கல்வியும் அரசியலும்

 

கல்வியும் அரசியலும்



எப்.எம்.நவாஸ்தீன்,
 பேராசிரியர்,
 இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

1.0 அறிமுகம்

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளில் அந்நாட்டின் கல்வி முறைமைக்கு ஒரு முக்கிய இடமுண்டு. ஒரு நாட்டின் கல்வி அல்லது கல்வி முறைமை என்பது வெறுமனே பாடசாலைக் கல்வியினை மட்டும் குறிப்பதாக அமையாது. மாறாக கல்வியின் ஒட்டுமொத்த செயன்முறைகளையும் உள்ளடக்குவதாக அமையும். ஒரு நாட்டின் கல்வி முறைமையினை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக அந்நாட்டின்  அரசியல் விளங்குகிறது. கல்வியும் அரசியலும் ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்தது. மேலும், ஒரு நாட்டின் கல்வி, மற்றும் அரசியல் ஆகியன ஒவ்வொன்றும் மற்றயதின் விதியினை தீர்மானிக்கும் வகையில் செல்வாக்கு செலுத்துகின்றவகையில் நெருங்கிய இடைத் தொடர்பை கொண்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது (Politics and Education live in a symbiotic relationship with each influencing the fate of the other).  இதனை விளங்கிக்கொள்ளும் வகையில், இக்கட்டுரையில் கல்விக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பு எடுத்து நோக்கப்படுகிறது.  

2.0 கல்வி

கல்வி என்பது கற்றலை எளிதாக்கும் ஒரு செயன்முறை ஆகும். கல்விச் செயன்முறையானது மக்களிடையே  அறிவு, திறன்கள், விழுமியங்கள், அறநெறிகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் தனியாள் விருத்திகளை பெற உதவக் கூடியதாக இருக்கும். கல்வி நல்வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும், மேலும் இது ஒரு நாட்டின்  பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தின் அளவீட்டில் பயன்படுத்தப்படுகிறது,  ஒரு நாடு அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடைந்து அவரும்,  அல்லது அபிவிருத்தியடையாத நாடு என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக கல்வி விளங்குகிறது. ஒரு நாட்டின் கல்வி என்பது முறைசார், முறைசாரா மற்றும் முறையில் கல்வி முறைமைகளையும், அந்நாட்டின் கல்வித் தத்துவங்கள், கல்வி இலக்குகள், பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, கலைத்திட்டம், கற்பித்தல் முறைகள், கற்பித்தல் சாதனங்கள், கல்விசார், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் போன்ற சகல அம்சங்களையும் உள்ளடக்கிக் காணப்படும்.

3.0 அரசியல்

அரசியல் எனும் பதம் , இலத்தீன் மொழியில் Politicus, கிரேக்க மொழியில், பொலிடிகா (Politiká) என்ற பதங்களில் இருந்து  உருவானது. அரசியல் என்பது மனித வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு விடயமாக  விளங்குகிறது. மனித வரலாற்றில் சமூதாயங்கள் ஒன்றாக கூடி வாழவும், தமது பொருளாதார ஒழுங்குமுறைகளை தீர்மானிப்பதற்காகவும் தோன்றிய தத்துவமே அரசியல் என்று கூற முடியும். இன்ரூ அரசியல் என்பது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான செயன்முறையாக நோக்கப்படுகிறது (the process of exercising power). அரசியல் என்பது குழுக்களில் முடிவுகளை எடுப்பதோடு தொடர்புடைய செயல்பாடுகளின் தொகுப்பாகும், அல்லது வளங்கள் அல்லது அந்தஸ்து போன்ற தனிநபர்களுக்கு இடையிலான அதிகார உறவுகளின் பிற வடிவங்களைக் குறிப்பதாகவும் அமைகிறது. ஒரு நாட்டின் அரசியல் என்று கூறும் போது, நாட்டின் ஆட்சிமுறைமை, ஆட்சியாளர்கள், ஆட்சியாளர்களின் தீர்மானம் எடுக்கும் முறைகள்,சட்ட அமைப்பு, நீதித்துறை, ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகள்  போன்றவற்றின்  ஒட்டுமொத்த செயன்முறைகளையும் உள்ளடக்கிய வகையில் அரசியலை அரசியல் முறைமையாக இங்கு எடுத்து நோக்க வேண்டியுள்ளது. ஒரு நாட்டின் அரசியல் முறைமை அந்நாட்டின் ஆட்சி முறைகளை தீர்மானிக்கின்றது. இதற்கேற்பவே அந்நாட்டின் கல்விமுறைமைகளும் தீர்மானிக்கப்படுகிறது. அரசியல் கல்வி முறைமையில் செல்வாக்கு செலுத்துகிறது. அதேபோல் கல்வி நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறது. அரசியல் ஒரு நாட்டின் கல்வி தத்துவம், கல்வி இலக்குகள், கல்வி வழங்கப்படும் விதம், கற்பித்தல் முறைகள், ஆளணியினர், வசதிகள், கற்பித்தல் சாதனங்கள், மதிப்பீட்டு முறைகள் போன்றவற்றை தீர்மானிக்கின்றது

