்தை உருவாக்குகிறார்.

6. ஆராய்ச்சியாளரின் பிரதிபலிப்பு (Reflexivity)

பண்புசார் ஆய்வில் ஆராய்ச்சியாளர் முற்றிலும் நடுநிலையானவர் அல்ல. அவரது அனுபவங்கள், பார்வைகள், மற்றும் நிலைப்பாடுகள் ஆய்வைத் தாக்கலாம்.

Creswell (2012) இதனை reflexivity என விளக்குகிறார்.

 

தொகைசார் மற்றும் பண்புசார் ஆய்வுகளின் ஒப்பீடு

அம்சம்

தொகைசார் ஆய்வு

பண்புசார் ஆய்வு

ஆய்வின் நோக்கம்

விளக்குதல், அளவிடுதல்

புரிந்துகொள்ளுதல், ஆராய்தல்

தரவின் வகை

எண் தரவுகள்

வார்த்தைகள், அனுபவங்கள்

மாதிரி அளவு

பெரியது

சிறியது

தரவுச் சேகரிப்பு

கட்டமைக்கப்பட்ட கருவிகள்

திறந்த கருவிகள்

பகுப்பாய்வு

புள்ளிவிபரம்

கருப்பொருள் பகுப்பாய்வு

ஆராய்ச்சியாளர் பங்கு

பொருள்சார்ந்த

பங்கேற்பு/பிரதிபலிப்பு

தொகைசார் மற்றும் பண்புசார் ஆய்வுகள் இரண்டும் கல்வி ஆய்வுகளில் முக்கிய பங்களிப்புகளை வழங்குகின்றன. தொகைசார் ஆய்வு நிகழ்வுகளை அளவிடவும், மாறிகளுக்கிடையிலான தொடர்புகளை விளக்கவும் உதவுகிறது. மறுபுறம், பண்புசார் ஆய்வு மனித அனுபவங்களையும் நிகழ்வுகளின் ஆழமான அர்த்தங்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது. ஆய்வாளர் தனது ஆய்வுப் பிரச்சினையின் தன்மைக்கு ஏற்ப பொருத்தமான அணுகுமுறையைத் தேர்வு செய்ய வேண்டும். சில சூழல்களில் இரு அணுகுமுறைகளையும் ஒருங்கிணைக்கும் கலப்பு ஆய்வு (Mixed Methods Research) அணுகுமுறையும் பயன்படுத்தப்படலாம்.

கலப்பு ஆய்வு அணுகுமுறை (Mixed Methods Research Approach)

தொகைசார் மற்றும் பண்புசார் ஆய்வுகள் இரண்டும் தனித்தனியாக கல்வி ஆய்வுகளில் முக்கிய பங்களிப்புகளை வழங்குகின்றன. எனினும், சில ஆய்வுப் பிரச்சினைகள் ஒரே அணுகுமுறையின் மூலம் முழுமையாக விளக்கப்பட முடியாத அளவிற்கு சிக்கலானவையாக இருக்கலாம். இவ்வாறான சூழல்களில் தொகைசார் மற்றும் பண்புசார் அணுகுமுறைகளின் பலங்களை ஒருங்கிணைக்கும் கலப்பு ஆய்வு அணுகுமுறை (Mixed Methods Research) பயன்படுத்தப்படுகிறது.

கலப்பு ஆய்வு என்பது தொகைசார் மற்றும் பண்புசார் தரவுகளை ஒரே ஆய்வில் அல்லது தொடர்ச்சியான ஆய்வுகளின் வரிசையில் சேகரித்து, பகுப்பாய்வு செய்து, ஒருங்கிணைத்து ஆய்வுப் பிரச்சினையை விரிவாகப் புரிந்துகொள்ளும் ஆய்வு அணுகுமுறையாகும் (Creswell, 2012).

இந்த அணுகுமுறையின் அடிப்படை கருத்து, ஒரே தரவு வகை வழங்கும் விளக்கத்தை விட இரண்டு வகையான தரவுகளின் ஒருங்கிணைப்பு ஆய்வுப் பிரச்சினையை மேலும் தெளிவாகவும் ஆழமாகவும் விளக்க உதவுகிறது என்பதாகும்.

