கல்வியில் செயல்நிலை ஆய்வு

 கல்வியில் செயல்நிலை ஆய்வு 

Action Research in Education  

பேராசிரியர். எப்.எம்.நவாஸ்தீன் Ph.D
கல்விப் பீடம் 
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

ஆசிரியர்கள் தமது கற்றல் கற்பித்தலை செயலொழுங்கை ஆய்வுச் செயன்முறையுடன் இணைத்து கொள்வதற்கும், தமது கற்பித்தல் நடைமுறைகளில் முன்னேற்றத்தை அல்லது மாற்றத்தை ஏற்படுத்த செயல் நிலை ஆய்வு உதவுகின்றது. செயல்நிலை ஆய்வு பற்றி இன்றைய வகுப்பொன்றில்  பயன்படுத்திய முன்வைப்பினை பின்வரும் இணைப்பில் காணலாம்.

https://www.youtube.com/watch?v=1tAHY2oRE5c&t=36s





கல்வியியலாய்வுகளில் இலக்கிய மீளாய்வு


 


கல்வியியலாய்வுகளில் இலக்கிய மீளாய்வு

பேராசிரியர். கலாநிதி. எப். எம். நவாஸ்தீன்
கல்விப்பீடம் 
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
  நாவலை, இலங்கை  

1.0 அறிமுகம்

தர்க்கரீதியான படிகளில் ஈடுபடும் ஒரு செயன்முறையே ஆய்வு எனப்படுகிறது (Creswell 2012)அறிவு விருத்தி, கற்றல் ஆகியவற்றுக்கான புதிய கதவுகளை திறந்துவிடவும், அன்றாடம் எழுகின்ற பல்வேறு புதிய பிரச்சினைகளுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் கண்டு கொள்ளவும் ஆய்வு எமக்கு உதவி செய்கின்றது.  இதன் காரணமாக, பாடசாலைக் கல்வி தொட்டு பல்கலைக்கழக கற்கைகள் வரை ஆய்வு தொடர்பான பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. 

ஆய்வுச் செயன்முறையில் பல்வேறு படிநிலைகள் உள்ளன. அவற்றில் மிகப்பிரதான  இடத்தை இலக்கிய மீளாய்வு கொண்டுள்ளது. ஒருவர் ஆய்வில் ஈடுபட ஆரம்பிக்கும் கட்டத்தில் இருந்து இலக்கிய மீளாய்வில் ஈடுபட வேண்டியிருக்கும். சிலவேளைகளில், ஆய்வினை வெற்றிகரமாக நிறைவு செய்யும் வரை இது தொடரக்கூடும். 

சிறந்த இலக்கிய மீளாய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளருக்கு, காத்திரமான ஆய்வொன்றை மேற்கொள்ள முடியுமாக இருக்கும். எனினும் பலர் இலக்கிய மீளாய்வுப் பகுதியினை சிறப்பாக மேற்கொள்ள முடியாமல் இடர்படுகின்றனர். இதனை மனதில்கொண்டு இலக்கிய மீளாய்வு தொடர்பாக ஆய்வாளர் அறிந்திருக்க வேண்டிய முக்கிய பல விடயங்கள் இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றன.   

2.0 இலக்கிய மீளாய்வு - வரைவிலக்கணப்படுத்தல்

ஓர் ஆய்வாளர், ஆய்வுக்காக தெரிவுசெய்துள்ள ஆய்வுத் தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை விமர்சனரீதியாக மறுபரிசீலனை செய்வதையே இலக்கிய மீளாய்வு எனச் சுருக்கமாக கூறலாம். 

ஆய்வுக்காக தெரிவுசெய்துள்ள ஆய்வுத் தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே பல உள்நாட்டு மற்றும் சர்வேதச ஆய்வாளர்கள் அல்லது ஆய்வு நிறுவனங்கள், பல்வேறு  ஆய்வுகளை மேற்கொண்டிருப்பர். இவை  சக மதிப்பாய்வு ஆய்வுச் சஞ்சிகைகள் (Peer-reviewed journals), கல்விசார் ஆய்வுச் சஞ்சிகைகள் (Academic Journals), ஆய்வு மாநாட்டு வெளியீடுகள் (Conference Proceedings), அறிக்கைகள் (Reports), நூல்கள், கலைக்களஞ்சியம், முதுமாணி மற்றும் கலாநிதி பட்ட ஆய்வறிக்கைகள் எனப் பலவகைகளில் காணப்படும். இவற்றில் இருந்து தனது ஆய்வுத் தலைப்புடன் தொடர்புபடும் வகையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை விமர்சனரீதியாகவும், பகுப்பாய்வு ரீதியாகவும் ஆராய்ந்து எழுதப்படும் பகுதியையே இலக்கிய மீளாய்வு என்கிறோம். 

இலக்கிய மீளாய்வு  என்பது உங்கள் ஆய்வுத்  தலைப்பில் கடந்த கால மற்றும் தற்போதைய தகவல்களை விவரிக்கும் ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் மற்றும் பிற ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட விடயங்களைக் கொண்டு  சுருக்கமாக  எழுதப்பட்ட பகுதியாகும் என Creswell (2012) கூறுகிறார்.

3.0 இலக்கிய மீளாய்வின்  நோக்கங்கள் 

ஆய்வொன்றின் இலக்கிய மீளாய்வின் நோக்கங்கள் தெளிவானவை. ஆய்வொன்றில் இலக்கிய மீளாய்வு ஏன் இடம்பெறல் வேண்டும் என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன. அவற்றை பின்வருமாறு நோக்கலாம்:

  • ஆய்வுத் தலைப்பினை, ஆய்வுப்  பிரச்சினையை நன்கு விளங்கிக்கொள்ள:     ஆய்வாளர் தான் தெரிவு செய்துள்ள ஆய்வு தலைப்பு மற்றும்  ஆய்வுப் பிரச்சினையை விரிவாகவும் ஆழமாகவும் விளங்கிக்கொள்ள  இலக்கிய மீளாய்வு உதவும்.  ஆய்வுக்காக தெரிவு செய்துள்ள தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினை ஆய்வு செய்வதற்கு பொருத்தமானதா? இல்லையா? என்பதை விளங்கிக்கொள்ள இது உதவும். ஆய்வுத் தலைப்பில் அல்லது ஆய்வுப் பிரச்சினையில் உள்ள பிரதான எண்ணக்கருக்கள் பற்றிய தெளிவான விளங்கங்களை பெற்றுக் கொள்ளவும்  இலக்கிய மீளாய்வு உதவுகின்றது.
  • ஆய்வுத் தலைப்பினை மற்றும்  ஆய்வுப் பிரச்சினையை வரைவிலக்கணப்படுத்தல் மற்றும் எல்லைப்படுத்த:   ஆய்வாளர் தான் தெரிவு செய்துள்ள ஆய்வு தலைப்பு மற்றும்  ஆய்வுப் பிரச்சினையை தெளிவாக வரைவிலக்கணம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஆய்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தலைப்பு மற்றும் பிரச்சினைகளில் உள்ள முக்கிய எண்ணக்கருக்களை விளங்கிக் கொள்வது மட்டுமன்றி அவற்றை தெளிவாக வரைவிலக்கணம் செய்துகாட்டக் கூடிய திறன்களை,  இலக்கிய மீளாய்வு ஆய்வாளருக்கு வழங்குகிறது. மேலும், ஆயுவுத் தலைப்பின், ஆய்வு பிரச்சினையின் பரப்பெல்லைகளை பொருத்தமான முறையில் வரையறை அல்லது எல்லைப்படுத்திக்   (Limit) கொள்ளவும் ஆய்வாளருக்கு இலக்கிய மீளாய்வு உதவும் எனலாம்.
  • ஆய்வு தலைப்பு அல்லது பிரச்சினையுடன் தொடர்புபட்ட முக்கியமான ஆய்வுகளை இனங்கண்டு விமர்சன ரீதியாக திறனாய்வு செய்ய: ஆய்வாளர் தான் தெரிவு செய்துள்ள ஆய்வுத் தலைப்பு மற்றும்  ஆய்வுப் பிரச்சினையுடன் தொடர்புபட்ட வகையில் ஏற்கனவே உண்ணாட்டிலும், வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளை இனம் கண்டுகொள்ள இலக்கிய மீளாய்வு அவசியமாகின்றது. மேலும் இனங் கண்டுகொண்ட ஆய்வுகளை வாசித்து அவற்றை விமர்சனரீதியாக  திறனாய்வு செய்து கொள்ளவும் இலக்கிய மீளாய்வு வழிவகுக்கின்றது.
  • ஆய்வுத் தலைப்பு அல்லது பிரச்சினை தொடர்பாக தற்போதைய அறிவுகளை கண்டறிய: ஆய்வாளர் தான் தெரிவு செய்துள்ள ஆய்வுத் தலைப்பு மற்றும்  ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக தற்காலத்தில் காணப்படும் அறிவினை கண்டறிய இலக்கிய மீளாய்வு உதவும். ஆய்வுத் தலைப்புடன் நெருங்கிய வகையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை இனங்கண்டு  விமர்சனத்துக்கு உட்படுத்தும் போது , நாம் தெரிவுசெய்துள்ள ஆய்வுத் தலைப்பு தொடர்பாக தற்போது எவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?அவை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன? எவ்வாறன கண்டுபிடிப்புக்கள் செய்யப்பட்டுள்ளன? இனிமேல் எதிர்காலத்தில் எத்தகைய ஆய்வுகளை குறித்த தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினை வேண்டி நிற்கிறது? என்பவற்றை அறிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.
  • ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக தற்போதைய அறிவுகளில் உள்ள இடைவெளியைக்  கண்டறிய : முன்னைய பந்தியில் கூறியது போல, குறிப்பிட்ட ஆய்வுத் தலைப்பின் கீழ் காணப்படும் தற்போதைய அறிவுகளை கண்டறியும் போது, குறித்த தலைப்பின் கீழ் எத்தகைய அம்சங்கள் இதுவரை ஆய்வுக்காக கவனத்தில்கொள்ளப்படவில்லை என்பதை அறிந்துகொள்ள முடியுமாக இருக்கும். இது தற்போதைய அறிவில் இருக்கும் இடைவெளியை குறிப்பிட்டுக் காட்டும் எனலாம். இதுவே ஆய்வு இடைவெளி எனப்படும். ஆய்வு இடைவெளி தற்போதைய அறிவுக்கும் எதிர்பார்ர்க்கப்படும் அறிவுக்கும் இடையிலுள்ள இடைவெளியை குறித்து நிற்கிறது. இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆய்வு எண்ணக்கருக்கள், கோட்பாடுகள், ஆய்வு முறையியல்கள் ஆகியவற்றில் ஒன்றில் அல்லது பலவற்றிலோ காணப்படலாம். இவை பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன:
அட்டவணை 1: ஆய்வு இடைவெளிகள் காணப்படுமிடங்கள் 
  • 1377
  1. சான்றுகளில் உள்ள இடைவெளி (Evidence Gap): ஆய்வாளர்        மேற்கொள்ள உத்தேசித்துள்ள  ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளில் காணப்படும் கண்டுபிடிப்புகள் தற்கால நிலைமைகளில் பொருத்தமற்று காணப்படல் அல்லது சர்ச்சைகளுக்கு உட்படல்.
  2. அறிவு இடைவெளி (Knowledge Gap):  ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வுத் தலைப்பு தொடர்பாக ஆய்வாளர்  எதிர்பார்க்கக்  கூடிய ஆய்வு முடிவுகள், தற்போதைய ஆய்வுக் கண்டுபிடிப்புக்களில் காணப்படாமல் இருத்தல். 
  3.  நடைமுறைசார்ந்த அறிவு இடைவெளி (Practical Knowledge Gap):    ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் (கண்டுபிடிப்புக்கள்) தற்காலத்தில் பொருத்தமற்றுக் காணப்படல். அதாவது, ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் (கண்டுபிடிப்புக்கள்) இருந்து நாம் மேற்கொள்ளவுள்ள ஆய்வு தொடர்பான  நடத்தைகள் அல்லது நடைமுறைகள் பெரிதும் வேறுபட்டுக் காணப்படுகின்ற போது அல்லது அவை போதியளவு ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் இருக்கும் போது இந்நடைமுறைசார்ந்த அறிவு இடைவெளி தோன்றலாம்.  
  4. அனுபவவாத இடைவெளி  (Empirical Gap)தற்போதுள்ள ஆய்வுக்  கண்டுபிடிப்புகள் அல்லது முன்மொழிவுகள் மேலும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் அல்லது அனுபவ ரீதியாக சரிபார்க்கப்பட வேண்டிய தேவையினைக் கொண்டிருத்தல்.
  5. முறைமையியல் இடைவெளி (Methodological Gap): குறிப்பிட்ட ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ள முறையியல்களை விட நவீன முறையியல்களைப் பயன்படுத்தி புதியதொரு கோணத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு, புதிய முடிவுகளை பெற முயற்சித்தல்.
  6.  கோட்பாட்டு இடைவெளி (Theoretical Gap): சில வகை ஆய்வுப் பிரச்சினைகளுக்கு பொருத்தமான கோட்பாட்டினை பிரயோகித்து முடிவுகள் பெறப்படல் வேண்டும். தற்போதைய ஆய்வுகளில் பொருத்தமற்ற கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கும் வேளையில், அல்லாது வேறொரு கோட்பாட்டை பயன்படுத்தி புதிய முடிவுகளைப் பெறகூடியதான நிலமையினை இது குறிக்கின்றது.
  7. ஆய்வுக் குடி இடைவெளி (Population gap): முன்னைய ஆய்வுகளில் உள்ள கண்டுபிடிப்புக்கள், போதுமற்ற ஆய்வுக் குடியினை பிரதிநிதித்துவம்  செய்யவில்லை எனக் கருதும் நிலையினை இது குறிக்கின்றது