4.0 ஆட்சி முறைகளும் கல்வியும்

உலக நாடுகளில் காணப்படும் ஆட்சி முறைகளை சற்று உற்று நோக்குவீர்களாயின், உலகின் எங்கிலும் ஒரே மாதிரியான ஆட்சி முறைகளை கொண்டதாக இல்லை என்று இலகுவாக உங்களால் எளிதில் கூறிவிடுவீர்கள்!. நாடுகளில், ஜனநாயகம் (Democracy), கம்யூனிசம் (Communism), சோசலிசம் (Socialism), தன்னலக்குழு (Oligarchy), பிரபுத்துவம் (Aristocracy), முடியாட்சி (Monarchy), இறையாட்சி (Theocracy), காலனித்துவம் (Colonialism), சர்வாதிகாரம் (Totalitarianism), மற்றும் இராணுவ சர்வாதிகாரம் (Military Dictatorship) என ஆட்சிகள் வேறுபட்டு அமைவதை காணலாம். இத்தகைய நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள சித்தாந்தங்கள், ஆட்சியாளர்களின் விருப்புகளுக்கு ஏற்பவே அந்நாட்டின் கல்விமுறைமை தீர்மானிக்கப்படும். மேலும், இத்தகைய கல்வி முறைமையினால் மாணவர்களும் குறிப்பட்ட அரசியல் சித்தாந்தங்கள் அல்லது ஆட்சியாளர்களின் விருப்புகளை நிறைவேற்றக் கூடியவர்களாவே பெரும்பாலும் உருவாக்கப்படுவர்.

உதாரணமாக ஒரு கம்யூனிசஅல்லது சோஷலிச அமைப்பில், கல்வி என்பது பெரும்பாலும் சோசலிச விழுமியங்கள்  மற்றும் இலட்சியங்களை மேம்படுத்துவதற்கும் புகுத்துவதற்கும் ஒரு வழிமுறையாகவே கருத்தில் கொள்ளப்படும்.. அரசாங்கம், மத்திய அதிகாரம் என்ற முறையில், கம்யூனிசத்தின் கொள்கைகளுடன் இணைந்த கல்வி முறையை கட்டுப்படுத்துகிறது மற்றும் வடிவமைக்கிறது. பொதுவாக கூட்டுறவு இலக்குகள், சமூக சமத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிய சிந்தனைகள்  கல்வியில் மேலோங்கி காணப்படும்.  கலைத்திட்டம் மற்றும் கல்வி சாதனங்கள்  பெரும்பாலும் கம்யூனிச சித்தாந்தத்தை வலுப்படுத்தவும் ஆளும் கட்சிக்கு விசுவாசத்தை மேம்படுத்தக் கூடிய வகையில்  வடிவமைக்கப்படும்.  மேலும், கம்யுனிச,  சோசலிச அரசின் பொருளாதார நோக்கங்களை முன்னேற்றுவதற்குத் தேவையான திறன்களை வளர்ப்பதற்கான ஒரு கருவியாகக் கல்வியைக் காணலாம்.