கலப்பு ஆய்வின் முக்கிய பண்புகள்

1. இருவகை தரவுகளின் பயன்பாடு

கலப்பு ஆய்வில் எண் அடிப்படையிலான தரவுகளும் (quantitative) வார்த்தை அல்லது அனுபவ அடிப்படையிலான தரவுகளும் (qualitative) பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணம்:

  • வினாக்கொத்து → தொகைசார் தரவு
  • நேர்காணல் → பண்புசார் தரவு

இவ்விரண்டும் சேர்ந்து ஆய்வு முடிவுகளை வலுப்படுத்துகின்றன.

2. பலதரப்பு புரிதல்

ஒரே பிரச்சினையை பல கோணங்களில் புரிந்துகொள்ள இந்த அணுகுமுறை உதவுகிறது. ஆய்வாளர் வெறும் புள்ளிவிபர முடிவுகளை மட்டுமன்றி, அந்த முடிவுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களையும் அனுபவங்களையும் புரிந்துகொள்ள முடிகிறது.

3. ஒரு முறையின் பலவீனத்தை மற்றொன்று நிரப்புதல்

தொகைசார் ஆய்வுகள் பெரிய மாதிரிகளைப் பயன்படுத்தினாலும், மனித அனுபவங்களின் ஆழத்தைப் பெற முடியாமல் போகலாம். பண்புசார் ஆய்வுகள் ஆழமான தகவல்களை வழங்கினாலும், அவற்றை பொதுமைப்படுத்துவது சிரமமாக இருக்கலாம்.

கலப்பு ஆய்வு இந்த இரு குறைபாடுகளையும் சமநிலைப்படுத்துகிறது.

4. தரவுகளின் உறுதிப்படுத்தல் (Triangulation)

ஒரே நிகழ்வை பல தரவு ஆதாரங்கள் அல்லது முறைகளின் மூலம் உறுதிப்படுத்தும் செயல்முறை Triangulation எனப்படும்.

உதாரணமாக:

  • வினாக்கொத்து முடிவுகள்
  • நேர்காணல் முடிவுகள்
  • அவதானிப்பு குறிப்புகள்

இவற்றை ஒப்பிட்டு ஒரே முடிவு கிடைத்தால் ஆய்வின் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது.

கலப்பு ஆய்வின் வடிவங்கள்

Creswell கலப்பு ஆய்வில் தரவுகளை சேகரிக்கும் வரிசை மற்றும் முக்கியத்துவம் தொடர்பாக சில வடிவங்களை சுட்டிக்காட்டுகிறார்.

1. ஒரேநேர (Concurrent) வடிவம்

தொகைசார் மற்றும் பண்புசார் தரவுகள் ஒரே நேரத்தில் சேகரிக்கப்படுகின்றன.

உதாரணம்:

ஒரு ஆய்வாளர் ஆசிரியர்களிடம் கேள்வித்தாளையும் வழங்கி அதே நேரத்தில் சில ஆசிரியர்களை நேர்காணலும் செய்யலாம்.

2. தொடர்ச்சியான (Sequential) வடிவம்

ஒரு தரவு வகை முதலில் சேகரிக்கப்பட்டு, அதன் முடிவுகளின் அடிப்படையில் மற்றொரு தரவு சேகரிக்கப்படுகிறது.

உதாரணம்:

முதலில் கேள்வித்தாள் நடத்தி பின்னர் அதன் முடிவுகளை விளக்க நேர்காணல் மேற்கொள்ளலாம்.

கல்வி ஆய்வில் கலப்பு ஆய்வின் பயன்பாடு

கல்வி ஆய்வுகளில் கலப்பு ஆய்வு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக:

  • கற்பித்தல் திறன் ஆய்வுகள்
  • தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆய்வுகள்
  • ஆசிரியர் நம்பிக்கைகள்
  • மாணவர் அனுபவங்கள்
  • கலைத்திட்ட மதிப்பீடு

போன்ற துறைகளில் இது மிகுந்த பயனளிக்கிறது.

கலப்பு ஆய்வு அணுகுமுறை என்பது தொகைசார் மற்றும் பண்புசார் ஆய்வுகளின் சிறந்த அம்சங்களை ஒருங்கிணைக்கும் வலுவான அணுகுமுறையாகும். சிக்கலான கல்விசார் பிரச்சினைகளை ஆழமாகவும் பரந்த அளவிலும் புரிந்துகொள்ள இது உதவுகிறது. குறிப்பாக M.Ed. மாணவர்கள் கல்வி நிகழ்வுகளை பல கோணங்களில் ஆராய விரும்பும் சூழல்களில், கலப்பு ஆய்வு அணுகுமுறை மிகவும் பயனுள்ள ஆய்வு வழிமுறையாக அமைகிறது.