  • ஆய்வுப் பிரச்சினை தொடர்பான, உடன்பாடான பகுதிகளையும், விவாதத்துக்குரிய பகுதிகளையும் கண்டறிய: ஆய்வாளர் தான் மேற்கொள்ளவுள்ள ஆய்வுடன் தொடர்பான அனுபவவாத ஆய்வுகளை திறனாய்வுக்கு உட்படுத்தும் போது, குறித்த ஆய்வுகளின் எழுத்தாளர்கள் பொதுவாக உடன்படும் விடயங்களையும், வேறுபடும் நிலைகளையும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.
  • ஆய்வு வடிவம், ஆய்வு அணுகுமுறைகள், ஆய்வு முறைமைகளைக் கண்டறிய:  ஆய்வாளர் தான் மேற்கொள்ளவுள்ள ஆய்வுடன் தொடர்பான அனுபவவாத ஆய்வுகளை திறனாய்வுக்குட்படுத்தும் போது, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள  ஆய்வு வடிவம், ஆய்வு அணுகுமுறை, தரவு சேகரிப்பு முறைகள், பகுப்பாய்வு முறைகள் எனபனவற்றை இனங்கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கும். இதானால் ஆய்வாளர் தனது ஆய்வுக்குப் பொருத்தமான ஆய்வு முறையியல்களை தீர்மானித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
  • பொருத்தமான கோட்பாடுகள், மாதிரியுருக்கள் என்பவற்றை இனங்காண: ஆய்வாளர் தான் மேற்கொள்ளவுள்ள ஆய்வுடன் தொடர்பான அனுபவவாத ஆய்வுகளை திறனாய்வுக்கு உட்படுத்தும் போது, அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள கோட்பாடுகள், மாதிரியுருக்களை அறிந்து கொள்வார். இதனால், தனது ஆய்வுக்கு பொருத்தமான கோட்பாடு அல்லது  மாதிரியுருக்களை குறித்து இலகுவாகத் தீர்மானம் மேற்கொள்ள முடியும்.
  • ஆய்வுக் கண்டுபிடிப்புக்களை தற்போதைய அறிவுடன் தொடர்புபடுத்த: இலக்கிய மீளாய்வின் மிக முக்கியமான நோக்கம் இதுவாகும். ஆய்வாளர் தான் மேற்கொண்ட ஆய்வின் பயனாக கண்டுகொண்ட கண்டுபிடிப்புக்களை தற்போதைய அறிவுடன் (ஏற்கனவே வேறு ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள்) தொடர்புபடுத்தி ஒப்புநோக்கக் கூடியதாக இருக்கும்.    

4.0 இலக்கிய மீளாய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்  பெற்று கொள்ளப்படும் அறிவுகள்

இலக்கிய மீளாய்வில் ஈடுபடும் ஆய்வாளர் தான் தெரிவு செய்த ஆய்வுத் தலைப்பு,ஆய்வுப் பிரச்சினையுடன் தொடர்புபட்ட வகையில் பின்வரும் அறிவுகளை பெற்றுக் கொள்கிறார்:

வரலாற்று அறிவு- Historical Knowledge: ஒரு குறிப்பிட்ட தலைப்பு தொடர்பாக இலக்கிய மீளாய்வினை மேற்கொள்ளும் போது, அத்தலைப்பின் பிரதான எண்ணக்கருக்களின் கால ரீதியான வளர்ச்சிப் போக்குகளை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

கோட்பாட்டு மற்றும் எண்ணக்கருக்கள் தொடர்பான அறிவு - Theoretical & Concepts related knowledge : ஒரு குறிப்பிட்ட தலைப்பு தொடர்பாக இலக்கிய மீளாய்வினை மேற்கொள்ளும் போது அதனுடன் தொடர்புபட்ட கோட்பாடுகளை அறிந்து கொள்ள முடியுமாக இருக்கும். மேலும் குறித்த ஆய்வுத் தலைப்பில் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய பிரதான எண்ணக்கருக்களையும் இனங்கண்டு கொள்ளக் கூடிதாக இருக்கும்.

அனுபவவாத அறிவு- Empirical Knowledge : ஒரு குறிப்பிட்ட தலைப்பு தொடர்பாக இலக்கிய மீளாய்வினை மேற்கொள்ளும் போது, தனது ஆய்வுத் தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினையுடன் தொடர்புபட்ட  வகையில் ஏற்கனவே உளன்ட்டிலும், வெளிநாடுகளிலும் பிற ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளை வாசிக்க வேண்டி இருக்கும். இதன் போது ஆய்வாளர் அனுபவவாத அறிவினை பெற்றுக் கொள்கிறார்.

5.0 இலக்கிய மீளாய்வு மூலங்கள்

இலக்கிய மீளாய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர் தனக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள பல்வேறு மூலங்களைப் பயனபடுத்த வேண்டி இருக்கும். அவையாவன:

  • பிரசுரிக்கப்பட்ட ஆய்வு சஞ்சிகைக் கட்டுரைகள் (peer reviewed journal articles)
  • பிரசுரிக்கப்படாத/பிரசுரிக்கபட்ட முதுமாணி, கலாநிதி ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆய்வறிக்கைகள் (Thesis, Dissertation, Reports)
  •  நூல்கள்
  • ஆய்வு மாநாடுகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் (Conference research papers) 
  • அறிக்கைகள்
  • சஞ்சிகைகள் (அகவிழி, ஆசிரியம், பார்வை, கடல்),
  • பருவகால இதழ்கள்
  • கலைக்களஞ்சியம்
  • செய்திப்பத்திரிகைகள், வானொலி, தொலைகாட்சி
  • YouTube, Twitter போன்ற நவீன சமூக ஊடகங்கள்

மேற்கண்ட மூலங்களில் பெறப்படும் தகவல்கள் பெறப்படும் தன்மையினை அடிப்படையாக கொண்டு இவற்றை முதனிலை மூலத்தகவல்கள் (Primary Sources), இரண்டாம் நிலை மூலத்தகவல்கள் (Secondary Sources) என வகுத்து நோக்கலாம்.

ஆய்வுடன் தொடர்பான விடயங்களை எழுதிய ஆய்வாளரின் ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து நேரடியாக பெறப்படும் தகலவல்கள்  முதனிலை மூலக தகவல் எனப்படும். சில பொழுதுகளில் குறிப்பிட்ட ஆய்வாளர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள்/பிரசுரங்களை பெற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். இதன் போது அக்குறிப்பிட்ட ஆய்வாளர் தெரிவித்த கருத்துக்களை வேறு ஒரு நபர் எழுதிய கட்டுரையில்  இருந்து பெற்றுக் கொள்ளும் போது, அவை இரண்டாம் நிலை மூலத் தகவல்களாகக் கருதப்படும். எனினும், முதனிலை மூலங்களில் இருந்து தகவல்களை பெற்றுக் கொள்வதே எப்போதும் சிறந்தது.