மாறாக,  ஒரு ஜனநாயக அமைப்பில், கல்வி பொதுவாக ஒரு சுதந்திரமான மற்றும் தகவலறிந்த சமூகத்தின் தூணாகவே கருத்தில் கொள்ளப்படும். ஜனநாயக அரசாங்கங்கள் தனது குடிமக்களிடம் விமர்சன சிந்தனையை வளர்ப்பதிலும், சுறுசுறுப்பான குடியுரிமை மற்றும் ஈடுபாடுள்ள வாக்காளர்களின் வளர்ச்சியில் பந்க்ளைக்கும் வகையில்   கல்வியினை வழங்க முற்படும்.  ஜனநாயக சமூகங்களில், கல்விக் கொள்கைகள் தனிப்பட்ட உரிமைகள், சுதந்திரங்கள் மற்றும் பலதரப்பட்ட கண்ணோட்டங்களை மதிக்கும் அதே வேளையில், கல்விக்கான உலகளாவிய அணுகலையும் உறுதி செய்வதாகக் காணப்படும். இத்தகைய நாடுகளின் பாடசாலை கலைத்த்திட்டம் பெரும்பாலும் குடியுரிமைக் கல்வி, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரந்த அளவிலான பாடங்களை உள்ளடக்கி காணப்படும். மேலும், ஜனநாயக அரசாங்கங்கள் பாடசாலைக் கல்வி தொடர்பான கொள்கைகளை வடிவமைக்கும் போது,  துறைசார் நிபுணர்கள், கல்வியாளர்கள், கல்விசார் பங்குதாரர்கள், பல்வேறு சமூக, இனக்  குழுக்கள் ஆகியவற்றின்  பங்களிப்பினையும் பெற்றுக் கொள்ள முற்படும். 

5.0 அரசியல் -கல்வி தொடர்பை விளக்கும் சில உதாரணங்கள்

கல்வி மற்றும்  அரசியல் ஆகியவற்றுக்கு இடையிலான இடைத்தொடர்பை சில உதாரணங்களில் இருந்து விளங்கிக் கொள்ள முடியும்.

உதாரணம் I: தேசியப் பற்று /நாட்டு பற்று கல்வி மூலம் வழங்கப்படும் சமூகம், எந்தவொரு நிலையிலும் குறித்த நாட்டின் அரசியல் முறைமையினை பாதுகாக்க இராணுவத்தில் இணைய முன்வருதல். வேறு சில சந்தர்ப்பங்களில் அரசை பாதுகாப்பதை தவிர்ப்பதுடன் தேவை ஏற்படும் போது அரசை அல்லது அரசியல் முறைமையினை தூக்கி எறியவும் முற்படல்.

உதாரணம்II: அரசியலில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களின் (சனாதிபதி,பிரதமர், அமைச்சர்...) பிரதேசங்கள் மற்றைய பகுதிகளை விட அதிக, சிறந்த பாடசாலை வளங்கள், வசதிகள், ஆசிரிய நியமனத்தில் மேலோங்கி காணப்படல். பக்கச் சார்பான அபிவிருத்தி காணப்படல் .

உதாரணம் III: பல்சமய நாடொன்றில் – பெரும்பான்மை மத அல்லது ஆட்சி அதிகார பலமுள்ள மதம் –தனது மத சார் நம்பிக்கைகளை கல்விக்குள் கொண்டு வரல்

உதாரணம் IV:  நாட்டின் ஆளும் தரப்பு சார்ந்துள்ள அரசியல் சித்தாந்தம் கல்வியில் பிரதிபலித்தல்

6.0 கல்வியில் அரசியல் செல்வாக்கு (Political Influence on Education)

கல்வி முறைமையில்  அரசியல் பின்வரும் மூன்று வழிகளில் செல்வாக்கு செலுத்துகின்றது:

(A) கல்வியினைப் பெறுதல், கல்விக்கான ஒத்துழைப்பு என்பதிலான செல்வாக்கு. அதாவது யார் கல்வியை பெற முடியும், எந்த வகையான கல்வியைப் பெற முடியும், எவ்வளவு கால அளவு கல்வியைப் பெற முடியும், எத்தகைய தரத்தில் (Quality) கல்வியை வழங்குவது, கல்விக்கான வசதிகளை எவ்வாறு வழங்குவது போன்ற விடயங்கள் இதில் உள்ளடங்கும்.

(B) கல்வியின் உள்ளடக்கம் மற்றும் செயன்முறைகளின் மீதான செல்வாக்கு. இதில் "கல்வியின் மூலம் என்ன கற்பிக்கப்படல் வேண்டும் எவ்வாறு கற்பிக்கப்படல் வேண்டும் அவற்றை எவ்வாறு கணிப்பீடு மதிப்பீடுகளுக்கு உற்படுத்தபடல் வேண்டும் என்பது போன்ற விடயங்கள் உள்ளடங்கும்.  