முடிவுரை

ஆய்வு என்பது அறிவை உருவாக்குவதற்கான சாதாரண செயற்பாடு அல்ல; மாறாக, அது திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஆதாரபூர்வமான அறிவியல் செயல்முறையாகும். கல்வித்துறையில் புதிய அறிவுகளை உருவாக்கவும், நிலவும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவும், நடைமுறைகளை மேம்படுத்தவும், ஆதாரபூர்வமான தீர்மானங்களை எடுக்கவும் ஆய்வு முக்கிய பங்காற்றுகிறது. பல்வேறு அறிஞர்களின் வரைவிலக்கணங்கள் ஆய்வின் பல பரிமாணங்களை விளக்கினாலும், அவை அனைத்தும் அறிவைத் தேடுதல், உண்மைகளை கண்டறிதல் மற்றும் புதிய புரிதல்களை உருவாக்குதல் என்ற பொதுவான நோக்கத்தையே வலியுறுத்துகின்றன.

ஆய்வுச் செயல்முறையின் ஆறு படிகள் — ஆய்வுப் பிரச்சினையை இனங்காணுதல், இலக்கிய மீளாய்வு செய்தல், ஆய்வின் நோக்கத்தை வரையறுத்தல், தரவுகளைச் சேகரித்தல், தரவுகளை பகுப்பாய்வு செய்து விளக்குதல், மற்றும் ஆய்வை அறிக்கையிடல் — ஆகியவை தரமான ஆய்வின் அடிப்படை கூறுகளாக அமைகின்றன. இந்தப் படிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; ஒவ்வொரு படியும் அடுத்த கட்டத்தின் தரத்தையும் திசையையும் நிர்ணயிக்கின்றது. எனவே ஆய்வாளர்கள் ஒவ்வொரு கட்டத்தையும் ஆழமாகப் புரிந்துகொண்டு முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

மேலும், தொகைசார் மற்றும் பண்புசார் ஆய்வு அணுகுமுறைகள் கல்வி ஆய்வுகளில் தனித்துவமான பங்களிப்புகளை வழங்குகின்றன. தொகைசார் ஆய்வு நிகழ்வுகளை அளவிட்டு, மாறிகளுக்கிடையிலான தொடர்புகளை விளக்க உதவுகின்றது; பண்புசார் ஆய்வு மனித அனுபவங்கள், அர்த்தங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றது. அதேவேளை, சில சிக்கலான கல்விசார் பிரச்சினைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள இந்த இரண்டு அணுகுமுறைகளின் பலங்களையும் ஒருங்கிணைக்கும் கலப்பு ஆய்வு அணுகுமுறை அதிக பயனளிக்கிறது.

இன்றைய கல்விச் சூழலில் ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் மற்றும் முதுநிலை மாணவர்கள் ஆய்வை ஒரு கல்வித் தேவையாக மட்டும் அல்லாமல், தொழில்முறை மேம்பாடு மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கான கருவியாகப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக M.Ed. மாணவர்கள் ஆய்வு செயல்முறைகள் மற்றும் ஆய்வு அணுகுமுறைகள் பற்றிய ஆழமான புரிதலைப் பெற்றிருப்பது, தரமான ஆய்வுகளை முன்னெடுக்கவும், கல்வித் துறைக்கு பொருத்தமான புதிய அறிவைப் பங்களிக்கவும் உதவும். ஆய்வு என்பது கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவது மட்டுமல்ல; மாறாக, புதிய சிந்தனைகள், புதிய புரிதல்கள் மற்றும் சமூக மாற்றங்களுக்கான பாதைகளை உருவாக்கும் தொடர்ச்சியான அறிவுப் பயணமாகும்.

உசாத்துணைகள் 

Best, J. W., & Kahn, J. V. (2006). Research in education (10th ed.). Boston, MA: Pearson.

Creswell, J. W. (2012). Educational research: Planning, conducting, and evaluating quantitative and qualitative research (4th ed.). Boston, MA: Pearson.

Gay, L. R., Mills, G. E., & Airasian, P. (2012). Educational research: Competencies for analysis and applications (10th ed.). Boston, MA: Pearson.