6.0 இலக்கிய மீளாய்வினை மேற்கொள்ளும் படிநிலைகள்

ஆய்வுக்காக வேண்டி, இலக்கிய மீளாய்வில் ஈடுபடும் ஒருவர், இலக்கிய மீளாய்வினை எங்கே? எப்படி? ஆரம்பிப்பது என்ற சங்கட நிலைமைக்கு  ஆளாகக் கூடும். எனவே, இலக்கிய மீளாய்வினை  பின்வரும்  படிநிலைகளினூடாக மேற்கொள்ளும் போது, இலகுவாக இலக்கிய மீளாய்வினை எழுதக் கூடியதாக இருக்கும்:  

  • ஆய்வுப் பிரச்சினை அல்லது ஆய்வுத் தலைப்புடன் தொடர்பான பிரதான திறவுச் சொற்களை/பதங்களை  இனங்காணல் (Identify key terms or key words)
  •  இலக்கிய மீளாய்வுக்கான தகவல்கள் கிடைக்கும் மூலங்களின் அமைவிடங்களை கண்டு கொள்ளல் (Locate literature)
  • இலக்கிய மீளாய்வுக்காக இலக்கியங்களை தெரிவு செய்து அவற்றை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்தல் (Critically evaluate and select the literature)
  • இலக்கியங்களை ஒழுங்கமைத்தல் (Organize the literature)
  • இலக்கிய மீளாய்வினை எழுதுதல் (Write a literature review)

 6.1 பிரதான திறவுச் சொற்களை /பதங்களை இனங்காணல் (Identify key terms)

ஒன்று அல்லது இரண்டு சொற்கள் அல்லது குறுகிய சொற்றொடர்களைப் பயன்படுத்தி உங்கள் தலைப்பை அல்லது ஆய்வுப் பிரச்சினையை ஒரு சில முக்கிய சொற்களுக்கு சுருக்கி உங்கள் இலக்கியத் தேடலைத் ஆரம்பியுங்கள். முதலில் நூலகத்தில் அல்லது இணையத் தேடலின் மூலம் இலக்கியங்களைக் கண்டறிவதற்கு இவை முக்கியமானவை என்பதால் இவற்றை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்காக நீங்கள் பின்வரும் உத்திகளைக் கையாளலாம்:

  • உங்களது ஆய்வுப் பிரச்சினையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தற்காலிகமான தொழிற்படு தலைப்பினை (working title) ஒன்றை உருவாக்கி கொள்க. உங்கள் ஆய்வு தமிழில் அமையுமாக இருந்தால் தமிழ் தலைப்பினை ஆங்கிலத்திலும் எழுதி அதில் இருந்து திறவுச் சொற்களை தெரிவு செய்துகொள்க. உயர் கற்கைகளில் அநேக ஆய்வுகள் ஆங்கிலத்திலேயே காணப்படுவதால் ஆங்கில மொழியிலான திறவுச் சொற்கள் உங்கள் இலக்கிய தேடலை இலகுபடுத்தும்.
  • நீங்கள் தெரிவு செய்த திறவுச்சொற்களுக்கு நிகராக பயன்படுத்தும் ஒத்த கருத்துப் பதங்கள் காணப்படின் அவற்றையும் குறித்துக் கொள்க.
  • அல்லது, உங்கள் ஆய்வில் நீங்கள் விடைகாண விரும்பும் ஆய்வுப் பிரச்சினையில் இருந்து திறவுச்சொற்களை /குறுகிய பதங்களை  அடையாளப்படுத்துக.
  • குறித்த திறவுச்சொற்களைக் கொண்டு எந்த மொழியில் (ஆங்கிலம்/தமிழ்), எந்தக் கால இடைவெளிக்குள் (உ+ம்: கடந்த ஐந்து வருடங்கள்), இலக்கியத் தேடலை மேற்கொள்ள விரும்புகிறீர் என்பதைத் தீர்மானித்துக் கொள்க.
  • நீங்கள் தெரிவு செய்த திறவுச்சொற்களை பயன்படுத்தி  நூலகத்தில், இணையத்தில், அல்லது இலத்திரனியல் தரவுத் தளங்களில்  உங்கள் இலக்கிய தேடலை ஆரம்பிக்கலாம்.
  • பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ள உதாரணத்தின் மூலம் இதனை மேலும் நன்கு விளங்கிக் கொள்ள முடியும்:
உரு 1. ஆய்வுக்கான திறவுச் சொற்களை கண்டறியும் முறை 

6.2  இலக்கியங்களின் அமைவிடத்தை கண்டறிதல் (Locate Literature)

ஆய்வுக்குரிய முக்கிய திறவுச்சொற்களைக் கண்டறிந்த பின்னர், இலக்கிய தேடலை நீங்கள் ஆரம்பிக்கத் தொடங்கலாம். இதற்காக கல்விசார் இணையத்தளங்கள், நூலகங்கள்  என்பவற்றை நீங்கள் பயன்படுத்த முடியும். அநேகமானவர்கள். சாதாரண இணையத்தில் இலக்கியத் தேடலை ஆரம்பிக்கின்றனர். சாதாரண இணையத்தில் வரும் தகவல்கள் சகலதும் சரியானவை என்று உறுதியாகக் கூற முடியாது. எனவே, இலக்கிய தேடலுக்குப் பொருத்தமான வழிகளில் நீங்கள் இலக்கிய தேடலை மேற்கொள்வது முக்கியமாகும். முதலில் உங்கள் பல்கலைக்கழகங்களில் உள்ள நூலகங்களில் இலக்கியத் தேடலை ஆரம்பிக்கலாம். நீங்கள் இனங்கண்ட திறவுச் சொற்கள், குறுகிய சொற்றொடர்களைப் பயன்படுத்தி உங்களுக்கு தேவையான இலக்கியங்களை தேடிக் கொள்ள முடியும்.

மின்னணு தரவுத்தளங்கள் (Electronic Databases)

நூலகங்களுக்கு நிகராக ஆய்வுக் கட்டுரைகளை களஞ்சியப்படுத்தி அவற்றை உங்களுக்கு வழங்கும் பல நூற்றுக்கணக்கான  கல்விசார் மின்னணு தரவுத்தளங்கள் (Electronic Databases) இன்று விரைவிக் காணப்படுகின்றன. இவை பலவற்றின் சேவைகள் அனைத்தும் இலவசமாகக் கிடைப்பதில்லை. உங்கள் பல்கலைக்கழகம் அல்லது உயர் கல்வி நிறுவனம் இவ்வாறான கல்வி மின்னணு தரவுத்தளங்களில் பலவற்றுக்கு சந்தா கட்டி தங்கள் நூலகத்தின் இணையத் தளங்களில்   உங்கள் இலக்கிய தேடலுக்காக வைத்திருப்பார்கள். இவற்றில் உதவியுடன் உங்கள் இலக்கியத் தேடலை நீங்கள் மேற்கொள்ளலாம். இவை நிகழ்நிலை மின்னணு தரவுத்தளங்களாகவும் விளங்குகின்றன. Scopus, Web of Science, PubMed, ERIC, IEEE Xplore, ScienceDirect, Directory of Open Access Journals (DOAJ), SAGE, JSTOR, Willey Online Library, ResearchGate போன்றன இதற்கு சில உதாரணங்கள் ஆகும். கல்விசார் ஆய்வுகளுக்கு பிரசித்தமான சர்வதேச மின்னணு தரவுத் தளங்களுக்கு  ERIC (Education Resources Information Center),   Education Research Complete, ProQuest Education Journals,  Academic Search Premier, A+ Education போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். 

தேடல் பொறிகள் (Search Engines)

இன்று தகவல் தொழினுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள காரணத்தினால் கல்விசார் ஆய்வுகளை இலகுவாக தேடிகொள்ளும்வகையில் இணையத்தில் பிரத்தியேகமான தேடல் பொறிகள் செயற்படுகின்றன. இவற்றின் உதவி கொண்டும் உங்களது இலக்கிய தேடலை சுலபமாக மேற்கொள்ள முடியும். Google Scholar, Google Books, Microsoft Academic, WorldWideScience, Science.gov, Wolfram Alpha, Refseek, Educational Resources Information Center (ERIC), Virtual Learning Resources Center, iSeek, ResearchGate, Bielefeld Academic Search Engine-BASE, Infotopia, PubMed Central, Lexis Web,என்பன இத்தகைய தேடல் பொறிகளுள் மிகப் பிரபல்யமானவையாகும். 

கீழே தரப்பட்டுள்ள காணொளியில் ஆய்வுகளுக்காக Google Scholar தேடல் பொறியினை  சிறந்தமுறையில் பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் தரப்படுகின்றது. 



6.3 இலக்கிய மீளாய்வுக்காக இலக்கியங்களை தெரிவு செய்து அவற்றை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்தல் (Critically evaluate and select the literature)

உங்கள் ஆய்வுக்கான இலக்கியத் தேடலை மேற்கொள்ளும் போது, பல நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை நீங்கள் கண்டறியக் கூடும் எனினும் இவற்றைப் பயன்படுத்த முன்னர், இவை எனது ஆய்வுக்கு சிறந்த மூலமாக உள்ளதா? மிகப் பொருத்தமானதா? எனும் வினாக்களை கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்வாறு பெற்றுக் கொள்ளும் பல கட்டுரைகள் உங்கள் ஆய்வின் இலக்கிய மீளாய்வு பகுதியில் சேர்த்துக் கொள்ளத் தகுதியற்றவையாக இருக்கக் கூடும். இதன் காரணமாக, இலக்கிய தேடலை மேற்கொள்ளும் போது, முதலில் refereed journalகளில் வெளிவந்த கட்டுரைகளில் தொடங்கி பின்னர்,  nonrefereed journal கட்டுரைகள்; நூல்கள், மாநாட்டு கட்டுரைகள், முதுமாணி, கலாநிதி ஆய்வுக் கட்டுரைகள், கடைசியாக non-reviewed கட்டுரைகள் என உங்கள் தேடலை அமைத்துக் கொள்ளுமாறு Creswell (2012) வலியுறுத்துகிறார். மேலும், இலக்கிய தேடலில் பெற்றுக் கொண்ட விடயங்கள், உங்கள் ஆய்வுடன் மிகப் பொருத்தமானதா? என்பதையும் மிகக் கவனமாக தீர்மானிக்க வேண்டும். இந்த பொருத்தப்பாடு பின்வரும் வகைகளைக் கொண்டுள்ளதாக Creswell (2012)  குறிப்பிடுகிறார்:

  • தலைப்புரீதியான பொருத்தப்பாடு: இலக்கியத் தேடலில் நீங்கள் பெற்றுக் கொண்டவை ,  உங்களால் முன்மொழியப்பட்ட ஆய்வின் அதே தலைப்புடன் பொருந்தி செல்கிறதா?
  • தனியாள் மற்றும் தளம் சார்ந்த பொருத்தப்பாடு : நீங்கள் ஆய்வு செய்ய விரும்பும்  அதே தனிநபர்கள் அல்லது தளங்களை நீங்கள் தேடிப்பெற்றுக் கொண்ட இலக்கியம் ஆய்வு செய்கிறதா?
  • ஆய்வுப் பிரச்சினை  மற்றும் ஆய்வு வினாவுடனான பொருத்தப்பாடு:  நீங்கள் ஆய்வு செய்யும்  அதே ஆய்வுப் பிரச்சினையினை  நீங்கள் தேடிப்பெற்ற  இலக்கியம் ஆராயுமா? அல்லது உங்கள் ஆய்வில் நீங்கள் விடைகாண திட்டமிட்டுள்ள அதே ஆய்வு வினாவினை குறிப்பிட்ட இலக்கியம்  தீர்க்குமா?
  • அணுகல்தன்மை தொடர்பான பொருத்தப்பாடு: உங்கள் நூலகத்தில் குறித்த ஆய்விலக்கியங்களைப் பெற்றுகொள்ளக் கூடியதாக உள்ளதா?  அல்லது இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியுமா? நூலகம் அல்லது இணையதளத்தில் இருந்து எளிதாகப் பெற முடியுமா?   

மேற்கண்ட வினாக்களுக்கு ஆம் என விடைகள் வருமாயின் அத்தகைய இலக்கியங்களை உங்கள் ஆய்வின் இலக்கிய மீளாய்வுக்கு உங்களால் பயன்படுத்த முடியும். இலக்கிய தேடலின் மூலம் பெற்றுக் கொண்ட பல்வேறு மூலங்களின் தரத்தினை இதன் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும்.