(C) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் பங்குபற்றுவதில் உள்ள செல்வாக்கு.  இதில், கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூக மற்றும் அரசியல் விடயங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, அவை சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபட எந்தளவு சுதந்திரம் உடையவர்களாக உள்ளனர் என்பதனை குறிக்கும் எனலாம்.

7.0 அரசியலில் கல்வியின் செல்வாக்கு

மேலே குறிப்பிட்டது போல அரசியல் கல்வியில் நேரடியாக செல்வாக்கு செலுத்துகிறது. அதேபோல் ஒரு நாட்டின் கல்வியானது நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசியலை வழிப்படுத்துகிறது என்று கூறலாம். பின்வரும் வழிகளில் கல்வி அரசியலை பாதிக்கின்றது:

  1. அரசியல் சமூகமயமாக்கல் அல்லது குடியுரிமை பயிற்சி [Political socialization or citizenship training] 
  2. அரசியல் சட்டம் [Political legitimation} 
  3. மனிதவள உற்பத்தி (Manpower production]
  4. அதிகார வரிசைக்கு பணியாளர்களை வரிசைப்படுத்துதல் [Sorting of personnel for the power hierarchy]
  5. சமூக மதிப்பீடு மற்றும் வியாக்கியானம் செய்தல் [Social assessment and interpretation]
  6. சமூக கட்டுப்பாடு [Social control]
  7. சமூக மாற்றத்தின் தூண்டுதல் Stimulation of social change]
அரசியல் சமூகமயமாக்கல்

அரசியல் சமூகமயமாக்கல் என்பது தனிநபர்கள் அரசியல் அணுகுமுறைகள், விழுமியங்கள், நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகளை மாணவர்கள்  கற்றுக் கொள்ளும்  செயன்முறையைக் குறிக்கிறது. இது அரசியல் அறிவு மற்றும் அரசியல் அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் செயன்முறைகள் பற்றிய புரிதலின் பரிமாற்றத்தை உள்ளடக்கியுள்ளது. 

குடியுரிமை பயிற்சி என்பது அரசியல் சமூகமயமாக்கலின் ஒரு பகுதியாகும், இது தனிநபர்களுக்கு அவர்களின் கடமைகள் , உரிமைகள், பொறுப்புகள் மற்றும் ஜனநாயக செயற்பாட்டில் பங்கேற்பது குறித்த அம்சங்களில்  கல்வி கற்பதில் கவனம் செலுத்துகிறது.

கல்வியின் ஊடாக மாணவர்கள் அரசியல் சமூகமயமாக்கலுக்கும் (Political Socialization), குடியுரிமை பயிற்சிக்கும் (Citizenship training) உட்படுத்தப்படுகின்றனர். கல்வி முறைமையின் ஊடாக வழங்கப்படும் அரசியல் அறிவு, திறன்கள், மாணவர்களின் எதிர்கால அரசியல் பங்குபற்றலை (தனது சுய கருத்துக்கள் நம்பிக்கைகளின் அடிப்படையில் அரசியல் செயன்முறையில் பங்குபற்றுவது)  வழிப்படுத்துகிறது. அரசியல் சமூகமயமாக்கல் என்பது மக்கள் தங்கள் அரசியல் அணுகுமுறைகள், நம்பிக்கைகள், கருத்துகள் மற்றும் நடத்தைகளைப் பெறுவதற்கான செயல்முறையாகும். அரசியல் சமூகமயமாக்கல் என்பது "அரசியல் நோக்கில்  தம்மை சுற்றியுள்ள உலகில் அதிகாரம் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது (மற்றும் இருக்க வேண்டும்) என்பது பற்றி தனிநபர்களின்  கருத்துக்களை வடிவமைக்கும் ஒரு செயன்முறையாகும். அரசியல் சமூகமயமாக்கலை மாணவர்கள் பெரும் வகையில் ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரையிலான கல்வி முறைமையில் நேரடியான, மறைமுக செயற்பாடுகளை கல்வி முறைமை கொண்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள்  நீண்ட காலமாக அரசியல் சமூகமயமாக்கலின் முகவர்களாகக் கருதப்படுகின்றன, இது நடைமுறையில் உள்ள சமூக நியமங்களுக்கான  ஆதரவைக் கட்டமைக்க உதவுகிறது. குடும்பம், நண்பர்கள், சுற்றியுள்ள சூழல் மற்றும் வெகுஜன ஊடகங்களுடன், அரசியல் விழிப்புணர்வை வளர்ப்பதால், இளைஞர்கள் மீது பாடசாலைகள்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பாடசாலை கல்வி மூலம் மாணவர்கள் பின்வரும் உரிமைகள் தொடர்பாக அறிந்து கொள்கின்றனர்:

  • இயற்கை உரிமைகள் (அன்புக்கான உரிமைகள், வாழ்வதற்கான உரிமைகள்)  Natural Rights (Rights to love, Rights to Life)
  • அரசியலமைப்பு உரிமைகள் (வாக்களிக்கும் உரிமைகள், சுதந்திரத்திற்கான உரிமைகள்) Constitutional Rights (Rights to suffrage, Rights to freedom).
  • சட்டபூர்வ உரிமைகள் (சொத்துக்கான உரிமைகள்) Statuary Rights  (Rights to inherit property)

மாணவர்கள் அரசியல் சமூகமயமாக்கல் தொடர்பாக அறிவு, திறன்கள், நம்பிக்கைகளை பெற்று கொள்வதற்கு வழிமுறையாக குடியியல் பாட எண்ணக்கருக்கள் தனிப்பாடமாகவும், வேறு பாடங்களுடன் இணைந்த வகையிலும் கற்பிக்கப்படுகின்றன. அதேபோன்று கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்டும் இணைப்பாட விதான செயற்ப்பாடுகள் ஊடாகவும் மாணவர்கள் குடியியல் பயிற்சிகளை பெற்று கொள்கின்றனர். இத்தகைய அரசியல் சமூகமயமாக்கல் மற்றும் குடியியல் பயிற்சிகள் மாணவர்களை எதிர்காலத்தில் அரசியல் பங்குபற்றலில் செல்வாக்கு செலுத்துகிறது. இது தவிர, கல்வியானது, அரசியல் சட்டங்கள் (political legitimation) தொடர்பாக மாணவர்களை பயிற்றுவிப்பது, மாணவர்களை எதிர்கால ஊழியப்படைக்கு பயிற்றுவித்தல், தனிநபர்களை அதிகார ஒழுங்கமைப்புக்காக தெரிவு செய்தல், சமூக மாற்றத்துக்கான தூண்டலை வழங்கல் போன்ற நடவடிக்கைகளின் ஊடாகவும் அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறது.

அரசியல் சட்டம் [Political legitimation]

அரசியல் அமைப்புகள் மற்றும் செயன்முறைகள் உட்பட, தனிநபர்களின் முன்னோக்குகள், விழுமியங்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய புரிதலை வடிவமைப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் சட்டத்தின் மீதான கல்வியின் செல்வாக்கு, அரசியல் நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் சித்தாந்தங்களின் உணரப்பட்ட சட்டபூர்வமான தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளலை கல்வி எவ்வாறு பாதிக்கலாம் என்பதைக் குறிக்கிறது. இதனை பாடசாலை கல்வி பின்வரும் வழிகளில் மேற்கொள்ளும்:

(அ). அறிவு மற்றும் விழிப்புணர்வு: அரசியல் அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் செயன்முறைகள் பற்றிய அறிவை மாணவர்களுக்கு கல்வி வழங்குகிறது. ஜனநாயகம், ஆட்சிமுறை, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற கருத்துகளைப் புரிந்துகொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது. இந்த அறிவு தனிநபர்கள் அரசியல் அமைப்புகளை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்யவும், அவர்களின் சட்டபூர்வமான தன்மையைப் பற்றிய தகவலறிந்த தீர்ப்புகளை வழங்கவும் உதவுகிறது.

(ஆ). விமர்சன சிந்தனை மற்றும் பகுப்பாய்வு: கல்வி மாணவர்களிடையே விமர்சன சிந்தனைத் திறன்களை வளர்க்கிறது, அரசியல் தகவல் மற்றும் வாதங்களை விமர்சனரீதியாக பகுப்பாய்வு செய்ய மாணவர்களுக்கு  உதவுகிறது. இதன் மூலம், அரசியல் உரிமைகோரல்கள், கொள்கைகள் மற்றும் தீர்மானங்களை  கேள்வி கேட்கவும் மதிப்பீடு செய்யவும் கல்வி தனிநபர்களை ஊக்குவிக்கிறது. இந்த விமர்சன சிந்தனை திறன் தனிநபர்கள் அரசியல் அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மையை மதிப்பிட அனுமதிக்கிறது.