Kerlinger, F. N. (1973). Foundations of behavioral research (2nd ed.). New York, NY: Holt, Rinehart & Winston.

McMillan, J. H., & Schumacher, S. (2010). Research in education: Evidence-based inquiry (7th ed.). Boston, MA: Pearson.

 

ஆக்கம்: பேராசிரியர். F .M.நவாஸ்தீன் 
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 
திகதி: 16.05.2026
நேரம்: இரவு 9 மணி 

ஆசிரியர் கல்வியில் ஆய்வு

ஆசிரியர் கல்வியில் ஆய்வு





அறிமுகம்

ஆசிரியர் கல்வியில் ஆய்வு  என்பது கற்பித்தல்–கற்றல் செயன் முறைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளவும், அவற்றை மேம்படுத்தவும் உதவும் ஒரு அறிவியல் வழிமுறை ஆகும். ஆசிரியர்கள் எவ்வாறு கற்பிக்கிறார்கள், மாணவர்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள், எந்தக் கற்பித்தல் அணுகுமுறைகள் சிறப்பாக செயற்படுகின்றன, தொழில்நுட்பம் மற்றும் உளவியல் கூறுகள் கற்றலை எவ்வாறு பாதிக்கின்றன என்பவற்றை முறையான ஆய்வுகளின் மூலம் கண்டறிதல் இதன் நோக்கம் ஆகும். முன் சேவை ஆசிரியர்கள்   (pre-service), சேவைக்கால  ஆசிரியர்கள்  (in-service), வாண்மை விருத்தி , வகுப்பறை நடைமுறைகள், கற்பித்தல் உத்திகள், மாணவர் ஈடுபாடு, மதிப்பீட்டு முறைகள், கல்வியில் உருவாகும் புதிய நுட்பங்கள் போன்றவை இத்துறையின் முக்கிய ஆய்வு திசைகளாகும்.இந்த கட்டுரையில் ஆசிரியர் கல்வியில் ஆய்வுகள் பற்றிய சில முக்கிய விடயங்கள் எடுத்து நோக்கப்படுகின்றன.

ஆசிரியர் கல்வி

ஆசிரியர் கல்வி என்பது, பாடசாலைகளிலும்  சமூகங்களிலும் தங்கள் பணிகளை திறம்படச் செய்வதற்குத் தேவையான அறிவு, திறன்கள், அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளுடன் வருங்கால மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை ஆயத்தப்படுத்துவதற்க்காக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஆகும். . இது ஒரு ஆசிரியரின் முழு வாழ்க்கையையும் உள்ளடக்கிய ஒரு தொடர்ச்சியான செயன் முறையாகும்.

ஆசிரியர் கல்வியின் முக்கிய கூறுகள்

ஆசிரியர் கல்வியின் வகைகள்

  • சேவைக்கு முந்தைய கல்விஇது வருங்கால ஆசிரியர்களுக்கு வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன் வழங்கப்படும் ஆரம்பப் பயிற்சியாகும். இது பொதுவாக ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் நிகழ்கிறது மற்றும் கற்பிப்பதற்கான முறையான தகுதி மற்றும் சான்றிதழைப் பெற வழிவகுக்கிறது
  • சேவைக்கால கல்வி /தொடர் வாண்மைத்துவ  மேம்பாடு (CPD): இது பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கான தொடர்ச்சியான கல்வி மற்றும் பயிற்சியைக் குறிக்கிறது. இது அவர்களின் திறன்கள், அறிவைப் புதுப்பித்தல் மற்றும் புதிய முறைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 ஆசிரியர் கல்வியில் ஆய்வு ஏன் முக்கியமானது?

கற்பித்தலில் முன்னேற்றத்தையும் வாண்மைத்  திறனையும் இயக்கும் இயந்திரம் ஆய்வு ஆகும். ஆய்வுகள் ஆசிரியர்  பிரச்சினைகளுக்கு சான்றுமிக்க தீர்வுகளை வழங்குகிறது.

ஆசிரியர் கல்வி தொடர்பான கொள்கை மற்றும் நடைமுறையைத் தீர்மானிக்க உதவுகிறது: ஆசிரியர் கல்வி தொடர்பான கலைத்திட்டம் பாடத்திட்டம், மதிப்பீடு மற்றும் ஆசிரியர் தரநிலைகள் குறித்து முடிவெடுப்பவர்களுக்குத் தரவை வழங்குகிறது.