6.4 இலக்கியத்தை ஒழுங்கமைத்தல்

உங்கள் ஆய்வுக்குப் பொருத்தமான சார்பிலக்கியங்க்களை தேடிப் பெற்று, அவற்றின் தரத்தையும் அவற்றின்  பொருத்தப்பாடுகளையும்   உறுதி செய்த பின்னர். இலக்கிய மீளாய்வுக்காக  அவற்றை ஒழுங்கமைப்புக்கு உட்படுத்த வேண்டும். இதற்காக பின்வரும் செயற்பாடுகளில் ஈடுபடல் வேண்டும்:

  • அடையாளம் கண்ட இலக்கியங்களை உங்கள் வாசிப்புக்காக  தரவிறக்கம் செய்து கொள்ளல், பிரதிகள் எடுத்து கொள்ளல் அல்லது கணனியில் சேமித்துக் கொள்ளல். (Downloading,  Printing or Saving in computer).
  • வாசிப்புக்காக தெரிவு செய்தவற்றை வாசித்து அவற்றில் இருந்து குறிப்புக்கள் எடுத்தலும், அவற்றை சுருக்கி எழுதிக் கொள்தலும் (Taking Notes and Abstracting Studies). இதற்காக இலக்கிய மீளாய்வுக்கான தாயமொன்றை தயாரித்துக் கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். இலக்கிய மீளாய்வு பகுதியில் ஒருவர் மேற்கொள்ளும் ஆய்வுப் பிரச்சினையுடன் தொடர்புடைய பிற ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளை வாசித்து அவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தல் வேண்டும். இதனை இலக்கிய மீளாய்வு தாயம் இலகுபடுத்தும்.
  • இலக்கிய மீளாய்வுக்கான தாயம் ஆய்வுகளில் காணப்படும் முக்கிய விடயங்களை இலகுவாக அடையாளப்படுத்தி காட்டும். மேலும் ஓர் ஆய்வுடன் தொடர்புபட்ட ஏனைய ஆய்வாளர்களின் கருத்துக்களில் உள்ள உடன்பாடுகள், வேறுபாடுகளை இலகுவில் ஒப்பிடக் கூடியதாக இருக்கும். ஆய்வில் உள்ள இடைவெளியை காண்பதற்கும் இந்த தாயம் மிக உதவியாக இருக்கும். இலக்கிய மீளாய்வு தாயத்தினை உருவாக்கும் ஆய்வு மாணவர்கள், இலக்கிய மீளாய்வு பகுதியை சிறப்பாக எழுதுவர். பின்வரும் அட்டவணையில் இலக்கிய மீளாய்வுக்கான தாயமொன்று காட்டப்பட்டுள்ளது. 

6.5. இலக்கிய மீளாய்வு எண்ணக்கருப்படமொன்றை                உருவாக்குதல்

இலக்கிய மீளாய்வுக்காக ஆய்வுக்  கட்டுரைகளை ஒழுங்கமைத்து, குறிப்புகள்  எடுக்கும்போது, உங்கள் இலக்கிய மீளாய்வு எவ்வாறு அமையப் போகிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குவீர்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு எண்ணக்கரு படம் உங்கள் மனதில் உருவாகும்.  இந்த எண்ணக்கரு படத்தை ஒரு தாளில் விவரித்து  வைத்துக் கொள்ளல்வேண்டும். இதன்போது,  இலக்கிய மீளாய்வுக்காக இலக்கியத்தை இலகுவில் ஒழுங்கமைக்கவும், நேர்த்தியான முறையில் உங்கள் இலக்கிய மீளாய்வினை எழுதவும் உதவுவதாக இந்த எண்ணக்கரு படம் அமையும். 


Source: OER Wikimedia 

6.6 இலக்கிய மீளாய்வுக்கான வாசிப்பு 

இலக்கிய மீளாய்வினை மேற்கொள்ள நாம் சேகரித்துக் கொள்ளும் அனைத்து கட்டுரைகளினதும் சகல பக்கங்களையும் வாசிக்க வேண்டுமா? என்ற வினா உங்கள் மனதில் எழக்கூடும். அவ்வாறு வாசிக்க வேண்டிய தேவையில்லை என்றே கூற முடியும். இதற்காக பேராசிரியர் இராஜசேகர் கூறும் நுட்பங்களை பயன்படுத்த முடியுமாக இருக்கும். 


இவரின் படி, இலக்கிய மீளாய்வுக்காக பெற்றுக்கொண்ட கட்டுரைகளை பின்வரும் ஒழுங்கில் வாசிக்க முயல வேண்டும்.

  • முதலில், எமது ஆய்வுடன் தொடர்பான மிகத் தரமான ஆய்வுக் கட்டுரைகளை தேடிப் பெற்று ஒழுங்கமைத்துக் கொள்ளல்.
  • கட்டுரைகளை வாசிக்க ACMA (Abstract---Conclusion---Methodology---Analysis) என்ற ஒழுங்குமுறையினை பயன்படுத்தல். 
  • அடுத்து, அவற்றின் ஆய்வுச் சுருக்கங்களை(Abstract) மாத்திரம் வாசித்தல். 
  • ஆய்வுச் சுருக்கங்களை வாசித்த பின்னர், ஓவ்வொரு கட்டுரையினதும் முக்கிய பகுதிகளை மட்டும் வாசித்தல். இதற்காக, குறித் ஆய்வுக் கட்டுரையின் முடிவுரை (Conclusion), ஆய்வு முறையியல் (Methodology), தரவுப் பகுப்பாய்வு (Analysis) என்ற ஒழுங்கில் வாசிக்க முடியும். 

6.7 இலக்கிய மீளாய்வினை எழுதுதல் (Writing Literature Review)

இலக்கிய தேடலின் போது பெற்றுக் கொண்ட பல்வேறு மூலங்களை ஒழுங்குபடுத்தியதன் பின்னர், உங்களது இலக்கிய மீளாய்வினை எழுத ஆரம்பிக்கலாம். இலக்கிய மீளாய்வினை எழுதும் போது அனுபவாத ஆய்வுகளின் சுருக்கங்களை அதற்குரிய உசாத்துணை குறிப்புகளை உரிய முறையில் வழங்கி எழுதுதல் வேண்டும். மேலும், இலக்கிய மீளாய்வினை எழுதும்போது பல்வேறு வகைகளைப் பயன்படுத்துவர். இவற்றுள் கருப்பொருள் அடிப்படையில் (thematic review of the literature ) அல்லது ஒவ்வொரு ஆய்வுகளின் அடிப்படையில் (study-by-study review of the literature) எழுதுவது பிரபல்யமாக உள்ளன.

இலக்கிய மீளாய்வினை எழுதும் போது பின்வரும் விடயங்களை பின்பற்றல் வேண்டும்.

  • ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக எழுத்தாளர்களிடம் காணப்படும் வெவ்வேறுபட்ட நோக்குககளை ஒப்பீட்டு வேறுபடுத்திக் காட்டுதல் 
  • ஒரே மாதிரியான முடிவுகளை குறிப்பிடும் எழுத்தாளர்களை குழுவாக்குதல்.
  • ஆய்விலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட முறையியல் அம்சங்களை விமர்சனத்துக்கு உட்படுத்துதல். 
  • எழுத்தாளர்களிடம் காணப்படும் உடன்படாத விடயங்களை குறிப்பிட்டுக் காட்டுதல். 
  • முனைப்பான ஆய்வுகளை முக்கியப்படுத்தி கட்டுதல் 
  • உங்கள் ஆய்வு முன்னைய ஆய்வுகளுடன் உள்ள தொடர்பினை எடுத்துக் கட்டல். 
  • ஆய்வு இலக்கியங்களில் கூறப்பட்டவற்றை சுருக்கமாக முடிவுரையில் கூறுதல்.

இலக்கிய மீளாய்வுப் பகுதியினை எழுதும் போது மேற்கண்ட  விடயங்களைக் கவனத்திற் கொண்டு எழுத ஆரம்பிக்க வேண்டும். இலக்கிய மீளாய்வு பகுதியை எழுதும் போது மட்டுமல்லமால் , ஆய்வுக் கட்டுரையினை எழுதும் போது, உரிய முறையில் உரை-மேற்கோள் காட்டல் (In-text Citation), உரிய உசாத்துணையிடல் முறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். பொதுவாக கல்வி ஆய்வுக் கட்டுரைகளில் APA எனும் உசாத்துணையிடல் முறை அதிகம் பின்பற்றப்படுகிறது. இதனைப் பற்றியும் ஆய்வாளர்கள் போதிய விளக்கங்களை கொண்டிருத்தல் வேண்டும். 

மேலும், இலக்கிய மீளாய்வு எழுதும் போது மாத்திரமில்லாமல், முழு ஆய்வுக் கட்டுரையினையும் எழுதுகையில் கருத்துத் திருட்டுக்களில்  (Plagiarism) ஈடுபடக் கூடாது. பிறர் எழுதிய விடயங்களை வாசித்து , நாம் கட்டுரையினை எழுதும்போது கருத்து திருட்டுக்கள் இடம்பெறாத வகையில் மிக எச்சரிக்கையுடன் எழுத வேண்டும். பிறரை கருத்துக்களை எமது கட்டுரையில் எழுதும் போது, அவற்றை நாம் வாசித்து, கிரகித்து, எமது வசன நடையில் உரிய உரை-மேற்கோள்களுடன் எழுதுதல் வேண்டும். பேராசிரியர் இராஜசேகரின் காணொளி இலக்கிய திருட்டுக்கள் குறித்து விரிவாக விளக்கி நிற்கிறது. 



6.8 முடிவுரை 

இலக்கிய மீளாய்வு ஆய்வொன்றின் மிக முக்கிய பகுதியாக அமைகின்றது. இதனை சரியான முறையில், ஆய்வாளர் மேற்கொண்டு விட்டால், அவரது  எனைய ஆய்வுப் பணிகளை மிக எளிதில் மேற்கொண்டு விடலாம். இதன் காரணமாக, ஆய்வாளர்கள், இலக்கிய மீளாய்வினை சிறந்த முறையில் எவ்வாறு செய்யலாம் என்பதனை அறிந்து வைத்திருப்பது முக்கியமாகும். இந்தவகையில், ஆய்வாளரொருவர் அறிந்திருக்க வேண்டிய சில விடயங்கள் இக்கட்டுரையில் நோக்கப்பட்டன. இக்கட்டுரை தொடர்பாக உங்கள் கருத்துக்கள் ஏதுவுமிருப்பின் அவற்றை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் இடுக.

நன்றி!

 பேராசிரியர். கலாநிதி. எப். எம். நவாஸ்தீன்

திறந்த கல்வி வளங்கள்

 


திறந்த கல்வி வளங்கள் 

அறிமுகம் 

கல்வித்துறையில் அண்மைக்காலமாக திறந்த கல்வி வளங்கள் (OPEN EDUCATIONAL RESOURCES-OER), திறந்த கல்வி நடைமுறைகள் (OPEN EDUCATIONAL PRACTICES) எனும் பதங்கள் பிரபலயமாகி வருகின்றன. குறிப்பாக கல்வித் தொழினுட்பம் சார்ந்த விடயங்களில் இவை பேசு பொருளாகி உள்ளன.  என்ன திறந்த கல்வி வளமா? அப்படி என்றால் என்ன? என யோசனை செய்கிறிர்களா? கவலை வேண்டாம்! இந்த கட்டுரையில் திறந்த கல்வி வளங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

திறந்த கல்வி வளங்கள் என்றால் என்ன?