மாணவர் அடைவுகளை  மேம்படுத்துகிறது: சிறந்த மாணவர் கற்றல் மற்றும் ஈடுபாட்டிற்கு வழிவகுக்கும் கற்றல் கற்பித்தல் உத்திகளை அடையாளம் காட்டுகிறது.

வாண்மைத்துவத்தை  மேம்படுத்துகிறது: மருத்துவம் அல்லது சட்டம் போன்ற போல கற்பித்தலையும்  ஒரு சான்று அடிப்படையிலான வாண்மையாக   நிறுவுகிறது.

புதுமைகளை இயக்குகிறது: கல்வி சவால்களைத் தீர்க்க புதிய தொழில்நுட்பங்கள், கற்பித்தல் முறைகள் மற்றும் அணுகுமுறைகளை பரிசோதிக்கிறது.

ஆசிரியர் கல்வி தொடர்பான முக்கிய ஆய்வுப்  பகுதிகள்

உலகளவில், ஆசிரியர் கல்வியில் ஆய்வுகள் பல்வேறுபட்டவைகளாக  விளங்குகின்றன. ஆனால்அண்மைக்காலமாக பின்வரும் பகுதிகளில் ஆசியர் கல்வி தொடர்பான ஆய்வுகள் கவனத்தி ஈர்த்து வருகின்றன.  

  1. போதனா (கற்பித்தல்) உள்ளடக்க அறிவு (PCK) தொடர்பான ஆய்வுகள் (பாட உள்ளடக்கத்தையும், போதனை முறைகளையும் ஒருங்கிணைத்து மாணவர்களின் புரிதலை உயர்த்துவது எப்படி? PCK வளர்ச்சி ஆசிரியர் பயிற்சியில் எப்படி உள்வாங்கப்படுகிறது?  Practicum-இல் PCK மேம்பாட்டின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்.
  2. தொழில்நுட்பபோதனா (கற்பித்தல்) உள்ளடக்க அறிவு (TPCK/TPACK) தொடர்பான ஆய்வுகள்: (ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தை தமது  கற்பித்தலில்  அர்த்தமுள்ள வகையில் இணைக்க தேவையான திறன்கள். ஆன்லைன்/கலப்பு கற்றல் சூழலில் TPACK திறன்களின் மேம்பாடு. TPACK குறித்த பயிற்றுவிப்பு மாதிரிகள் (models) மற்றும் அவற்றின் பலன்கள்)
  3. சான்றுகள் சார்ந்த கல்வி (EBE) மற்றும் பயிற்றுவிப்பு உத்திகள் (Evidence-Based Education (EBE) and Instructional Strategies): இது தற்போது உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆய்வு துறை. இதில் கவனம் செலுத்தப்படும் முக்கிய உத்திகள்:
    • Active Learning – மாணவர் பங்கேற்பு அதிகரிக்கும் கற்றல் வடிவங்கள்
    •  Activating Prior Knowledge – முன் அறிவினை  செயற்படுத்துதல்
    • Data-informed Instruction – தகவல்/தரவு அடிப்படையில் கற்பித்தல்  போதனை முடிவுகள்
    • Formative Assessment – கற்றல் செயன்முறையின் தொடர்ச்சியான மதிப்பீடு
    • Inclusive Practices & Belongingness – மாணவர் உள்ளடக்கல் /சமத்துவம்
    •  Instructional Transparency – கற்பித்தல் வெளிப்படை. மாணவர்கள் ஏன், எவற்றை , எப்படிக் கற்றுக்கொள்வார்கள் என்பது குறித்து தெளிவான, திறந்த மற்றும் நேர்மையான தகவல்தொடர்பை கல்வியாளர்கள் வழங்கும் ஒரு சான்று  அடிப்படையிலான கற்பித்தல் அணுகுமுறை.
    •  Metacognition & Self-regulated Learning – பேரறிகை  மற்றும் சுயகற்றல்
    •  Peer Collaboration – சக பாடி ஒத்துழைப்பு
4. ஆசிரியர் வாண்மைசார்  அடையாளம் மற்றும் நல்வாழ்வு (Teacher Professional Identity and Well-being)

  • *     ஆசிரியர் அடையாள உருவாக்கத்தில் சமூக, கலாச்சார, நிறுவன காரணிகள்.
  • *     ஆசிரியர் சோர்வு, மன அழுத்தம், வேலை-வாழ்க்கை சமநிலை (Teacher burnout, stress, work–life balance).
  • *     நல்ல நல்வாழ்வு ஆசிரியர் செயற்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம்.
  • *     ஆசிரியர் தக்கவைப்பு (Teacher retention) மற்றும் வேலைத் திருப்தி பற்றிய ஆய்வுகள்.