வெற்றிகரமான வகுப்பறைக் கற்றல்-கற்பித்தலை ஒழுங்கமைப்பதே ஆசிரியர்களின் பிரதான வகிபங்காக உள்ளது. வினைத்திறனானகற்றல்-கற்பித்தலை ஒழுங்கமைக்க ஆசிரியர்கள் பல்வேறு கற்றல் சாதனங்களை வேண்டியவர்களாக இருப்பர். இணைய சேவைகள் பட்டி தொட்டி எங்கும் பரவியதன் காரணமாக, ஆசிரியர்கள் தமது கற்றல் கற்பித்தலுக்கு தேவையான பல்வேறு சாதனங்களை இணையத்தளங்களில் இருந்து பெற்று தமது கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துகின்றனர். 

கற்பித்தலுக்கு தேவையான நூல்கள், கட்டுரைகள், மேலதிக வாசிப்புகள்,  பயிற்சி வினா வினா-விடைகள், உருக்கள், கார்ட்டூன் படங்கள், வரிப்படங்கள், மாதிரி உருக்கள், ஒலித் துணுக்குகள், காணொளிகள், நிகழ்நிலை செய்து காட்டல் விளக்கங்கள், உருவகப்படுத்துதல் (Simulation), இயங்குபடங்கள் (Animation) போன்றவற்றை பயன்படுத்த முனைகின்றனர்.

இவற்றுள் பல இலவசமாக கிடைப்பதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவை பதிப்புரிமை/உரிமம் (Copyrights) கொண்டவையாக இருக்கின்றன. மீள பயன்படுத்தவோ, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாதவையாக இருக்கும். 

சிலவேளைகளில், அவற்றை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டியும் இருக்கும். பதிப்புரிமை கொண்ட கற்றல்-கற்பித்தல் சாதனங்களை அனுமதியின்றி பயன்படுத்தும்போது, சிலவேளைகளில் சட்ட சிக்கலுக்குள் அவை எம்மை சிக்க வைத்து விடும். இந்த தடைகளை குறைப்பதற்காக அறிமுகம் பெற்றதே திறந்த கல்வி வளங்கள் ஆகும். இதனை சுருக்கமாக OER என்று அழைப்பர். 

திறந்த கல்வி வளங்கள் - வரைவிலக்கணம்

"திறந்த கல்வி வளம்(கள்)" (OER) என்பது கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளில் நாம் பயன்படுத்துகின்ற பல்வேறு கற்றல் வளங்களை குறிப்பிட்டு நிற்கிறது. 2002 ஆண்டில் முதன் முறையாக யுனேஸ்கோ திறந்த கல்வி வளம் என்ற எண்ணக்கருவினை அறிமுகம் செய்தது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் திறந்த பாடநிரல் சாதனங்கள் ( Open courseware in developing countries) தொடர்பான மாநாட்டில் இந்த பதம் பயன்படுத்தப்பட்டது.  

நீங்கள் ஆசிரியராக இருந்தாலும் அல்லது மாணவராக  இருந்தாலும் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கக் கூடிய  கற்றல்-கற்பித்தல் சாதனங்கள் அனைத்தும் திறந்த கல்வி வளங்கள்  (OER) எனப்படுகின்றது. 

திறந்த கல்வி வளங்களுக்கு  எந்தவொரு உரிமக் கட்டணமும் அல்லது பதிப்புரிமை கட்டணங்கள்  செலுத்தத் தேவையில்லை. இவை இலவசமாக பயன்படுத்தக் கூடியனவாகும்.  இவற்றை, மீளவும் பயன்படுத்தலாம். மாற்றி அமைக்கலாம். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 

இந்த திறந்த கல்வி வளங்களை மட்டும் பயன்படுத்தி முன்னெடுக்கப்படுகின்ற கல்வி நடவடிக்கைகளை திறந்த கல்வி நடைமுறைகள் (OEP) என்கிறோம்.

பொதுத் தளத்தில் அல்லது திறந்த பதிப்புரிமையின் கீழ் எந்தவொரு மொழியிலும், எண்ணிம அல்லது வேறுவகையில் வெளியிடப்பட்ட   கற்றல்-கற்பித்தல் மற்றும் ஆய்வு சாதனங்கள் திறந்த கல்வி வளம் எனலாம். 

இத்தகைய வளங்கள் ஏனையவர்களினால்  இலவசமாக பெறக் கூடியதாக, எந்த வித வரையறைகளுமின்றி  மாற்றி அமைக்கக் கூடியதனவையாக, மீள  விநியோகிக்கக் கூடியவையாக காணப்படும். (யுனெஸ்கோ). 

இத்திறந்த கல்வி வளங்களை 5R வடிவங்களில் நாம் பயன்படுத்த முடியும். அவையாவன:

  • Retaining- வளங்களை தக்கவைத்தல்
  • Remixing -  ரீமிக்ஸ் செய்தல் எமது கற்றல்-கற்பித்தல், ஆய்வு தேவைகளுக்கு ஏற்ப திறந்த கல்வி வளங்கள் பலவற்றை கலப்பு செய்தல்  
  • Revising, திருத்தி அமைத்தல்
  • Reusing மீள்பயன்பாடு செய்தல் மற்றும்
  • Redistributing மறுபகிர்வு செய்தல்

திறந்த கல்வி வளங்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது?

திறந்த கல்வி வளங்களாக வெளியிடப்படும்  சாதனங்கள் CREATIVE COMMONS LICENCE களை கொண்டிருக்கும். அதாவது மேலே கூறப்பட்ட 5R செயற்பாடுகளில் ஒன்றினையோ அல்லது பலவற்றையோ அனுமதிக்கும் வகையில் அதன் பதிப்புரிமைகள்/உரிமங்கள்  அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும்.

Attribution-NoDerivs
CC BY-ND

வணிகரீதியாக உட்பட எந்த நோக்கத்திற்காகவும் குறிப்பிட்ட சாதனைத்தை மீண்டும் பயன்படுத்த இந்த உரிமம் உங்களை  அனுமதிக்கிறது; இருப்பினும், அதை மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது, இது பெறப்பட்ட மூலம் கட்டாயமாக குறிப்பிடப்பட வேண்டுமாகிறது.

Attribution-NonCommercial
CC BY-NC

 

வணிகநோக்கில் அல்லாத வகையில், இந்த உரிமம் மற்றவர்களை ரீமிக்ஸ் செய்யவும், மாற்றியமைக்கவும், உங்கள் சாதனங்களை  உருவாக்கவும் உதவுகிறது, மேலும் உங்களின்  புதிய படைப்புகள்  வணிக ரீதியற்றதாக இருக்க வேண்டும் அத்துடன் பெறப்பட்ட மூலமும் குறிப்பிட்டுக் காட்டப்படல் வேண்டும். இருந்தபோதிலும், மூல சாதனம் கொண்டிருந்த அதே விதிமுறைகளில் உங்கள் புதிய  படைப்புகளுக்கு உரிமம் வழங்க வேண்டியதில்லை.

 

Attribution-NonCommercial-ShareAlike
CC BY-NC-SA

 

வணிகநோக்கமற்ற வகையில் நீங்கள் உருவாகும் கற்றல் சாதனங்களில் இந்த உரிமம் கொண்ட சாதனங்களை மேல்-கலப்பு செய்யவும், மாற்றியமைக்கவும், அனுமதி அளிக்கிறது. ஆனால், உங்கள் புதிய சாதனத்தில் மூல சாதனத்தினை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதை குறிப்பிடுவதுடன், மூல சாதனத்தின் அதே உரிமை வகை, புதிய படைப்புகளிலும் பேணப்படல் வேண்டும்.



                                       Attribution-NonCommercial-NoDerivs
CC BY-NC-ND

 

இந்த உரிமம்  திறந்த கல்வி வளங்கள் சம்பந்தமான உரிமங்களில் மிகவும் கட்டுப்பாடுகளைக் கொண்டது. அதாவது இந்த உரிமம் உடைய கற்றல்-கற்பித்தல், ஆய்வு தொடர்பான சாதனங்களை பதிவிறக்கி பயன்படுத்த அனுமதிக்கும். அவ்வாறு பயன்படுத்துகையில் குறித்த சாதனம் பெற்றுக் கொள்ளப்பட்ட மூலம் குறிப்பிட்டுக் காட்டபடல் வேண்டும். ஆனால், இவற்றை  எந்த வகையிலும் மாற்றவோ அல்லது வணிக ரீதியாகப் பயன்படுத்தவோ முடியாது




                                            CC0  “No Rights Reserved”
இந்த உரிமம் கொண்டவை எந்தவித பதிப்புரிமைகளுமற்ற வகையில் பிரசுரமாகி இருக்கும். இவற்றை எந்த வித தங்கு தடைகளும் இன்றி பயன்படுத்தலாம்.

திறந்த கல்வி வளங்களின் நன்மைகள் 

திறந்த கல்வி வளங்களின் பயன்பாடு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இவற்றை பயனபடுதுவதால் பாலா நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன. அவற்றுள் சில வருமாறு: 
  • கற்றலுக்கான அணுகல் விரிவடைந்துள்ளது. உலகில் எங்கும் உள்ள மாணவர்கள் எந்த நேரத்திலும் OERகளை பெற்றுக் கொள்ள முடியுமாக உள்ளது.
  • OERகள் குறைந்த செலவுடன்  அல்லது செலவு இல்லாமல் பரவலாக விநியோகிக்கக் கூடியவை.
  • மேலதிக கற்றலுக்கு,  பாடப்புத்தகங்கள் மற்றும் விரிவுரைகளுக்குத் துணையாக OERகள் காணப்படுகின்றன. இதன் மூலம் பரந்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.  
  • வழக்கமான கற்றல்-கற்பித்தல் செயன்முறையை மேலும் மேம்படுத்துவதற்கு OER கள் உதவுகின்றன. . உதாரணமாக, கற்பித்தலின் பொது பல்வேறு காணொளிகள், பல்லூடக சாதனங்களை இலகுவாக இணைத்து கற்பிக்கும் வசதிகள் இதனால் இலகுவாக கிடைக்கப் பெறுகின்றன. இதனால் மாணவர் கற்றல் மேம்படும்.
  • திறந்த கல்வி வளங்கள் விரைவான சுழற்சி கொண்டவை ஆகும். ஆதாவது தகவல்களை விரைவாக கொண்டு செல்லக் கூடியதாக இருக்கின்றன.
  • திறந்த கல்வி வளங்கள் புத்தாக்கங்களை, திறமைகளை மேலும் விருத்தி செய்கின்றன.




கல்வியில் சமகால எழுவினாக்கள்


 
கல்வியில் சமகால எழுவினாக்கள்


கலாநிதி எப்.எம்.நவாஸ்தீன்
பேராசிரியர்
கல்விப்பீடம் 
 இலங்கை திறந்த பல்கலைக்கழகம்


அறிமுகம்

இருபத்தோராம் நூற்றண்டின் இரு தசாப்த காலங்களை கடந்தவர்களாக நாம் உள்ளோம். கல்வியானது பிள்ளைகளின் ஆளுமை விருத்தியினை ஏற்படுத்துவது மட்டுமன்றி, அவர்களை உற்பத்திதிறன் கொண்ட பிரசைகளாக உருவாக்கவும் வேண்டி உள்ளது. தமது நாடுகளின் பிரசைகளுக்கு தரமான கல்வியை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்களினதும் தலையாய கடமையாக உள்ளது. இவ்விருபத்தோராம் நூற்றாண்டில் முன்னெப்போதும் இல்லாதவாறு அறிவியல், தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்பத்தில் ஏற்படுகின்ற அசுர வளர்ச்சி, கல்வியிலும் பல்வேறு மாற்றங்களையும் புதுமைகளையும் அன்றாடம் நிகழ்த்தி வருகின்றன. அதேவேளை, உலகில் வாழும் பல்வேறு சமூகங்கள் வறுமை, சுகாதாரப் பிரச்சினைகள், மந்தபோசனை, போதிய அகக்கட்டமைப்பு வசதிகளின்மை, உண்ணாட்டு பிணக்குகளினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மட்டுமன்றி, உலக நாடுகள் பலவற்றில் ஏற்பட்டுள்ள யுத்தங்கள் கல்வி தொடர்பான பிரச்சினைகளை, சவால்களை ஏற்படுத்தி உள்ளன. பிரதானமாக இவை, ல்விக்கான அணுகல் (Access to the Education), தரமான கல்வி (Quality of Education), கல்வி தொடர்பான ஒப்புரவு (Equity of Education), கல்வியின் பொருத்தபாடுகளில் (Relevance of the Education) எழுவினாக்களை ஏற்படுத்தி வருகின்றன. 

சமகாலம், எழுவினாக்கள் ஆகிய பதங்களை விளங்கிக் கொள்ளல் 

ஒருவர் வாழும் காலப்பகுதியே சமகாலம் எனப்படும். இதனைஆங்கிலத்தில் Contemporary என்று கூறலாம். ஒருவர், வாழும் காலப்பகுதியில் தான் அனுபவிக்கும் விடயங்கள் சமகால விடயங்கள் ஆகின்றன. எழுவினா எனின் ஒரு குறிப்பிட்ட துறையில் நிகழும் விரும்பத்தகாத விடயங்களைக் குறிக்கின்றன. Issue எனும் ஆங்கில பதம் இதற்கு ஈடாக பயன்படுத்தலாம். ஒரு துறையில் சர்ச்சைக்குரிய, மேலும் விவாதிக்கப்படக் கூடிய விடயங்களை இது குறித்து நிற்கிறது. 

கல்வியில் சமகால எழுவினாக்கள் என்றால் என்ன?  

சமகாலம், எழுவினாக்கள் ஆகிய பதங்களுக்கு மேலே கூறப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில், கல்வியில் எழும் சமகால எழுவினாக்கள் என்றால் என்ன? என்பதை 
விளங்கிக்கொள்ள முடியும். அதாவது கல்வி தொடர்பாக நாம் வாழுகின்ற இந்த காலப்பகுதியில் எதிர்நோக்கும்  விரும்பத்தகாத விடயங்கள் அனைத்தும் இதன் கீழ் வருகின்றன. கல்வி தொடர்பான கொள்கைகள், கல்வி நடவடிக்கைகள், கல்வி வளர்ச்சிப்போக்குகளில் எதிர்மறை விளைவுகளை இவை தோற்றுவிக்கும்.

நாமின்று, 2022 ஆம் ஆண்டில் வாழ்ந்து வருகிறோம். இந்த காலப் பகுதியில் கல்வி தொடர்பாக நாம் எதிர்கொண்டுள்ள விரும்பத்தகாத விடயங்கள் எவை? என்று சற்று எண்ணிப் பாருங்கள். கொவிட் பெருந்தொற்றின் பின்னர்  ஆரம்பக் கல்வி தொடக்கம், உயர்கல்வி வரை ஏற்பட்டுள்ள பல்வேறு விரும்பத்தகாத பல்வேறு சவால்கள், பிரச்சினைகள் உங்கள் மனக்கண் முன் வந்து போவதனைக் காண்பீர்கள். இவற்றையே நாம் கல்வியில் சமகால எழுவினாக்கள் என்கிறோம். 

மேலும், கல்வி தொடர்பாக உள்ள எழுவினாக்களை விளங்கிக் கொள்வதற்கு பின்வரும் வினாக்களை எமக்குள் கேட்டுப் பார்ப்போம்: 

  1. தற்போது எனது நாட்டில் கல்வி முறை எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் எவை? (What are the major challenges that face the education system in my country at the moment?) 
  2. ஒருவரின் சமூக, பொருளாதார அல்லது அரசியல் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றனவா? ((Is there equal distribution of educational opportunities for everybody regardless of one’s social, economic or political status (whether poor or well to- do, young or old, female or male, rural or urban, etc.)? 
  3. இல்லையெனின், ஏன் அவ்வாறு காணப்படுகின்றன? (Why?) 
  4. தற்போதுள்ள கல்வி முறையின் அணுகல் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்? (What can be done to improve access and quality of the existing education system?) 
  5. எமது நாட்டில் கல்விக்கான அணுகல், கல்வித் தரம் தொடர்பான  பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன? (How are these issues being addressed in the country?)
  6.  இதன்போது அடையப்பெற்ற  வெற்றிகள் யாவை? அல்லது ஏன் தோல்வி ஏற்படுகின்றது? (Are there any successes or failures?) Why?...
மேற்கண்ட வினாக்களுக்கான உங்கள் அனைவரினதும் விடைகள் ஒரே மாதிரியானவையாக அமைய மாட்டாது. நீங்கள் வாழும் பிரதேசம், நாடு, இனம், பேசும் மொழி, போன்ற காணிகளின் அடிப்படையில் விடைகள் வெவ்வேறுபட்டவையாக அமையக்கூடும்.   

கல்வியின் பிரதான எழுவினாக்கள் 

உலகளாவிய ரீதியில் கல்வியின் எழுவினாக்களாக பின்வரும் சில விடயங்களை கூறலாம். 
  • தொழினுட்பம் சார்ந்த எழுவினாக்கள்
  • பிள்ளையின் கல்வி உரிமையை தீர்மானிக்கும் பிரகடனங்கள், சமவாயங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள உண்ணாட்டு சட்ட ஏற்பாடுகளும் நடவடிக்கைகளும் 
  • கல்வியின் ஒப்புரவை (Equity)(சமபங்கினை) பாதிக்கும் காரணிகள் 
  • கல்வியின் தரம் 
  • கல்வியின் பொருத்தப்பாடு 
  • வரவுசெலவு திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு
  • விழுமியப் பண்புகளின் விருத்திக்கான தேவை   

தொழினுட்பம் சார்ந்த எழுவினாக்கள்

இன்றைய கல்வியினை வேறு ஒரு வடிவத்துக்கு இட்டு சென்றதில் தொழினுட்பம் மிக முக்கிய இடம் வகிக்கின்றது. தொழினுட்பத்தின் வளர்ச்சி இன்று கற்றல் கற்பித்தலுக்கான அணுகலை எளிதாக்கி உள்ளது. பாரம்பரிய வகுப்பறைகள் துரிதமாக மறைந்து வருகின்றன. கற்றல் அனுபங்களை பெற்றுக் கொள்வதில் மாணவர்கள் வெறுமனே வகுப்பறை போதனைகளில் மட்டும் தங்கியிராது, வெவ்வேறான கற்றல் அனுபவங்களை பெற்றுக் கொள்ள தொழினுட்பம் உதவுகின்றது. 

தொழினுட்பத்தை கொண்டு உண்மை கற்றல் அனுபவங்களுக்கு ஒத்ததான அனுபவங்களை பெற்றுக் கொள்ள வழியேற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களின் வகிபங்கு கற்றலை சாத்தியப்படுத்துபவர்களாக மாறி உள்ளது. எனவே இந்த தொழினுட்ப பயன்பாடுகள் குறித்து ஆசிரியர்கள் தம்மை இற்றைப்படுத்தி கொள்வது முக்கியமானது. இதற்கான பயிற்சிகள், புதிய தொழினுட்பங்களை பெற்றுக் கொள்ளல் போன்றவற்றில் நாடுகளுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன.   

அண்மையில் ஏற்பட்ட கொவிட் பெருந்தொற்றின்போது, உலகளாவிய ரீதியில் சகலவிதமான கல்வி நடவடிக்கைகளும் பாதிப்புக்கு உள்ளாகின. இதன்போது மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை ஓரளவுக்கேனும் தொலைநிலைக் கற்றலாக மேற்கொள்வதற்கு இத்தொழினுட்பம் எமக்கு பேருதவியாக அமைந்தது.  எனினும், இந்த தொழினுட்பங்களுடன் இணைந்த கற்றல் நடவடிக்கைகள் வறுமையில் வாடும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு, மற்றும் கஷ்ட பிரதேசங்களில் வாழும் பிள்ளைகளுக்கு சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. 

இன்று, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதனால் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மின்சார தடை, நவீன தொழினுட்ப சாதனங்களில் ஏற்பட்டுள்ள அதீத விலையேற்றம் தொலைக்கற்றல் நடவடிக்கைகளையும் வெகுவாகப் பாதித்து உள்ளன. 

பிள்ளையின் கல்வி உரிமை

கல்வி தொடர்பான எழுவினாக்களில் பிள்ளையின் கல்வி உரிமையை தீர்மானிக்கும் பிரகடனங்கள், சமவாயங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள உண்ணாட்டு சட்ட ஏற்பாடுகளும், நடவடிக்கைகளும் அடுத்து முக்கியம் பெறுகின்றன. உலகில் பிறந்த ஒவ்வொரு பிள்ளையும் கல்வி கற்பதற்கான உரிமையினைக் கொண்டுள்ளனர். 

இதனை உறுதிபடுத்தும் வகையில் 1948 யில் ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமை பிரகடனம் உள்ளது. இதன்படி ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்கும் உரிமை உண்டு. குறைந்தபட்சம் ஆரம்ப மற்றும் அடிப்படை நிலைகளில் கல்வியை கட்டாயமாகப் பெறுவதற்கான  உரிமையினை அது கொண்டுள்ளது.  இதனை ஏற்றுக் கொண்ட நாடுகள், தத்தமது நாடுகளில் உள்ள ஒவ்வொரு பிள்ளையின் ஆரம்பக் கல்வியினை கட்டாயமாக வழங்கவேண்டிய பொறுப்பினைக் கொண்டுள்ளன. 

இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில்  1989 ஆம் ஆண்டில் சிறுவர் உரிமைகளுக்கான சமவாயம் (CRC) ஏற்படுத்தப்பட்டது. இதன்பிரகாரம், ஒவ்வொரு பிள்ளையும் கல்வி பெறுவது அடிப்படை உரிமையாக அமைகின்றது. ஆரம்பக்கல்வி கட்டாயமான இலவசக் கல்வியாக அமைதல் வேண்டும். மேலும் இக்கல்வியானது, சம வாய்ப்பினை உறுதிப்படுத்தியதாக அமைவதுடன் பிள்ளையின் தொடரான முன்னேற்றத்தை உறுதிசெய்யும் வகையில் அமைதல் வேண்டுமாகின்றது. 