 

5.     5. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அதனின் கல்விச் பயன்பாடு

  • *    Generative AI, Learning Analytics, AI-based assessments.
  • *     AI பயன்படுத்தும் போது ஏற்படும் நெறிமுறை (ethics), bias மற்றும் சமத்துவ ஏழுவினாக்கள்
  • *     AI-assisted teaching tools ஆசிரியர் கல்வியில் ஏற்படுத்தும் மாற்றங்கள்.
  • *     Pre-service ஆசிரியர்கள் AI literacy பெற வேண்டிய அவசியம். 

6.     6. டிஜிட்டல் கல்வி-முறை மற்றும் கலப்பு முறை (Hybrid)  கற்றல்

  • *     நிகழ்நிலை கற்பித்தல் திறன்கள் Online pedagogy
  • *      கலப்பு கற்றல் மாதிரிகள் Blended learning models (Flipped classroom, HyFlex).
  • *     நிகழ்நிலை கற்பித்தல் (Virtual practicum) மற்றும் அதன் சவால்கள்.
  • *     டிஜிட்டல் கற்பித்தல் தேர்ச்சிகள். Digital teaching competencies.

 

7.   7. உளவியல்-சமூக மற்றும் சுற்றுச்சூழல் கற்றல்  ஆராய்ச்சி Psycho-social and Learning Environment Research

  • *  தனிப்பயனாக்கப்பட்ட கற்றல்: ஒவ்வொரு மாணவரின் தனித்துவமான தேவைகள், பலங்கள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப கல்வியை வடிவமைத்தல் (Personalized Learning: Tailoring education to each student’s unique needs, strengths, and interests.)  
  • *     சமூக-மனவெழுச்சி  கற்றல் (SEL): வாழ்க்கை வெற்றிக்கு முக்கியமான சுய விழிப்புணர்வு, சுய முகாமை  மற்றும் ஆளிடை உறவுத் திறன்களை வளர்ப்பது.(Social-Emotional Learning (SEL): Developing the self-awareness, self-management, and relationship skills critical for life success)  
  • *     நரம்பியல் கல்வி: கற்றல் செயல்முறைகளை நன்கு புரிந்துகொள்ள கற்பித்தல் நடைமுறைகளில் நரம்பியல் நுண்ணறிவுகளை ஒருங்கிணைத்தல். Brain-based learning strategies. Memory, attention, cognitive load ஆகியவற்றின் தாக்கம் (Neuroeducation: Integrating neurological insights into teaching practices to better understand learning processes)  
  • *     நுண் கற்றல்: உள்ளடக்கத்தை சிறிய பகுதிகளாக அதிக  கவனம் செலுத்தும் வகையில் கற்பித்தல் (Microlearning: Gaining traction as a method for delivering content in short, focused bursts)  

இலங்கையின் ஆசிரியர் கல்வி ஆய்வுகள் தொடர்பான நோக்கு

இலங்கையில் ஆசிரியர் கல்வி தொடர்பான ஆய்வுகள்  கடந்த சில தசாப்தங்களாக முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இன்னும் பல சவால்களையும் மேம்பாட்டு தேவைகளையும் கொண்ட ஒரு துறையாகத் திகழ்கிறது. இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்  பெரும்பாலும் கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் (NIE), திறந்த பல்கலைக்கழகம் (OUSL) மற்றும் கொழும்பு பல்கலைக்கழக கல்விப் பீடங்கள், பிற பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வி பிரிவுகள்   மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் போன்ற நிறுவனக்ளின் மூலம் நடைபெறுகின்றன.