மனித உரிமைகள், சிறுவர் உரிமைகளில் உறுதிப்படுத்தப்பட்ட கல்வி உரிமைகளை பேணும் வகையில் ஒவ்வொரு நாடும் அதற்குரிய சட்ட ஏற்பாடுகளை கொண்டிருத்தல் வேண்டும்.  மேலும், உலகில் பல்வேறு கால கட்டங்களில் மேற்கொள்ளப்படும் கல்வி தொடர்பான சர்வேதேச பிரகடனங்களில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதை, குறிப்பிட்ட அரசாங்கங்கள் உறுதி செய்ய வேண்டி உள்ளன. 


இதன்படி, உலகில் பின்வரும் முக்கியமான கல்வி மாநாடுகள் இடம்பெற்று பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படுள்ளன. அவற்றை குறிப்பிட்ட காலப்பகுதிகளில் அடைந்து கொள்வது ஒவ்வொரு நாடுகளினதும் பொறுப்பாக உள்ளன. 
  •  1990- ஜோம்தியன் மாநாடு - அனைவருக்கும் கல்வி எண்ணக்கரு
  • 1994- விசேட தேவை கல்வி தொடர்பான சாலமன்கா பிரகடனம் (World Conference on Special Needs Education, held in Salamanca, Spain)
  • 2000 -April இலான அனைவருக்கும் கல்வி தொடர்பான டாகார் பிரகடனம் - இதன்படி 2015 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வியை குறிப்பாக ஆரம்பக் கல்வி உட்பட ஆறு கல்வி இலக்குகளை அடைந்து கொள்வது 
  • 2000 - செப்டம்பர் -மிலேனிய அபிவிருத்தி இலக்குகள் (MDG) - இதன்படி 8 MDG இலக்குகளை 2015 க்குள் அடைய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது 
இன்றைய சமகாலத்தில் மேலே கூறிய பிரகடனங்கள் காலம் கடந்தவையாக இருந்த போதிலும், அவற்றில் பரிந்துரைக்கப்பட்ட  விடயங்கள் எந்தளவு தூரம் உலக நாடுகளில் குறிப்பாக எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என ஆராய்வது முக்கியமாகும். 

மேற்கண்ட அனைவருக்கும் கல்வி தொடர்பான மிலேனிய கல்வி இலக்குகளின் தொடர்ச்சியாக,  21.05.2015 இல் கொரியா குடியரசின் இன்சியானில் நடைபெற்ற உலக கல்வி மன்றத்தில் (WEF 2015) கல்வி தொடர்பான பின்வரும் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது: 

அனைவரையும் உள்ளடக்கிய (Inclusive) மற்றும் ஒப்புரவான (Equity)  தரமான (Quality) கல்வி மற்றும் வாழ்நாள் நீடித்த (Life Long) கற்றலை 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் உறுதிப்படுத்தல்.

மேலும், மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளின் தொடர்ச்சியாக நிலையான அபிவிருத்தி இலக்குகள்உருவாக்கப்பட்டன. இதில் பதினேழு இலக்குகள் காணப்பட்டன. இவற்றை  2030 ஆம் ஆண்டுக்குள் நாம் அடைய வேண்டி உள்ளது. 

மேற்கண்ட பதினேழு இலக்குகளில் பல நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கல்வியுடன் தொடர்புபடுகின்றன. இந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கு இன்றிலிருந்து இன்னும் எட்டு வருடங்கள் எஞ்சியுள்ள நிலையில், எந்தளவு இந்த இலக்குகளின் உப நடவடிக்கைகள் நாடுகளில் குறிப்பாக இலங்கையில் நடைமுறைப்படுத்தபட்டுள்ளன என நோக்குவது சமகால எழுவினாக்களில் ஒன்றாக அமையும் எனலாம். 

கல்விக்கான ஒப்புரவை பாதிக்கும் காரணிகள் 

ஒப்புரவு எனின், நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையினை குறிப்பதாக அமைகின்றது. கல்வியில் சம அந்தஸ்தினை இது குறித்து நிற்கின்றது. அனைவரும் கல்வியில் சம அந்தஸ்தினை பெறுவது ஒரு முக்கிய விடயமாகும். ஒரு நாட்டில் வழங்கப்படும்  கல்வியானது,  ஏழை-பணக்காரன், நகரம்-கிராமம், ஆண்-பெண், இனம், மதம், மொழி என்ற வேறுபாடுகளைப் கவனத்திற் கொள்ளாமல், அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை வழங்குவது  அவசியமாகும். இந்த வகையில் , கல்விக்கான  ஒப்புரவை பின்வரும் காரணிகள் பாதிப்பதாக அமைகின்றன:

  • வறுமை: வறுமை கற்றலுடன் நேரடியாக தொடர்புபடுகிறது. வறுமைப் பின்னணி கொண்ட சமூகங்களில் இருந்து வரும் பிள்ளளைகள் கற்றல் அடைவுகளில் ஏனைய மாணவர்களை விட பின்தங்கி இருப்பர். போசாக்கான உணவு கிடைக்காமை, ஆரோக்கியமான சூழலை கொண்டிருக்கமை, பிற மாணவர்கள் கொண்டுள்ள கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொள்ள முடியாமை போன்ற காரணிகள் கல்வியில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி விடுகிறது. இலங்கையில் இதனை சமாளிக்கும் வகையில், இலவசக் கல்வி, இலவச பாடநூல், இலவச சீருடை, இலவச மதியபோசனம் போன்ற திட்டங்கள்அமலாகின்றன. எனினும், வறுமை கல்வியின் ஒப்புரவில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்த நிலைமையினை மேலும் தீவிரப்படுவற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனால் புதிய மாணவர்கள் இந்த வறுமை நிலைக்குள் செல்லப் போகின்ற நிலைமை உருவாகி உள்ளது. இதன்போது கல்வி பெறவரும் அநேக மாணவர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அனுபவிக்கும் அதே அனுபவங்களை பெறப் போகின்றனர். எனவே இதனை கருத்திற் கொண்டு, பாடசாலைக் கல்வியில் இருந்து அவர்கள் விலகி விடுவதனில் இருந்து பாதுகாக்கும் திட்டங்கள், பாடசாலை மட்டங்களில் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். 
  • அமைதியான விலகல் (Silent Exclusion) – கல்வியின் ஒப்புரவில் அமைதியாக இடம்பெறும்  விலகலும் பாதிப்பினை ஏற்படுத்துவதாக உள்ளது. வகுப்பறையில் உள்ள கற்றல் அடைவுகளில் பின்தங்கி உள்ள மாணவர்கள், அடிக்கடி வரவின்மையினை காட்டும் பிள்ளைகள் கல்வியில் இருந்து படிப்படியாக விலகும் அபாயம் உள்ளவர்களாக  இனங்காணப்படுகின்றனர். இத்தகைய பிள்ளைகள் உங்கள் வகுப்பறைகளில் காணப்படின்  அவர்களை அன்புடன் அணுகி அவர்களின்  கற்றல் தொடர்பாக கவனம் எடுத்தல் முக்கியமாகின்றது. 
இத்தகைய பிள்ளைகளை உங்கள் வகுப்பறைகளில் நீங்கள் கண்டதுண்டா? அப்படியாயின் தாமதிக்காது அவர்களுக்கான உங்கள் உதவிக்கரங்களை நீட்டுங்கள்.  
  • குடும்ப வருமானம்: வறுமை போலவே, குடும்ப வருமானமும் கல்வி ஒப்புரவில் செல்வாக்கு செலுத்துகிறது. கல்வி இலவசமாக வழங்கி வைப்பபட்ட போதிலும், பிள்ளைகளின் கல்வி தொடர்பாக மறைமுக செலவுகளை ஒவ்வொரு குடும்பமும் கொண்டுள்ளது. பாடசாலைக்கான போக்குவரத்து செலவு, மேலதிக கற்றல் வகுப்புக்கள், எழுதுகருவிகள், காகிதாகிகள், மற்றும்  புத்தகப் பை, பாடசாலை விசேட நிகழ்வுகள் போன்றவற்றுக்கான செலவுகள் என்பன காணப்படுகின்றன. இவை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில்  சமஅந்தஸ்தினை பேணுவதில் ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வருகின்றன. உதாரணமாக, வகுப்பறையில் உள்ள வசதி படைத்த குடும்பங்களின் மாணவர்கள் கொண்டு வரும் உயர்ரக கற்றல்சாதனங்கள் ஏனைய பிள்ளைகளில் ஒரு தாழ்வு மனப்பான்மை அல்லது அவற்றை தாமும் பெற வேண்டும் என்ற அவாவினை தோற்றுவித்து விடுகின்றன. இன்று (2022) இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்த நிலைமையினை மேலும் தீவிரப்படுத்தும் எனலாம். இதனை எதிர்கொள்வதற்கான விசேட செயற்றிட்டங்கள் கிராமிய, பிரதேச மட்டங்களில் முன்னெடுக்கப்படல் வேண்டும். 
  • பிள்ளைகளின் சுகாதாரம் : பாடசாலை மாணவர்கள் சுகாதாரம் கொண்டவர்களாக, ஆரோக்கியம் உடையவர்களாக காணப்படுதல் மிக முக்கியமாகும். இது கற்றலில் உடன்பாடான விளைவுகளைக் கொண்டுள்ளன. குடும்ப வருமானம், வறுமை, வாழும் சூழல் என்பன பிள்ளைகளின் சுகாதார நிலைமைகளினை தீர்மானிக்கின்றன. பாடசாலைகளிலும் சுகாதார பழக வழக்கங்களை பேணும் வகையில் வளங்கள் காணப்படல் வேண்டும். சுத்தமான நீர், சுத்தமான கழிவறை வசதிகள், கால ஒழுங்கில் ஏற்பாடு செய்யப்படும் மருத்துவ முகாம்கள்  என்பவற்றின் மூலம் இதனை உறுதி செய்ய முடியும். இவை எந்தளவில் உங்கள் பாடசாலைகளில் காணப்படுகின்றன?
  • மந்த போசனையும் மிகை போசனையும்: வறுமை, குடும்ப வருமானம் பிள்ளையின் போசனை நிலைமையினை தீர்மானிக்கின்றன. வறுமை, குறை-வருமானம் கொண்ட பிள்ளைகள் மந்த போசனை உடையவர்களாக இருப்பர். அயடீன், இரும்பு சத்துக்கள் குறைவான பிள்ளைகள் கற்றலில் போதிய கவனம் செலுத்துவதில்லை. அதேவேளை, வசதி கூடிய குடும்ப பிள்ளைகள் மற்றும் தவறான உணவு பழக்க வழங்கங்களை கொண்ட பிள்ளைகள், மிகை போசணை கொண்டவர்களாக பருத்த உடல் (பருமன்) களைக் கொண்டு காணப்படுவர். இத்தகையவர்கள் எனைய பிள்ளைகளின் பரிகாசத்திற்கு  இலகுவாக உட்படக் கூடியவர்கள். இதனால், இத்தைகைய மாணவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். இது,  கல்வியில் இருந்து படிபடியாக விலகும் தன்மையினைக்கு இட்டு செல்லும். இன்று (2022) இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பிள்ளைகளிடம் மந்த போசனை நிலைமையினை மேலும் தீவிரப்படுத்தும் எனலாம். இலங்கை தற்போது உலகின் மந்தபோசனை கொண்ட பிள்ளைகள் உள்ள நாடுகளில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளமை இங்கு கவலையுடன் குறிப்பிட வேண்டியுள்ளது. இதனை எதிர்கொள்வதற்கான விசேட செயற்றிட்டங்கள் கிராமிய, பிரதேச மட்டங்களில் முன்னெடுக்கப்படல் வேண்டும். 
  • பாடசாலை பெளதீக சூழல் மற்றும் வளங்களின் பரம்பல்: கல்வியின் ஒப்புரவினை பாதிக்கும் காரணிகளில் பாடசாலைகளில் காணப்படும் பெளதீக சூழல்,  வளங்களின் பரம்பலும் ஒன்றாகும். பாடசாலைகளில் சுத்தமான காற்றோட்டமுள்ள வகுப்பறைகள், ஆய்வுகூட வசதிகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற வளங்கள் சமமாக பரம்பிக் காணப்படல் கல்வியின் சம அந்தஸ்தினை உறுதி செய்யும் விடயமாக உள்ளது. இது எந்தளவுதூரம் எமது கல்வி நிறுவனங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளன?
  • சமய மற்றும் இன, சாதி ரீதியான புறக்கணிப்புக்கள்: பல சமயங்கள், இனங்கள் கொண்ட தேசமொன்றில் அனைவருக்கும் அவர்களின் சமயம், இன வேறுபாடுகள் கவனத்தில் கொள்ளாமல் கல்வி வாய்ப்புகள் வழங்கப்படல் வேண்டும். இத்தகைய புறக்கணிப்புக்கள் கல்வி ஒப்புரவினை வெகுவாக பாதிக்கும்.  ஒருவரின் சமய அடையாளத்தைக் கொண்டு, சாதி அமைப்பினைக் காரணம் கூறி,  நிற வேறுபாட்டை கொண்டு கல்விக்கான சம சந்தர்ப்பம் மறுக்கப்படும் பல நிகழ்வுகளை நாம் தினமும் கண்டும் கேட்டும் வருகிறோம்.   
  • பால்நிலைத் தன்மை (Gender): கல்வியின் ஒப்புரவில் பாதிப்பினை ஏற்படுத்தும் இன்னொரு முக்கிய காரணி பால்நிலைத்தன்மை ஆகும்.  இது பாலினம், பாலின பாத்திரங்கள், பாலின வேறுபாடு, பாலின சமத்துவம், மற்றும் தக்கவைத்தல் ஆகியவற்றுடன்  தொடர்புடையது. ஆண்-பெண் பால் வேறுபாடு கவனத்தில் கொள்ளாமல் கல்வியை பெற்றுக் கொள்வது பிள்ளையின் அடிப்படை உரிமையாகும். இது ஒவ்வொரு நாடுகளிலும் உறுதி செய்யப்பட்டு இருத்தல் வேண்டும். பாடநூல்களில், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பால்நிலைத் தன்மை யின் சம உரிமை பேணப்படல் வேண்டும்.  கட்டாயக்கல்வி, இலவசக் கல்வி தனியான பெண் பாடசாலைகள் என்பற்றின் மூலம் பல  நாடுகளில் இது உறுதிப்படுத்தப்பட்டாலும்    குடும்ப வறுமை, சிறுவர் தொழில், சிறுவயது திருமணம்,  பாதுகாப்பு, பாடசாலைக்கான அதிக தூரம், போக்குவரத்து, போன்ற இன்னோரன்ன காரணிகளால் பெண்களின் கல்வி பங்குபற்றல் குறைவடைகிறது. அதேவேளை, கல்வியில் ஆண்-பெண் சமவாய்ப்பு வழங்கப்படும் சில நாடுகளில் ஆண்களின் கல்வி பங்குபற்றல் குறைவடைந்து போகும் தன்மையும் அவதானிக்கப்படுகிறது. நீண்ட கால பாடசாலைக் கல்வியில் வெறுப்புற்று, விரைவில் சம்பாதிக்க வேண்டும் எனும் ஆசையில் கல்வியை விட்டும் விலகும் ஆண் மாணவர்களின் தொகை, மற்றும் பரீட்சைகளில் சித்தி அடையும்பெண் மாணவிகளின் தொகையில் ஏற்படும் அதிகரிப்பு என்பன கல்வியில் ஆண்-பெண் சம பங்குபற்றலை பாதிப்படையச் செய்கின்றன.  