 முக்கிய ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனங்கள்


நிறுவனம்

முக்கிய ஆராய்ச்சி துறைகள் / செயல்பாடுகள்

பல்கலைக்கழகங்கள் (Education Faculties and Departments)

*     M.Ed., MAEd., MPhil, PhD நிலை ஆய்வுகள்

*     Peradeniya, Colombo, Jaffna, Eastern, , OUSL போன்றவை

*     அதிகமாக பண்பு நிலை  (Qualitative), கலப்பு (Mixed Methods), வகுப்பறை அடிப்படையிலான செயல்நிலை  ஆராய்ச்சி (Action Research)

தேசிய கல்வி நிறுவனம் (NIE)

*     பாடத்திட்டமாற்றம்

*     ஆசிரியர் பயிற்சி வடிவமைப்பு

*     பயிற்றுநர் திறன் மேம்பாடு

*     பாடசாலை மேம்பாட்டு திட்டங்கள் (SIP) தொடர்பான ஆய்வுகள்

கல்வி அமைச்சு – ஆய்வு பிரிவு

*     தேசிய மாணவர், ஆசிரியர் செயல்திறன் ஆய்வுகள்

*     கண்காணிப்பு & மீளாய்வு அறிக்கைகள்

திறந்த பல்கலைக்கழகம் (OUSL)

*     திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி (ODL)

*     ICT, LMS பயன்பாடு

*     Self-Regulated Learning

*     ஆசிரியர் தொழில்முறை மேம்பாடு ஆய்வுகள்

 

இலங்கையில் ஆசிரிய கல்வி சார்ந்து ஆய்வுகள்  மேற்கொள்ளப்படும் முக்கிய தலைப்புப் பகுதிகள்

1. ஆசிரியர் வாண்மைத்துவ  தேர்ச்சிகள்

TPACK readiness

Classroom management

Assessment literacy

Subject–pedagogy integration

 2. ஆசிரியர் கல்விக்கு ICT & Online Learning

LMS பயன்பாடு

Blended learning

E-assessment

Virtual classrooms

3. பயிற்சி கல்லூரி & டிப்ளோமா திட்டங்கள்

National Colleges of Education (NCOE)

Teaching practice quality

Practicum supervision challenges

 4.  கல்வித் தரம் மற்றும் மாணவர் கற்றல் பேறுகள் 

Pre-service vs in-service teacher competence

Teacher performance evaluation systems

 5. கொள்கை மற்றும் நிர்வாக ஆய்வுகள்

Teacher recruitment

Continuous professional development (CPD)

Teacher workload and retention

School-based teacher development


இலங்கையில் ஆசிரிய கல்வி ஆய்வுகள் தொடர்பாக நிலவும்  தற்போதைய சவால்கள்

கொள்கை-ஆராய்ச்சி இணைப்பு குறைவு: ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஆனால் அவை கொள்கை முடிவெடுப்பில் பயன்படுத்தப்படுவது குறைவு.

 தரமான கலப்பு  முறை ஆய்வுகள் மற்றும் பரிசோதனை ஆய்வுகள் குறைவாக உள்ளான் ( Mixed Methods & Experimental Studies). அதிகமான ஆய்வுகள் விவரண ஆய்வுகளாக  உள்ளன.

ஆசியர்களின் செயலாற்றுகை தொடர்பாக தேசிய அளவிலான தொடர்ச்சியான தரவுத்தொகுப்பு இல்லை (Lack of Teachers’ longitudinal performance data)

 கற்பித்தல் பயிற்சி  அடிப்பையிலான ஆய்வுகள் குறைவு Practicum-based research. கற்பித்தல் பயிற்சி மேற்பார்வை மற்றும் mentorship தொடர்பான ஆய்வுகள் குறைவாக உள்ளன. (Teaching practice supervision & mentorship related systematic studies)

ஆய்வுகளுக்கான  நிதி பற்றாக்குறை

முடிவுரை 

 
ஆசிரியர் கல்வியில் ஆய்வு என்பது தரமான கற்பித்தலையும் பயனுள்ள கற்றலையும் உருவாக்கும் முக்கிய அறிவியல் அடித்தளம் ஆகும். இது ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தி, வகுப்பறை நடைமுறைகளை வளப்படுத்தி, மாற்றமடைந்து வரும் கல்வி உலகின் தேவைகளை பூர்த்தி செய்ய வழிகாட்டுகிறது. தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் புதிய அறிவு உருவாகி, கல்வி அமைப்பின் மேம்பாடு நிலையானதாகிறது.



கல்வியியல் ஆய்வு அடிப்படைகள்

  கல்வியியல் ஆய்வின் அடிப்படைகள்: வரைவிலக்கணம், தன்மைகள் , ஆய்வு செயன்முறை மற்றும் ஆய்வு அணுகுமுறைகள் Foundations of Educational Research: D...