கல்விக்கான அரச நிதி ஒதுக்கீடு 

கல்வியின் சமகால எழுவினாக்களில் கல்விக்கு அரசின் வருடாந்த நிதி ஒதுக்கீடும் ஒன்றாக அமைகின்றது. தரமான கல்வியினை வழங்க வேண்டுமாயின் அரசாங்கம் கல்விக்கு  போதுமான நிதியினை ஒதுக்குதல் வேண்டும். வளர்ச்சி அடைந்த  நாடுகள் தமது நாட்டு பிரசைகளுக்கு தரமான கல்வியினை வழங்க  போதுமான நிதியை ஒதுக்குவதன் காரணமாக, அந்நாடுகள் அறிவியல், தொழினுட்ப வளர்ச்சிகள் கண்டு வருகின்றன. ஆனால், வளர்ந்து வரும் நாடுகள், கல்விக்கு சொற்பமான அளவில்  நிதியினையே ஒதுக்குவதன் காரணமாக கல்வி தொடர்பான பிரச்சினைகளை அவை அனுபவித்து வருகின்றன. இலங்கையில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 6% அளவிலாவது காணப்படல்  வேண்டும் என்று அரசை வலியுறுத்தி போராட்டங்கள் சில காலங்களுக்கு முன் மக்களால் முன்னேடுக்கப்பட்டதை இங்கு நினைவில் கொள்ளலாம். ஆயினும் இலங்கையில் கல்விக்காக இன்னும் போதுமான அளவு நிதிகள் ஒதுக்கப்படுவதில்லை என்பதே உண்மையாகும். 

கல்வியின் பொருத்தப்பாடு 

ஒரு நாட்டின் கல்வியானது, எதிர்கால வேலையுலகினை கருத்தில் கொண்டு இன்றைய மாணவர்களை தயார்படுத்தும் உற்பத்தி செயற்றிறன் நோக்குகளை கொண்டதாக இருத்தல் வேண்டும். இன்னும் பத்து வருடங்களில் உலகில் Automation, Artificial Intelligence, Machine Learning, Software engineering போன்ற தொழில் துறைகளில் பணியாற்ற வேண்டிய நபர்களை வேண்டுவதாக உள்ளது. இத்தகைய காலப்பகுதியில் தொழிலாளர்கள் மிகுந்த மன அழுத்தம் கொண்டவர்களாக உளவியல் சிகிச்சைகளை வேண்டியவர்ககளாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்டுகின்றது. அத்தகையதொரு எதிர்காலத்திற்க்கு தேவையான பிள்ளைகளை தயாரிப்பதற்கு இன்றைய கல்வி முறை யில் ஏற்பாடுகள் உள்ளனவா? என நீங்களே ஒரு முறை கேட்டுப் பாருங்கள். 

ஒருபுறம் தேர்ச்சி மைய கல்விமுறை அமலாக்கப்பட வேண்டும் எதிர்பர்ர்க்கப்டுகின்றது. அதேசமயம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை தொடக்கம் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை வரை போட்டிமிக்க பரீட்சை மையக் கல்வியினையே நாம் கொண்டுள்ளோம். இத்தகைய முரண்பட்ட கல்விக் கொள்கைகள் இன்றைய மாணவர்களை நாளைய உலகில் சுதந்திர தொழில் முயற்சியாண்மை கொண்டவர்களாக நிச்சயம் மாற்றாது என்பது திண்ணம். எனவே இந்த போட்டி மைய அல்லது பரீட்சைகளை அடிப்படையாக கொண்டு கல்வி முறையை நடைமுறைப்படுத்தாது, மாணவர்கள் வாழ்க்கைக்கு தேவையான தேர்ச்சிகளில் பாண்டித்தியம் பெரும் வகையில் கல்விமுறை மாற்றப்படல் வேண்டும். 

விழுமிய பண்புகளின் விருத்தி 

வளர்ச்சியடைந்த நாடுகளில், பாடசாலை மாணவர்களை சக மாணவனே துப்பாக்கியினால் சுட்டுக்கொல்லும் செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். எமது நாட்டில் பிரபல்யமான பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டுகளின் இறுதியில் மாணவர்கள் வன்முறையினை வெளிக்காட்டும் செய்கைகளில் ஈடுபடுவதையும் நாம் காணுகிறோம்!
மாணவர்கள் பயன்படுத்தும் நவீன இணைய அடிப்படையிலான விளையாட்டுகள், நவீன சினிமாக்கள் மாணவர் மனதில்  வாழ்க்கை பற்றிய பிழையான நடைமுறைகளை விதைத்து விடுகின்றன. மேலும், பல்கலாசார, பல்லினத் தன்மைகளைப் பேணி வாழும் பண்புகளும் இன்றைய மாணவர்களிடத்தில் குறைந்து வருகின்றன.  இதன்காரணமாக, வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமாக தேவைப்படும்  விழுமிய பண்புகளை விருத்தி செய்வதற்குரிய முக்கியத்துவத்தை இன்றைய கல்விமுறையில்  ஏற்படுத்துதல் வேண்டும். 
இலங்கையில் பாடசாலை மட்டங்களில், பிற மத, இனங்களை மதித்து நடக்கும் பண்புகளை விருத்தி செய்யும் பல செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. வாழ்க்கை தேர்ச்சிகள் பாடம், குடியியல் கல்வி மற்றும்  சமயப் பாடங்கள் மூலம் இவை கற்பிக்கப்பட்டாலும், விழுமிய பண்புகளை விருத்தி செய்யும் செயற்பாடுகளை பாடசாலைகளில் மேலும் வலுவூட்ட  வேண்டியுள்ளது. 

முடிவுரை 

விரைந்து வளர்ந்து வரும் அறிவியல், தொழினுட்பம், தகவல் தொழினுட்பங்கள் உலகில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இவை கல்வியினை வேறு வடிவங்களுக்குள் இன்று எடுத்து சென்றுள்ளன. கல்வியில் ஏற்பட்டுள்ள இந்த நவீன போக்குகள் கல்விக்கான அணுகல், கல்வியின் தரம், கல்வியின் ஒப்புரவு மற்றும் கல்வியின் பொருத்தப்பாடு ஆகியவற்றில் நாடுகளுக்கு இடையில், சமூகங்களுக்கு இடையில் சவால்கள், பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளன. இந்த பிரச்சினைகளுக்கான காரணிகள் இந்த கட்டுரையில் சமகால எழுவினாக்கள் என்ற தலைப்பில் மேலோட்டமாக ஆராயப்பட்டுள்ளது. 
 

ஆக்கம்: கலாநிதி .எப்.எம்.நவாஸ்தீன்
பேராசிரியர்
கல்விப்பீடம் 
 இலங்கை திறந்த பல்கலைக்கழகம்


   

விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...