(இ) குடிசார் பங்குபற்றல் மற்றும் ஈடுபாடு: கல்வியானது குடிசார்  ஈடுபாடு மற்றும் அரசியல் செயன்முறைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும். மாணவர்களுக்கு அவர்களின் உரிமைகள், பொறுப்புகள் மற்றும் அரசியல் பங்கேற்பின் வழிமுறைகள் பற்றிய அறிவை வழங்குவதன் மூலம், அரசியல் விவாதங்கள், வாக்களிப்பு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட கல்வி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. 

(ஈ) விழுமியங்கள் மற்றும் மனப்பாங்குகள்: கல்வியானது தனிநபர்களின் அரசியல் தொடர்பான விழுமியங்கள், மனப்பாங்குகள் மற்றும் நம்பிக்கைகளை வடிவமைக்க முடியும், இதில் அரசியல் நியாயத்தன்மை பற்றிய அவர்களின் கருத்தும் அடங்கும். உதாரணமாக, ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகளுக்கான மரியாதை மற்றும் சமூக நீதி ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு கல்வி முறை, இந்த விழுமியங்களை நிலைநிறுத்தும் அரசியல் அமைப்புகள் சட்டபூர்வமானவை என்ற கருத்தை மான்வர்களிடையியே விருத்தி செய்யும். மாறாக, எதேச்சதிகாரத்தை வலியுறுத்தும் அல்லது பக்கச்சார்பான கருத்துக்களை ஊக்குவிக்கும் ஒரு கல்விமுறை அரசியல் நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம்.

(உ). சமூக ஒருங்கிணைப்பு மற்றும் ஸ்திரத்தன்மை: அரசியல் அமைப்பு மற்றும் அதன் சட்டபூர்வமான தன்மை பற்றிய பகிரப்பட்ட புரிதலை வளர்ப்பதன் மூலம் சமூக ஒற்றுமை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு கல்வி பங்களிக்க முடியும். தனிநபர்களுக்கு பொதுவான அறிவுத் தளம் மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகள் பற்றிய புரிதல் இருந்தால், அது சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, அரசியல் துருவமுனைப்பு மற்றும் சட்டப்பூர்வமான தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மோதல்களுக்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்கும்.

எனவே, அரசியல் சட்டத்தின் மீது கல்வியின் செல்வாக்கு சிக்கலானதும் மற்றும் பன்முகத்தன்மை கொண்டதுமாகும்.  இது கல்வியின் தரம், கலைத்திட்ட உள்ளடக்கம், கற்பித்தல் முறைகள், கல்விக்கான அணுகலில் உள்ள சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அரசியல் சூழல் போன்ற பல்வேறு காரணிகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். 

மனிதவள உற்பத்தி

மனிதவள உற்பத்தி என்பது ஒரு சமூகத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய திறமையான மற்றும் தகுதியான பணியாளர்களை உருவாக்குவதில் கல்வி முறைகளின் பங்கைக் குறிக்கிறது. பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித்திறனுக்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் பயிற்சி ஆகியவற்றை தனிநபர்களுக்கு வழங்குவதை இது வலியுறுத்துகிறது. ஒரு நாட்டின் கல்வி முறைமையே அந்நாட்டின் மனித வளத்தின் தரத்தினை தீமநிகின்றது. கல்விமுறைமை மூலம் பயிற்றுவிக்கப்படும் நபர்களே நாளைய தலைவர்களாக, மக்கள் பிரதிநிதிகளாக உருவாகுவர்.

அதிகார வரிசைக்கு பணியாளர்களை வரிசைப்படுத்துதல் 

அரசியல் மற்றும் நிர்வாகப் படிநிலைகளுக்குள் அதிகாரம் மற்றும் தலைமைப் பதவிகளுக்கு தனிநபர்களைத் தேர்ந்தெடுத்து தயார்படுத்தும் செயன்முறையுடன் இது தொடர்புடையது.  கல்வி முறைமைகள் பெரும்பாலும் திறமையான நபர்களை அடையாளம் கண்டு வளர்ப்பதில் பங்கு வகிக்கின்றன. பின்னர் அவர்கள் அரசு, பொது நிர்வாகம் மற்றும் பிற செல்வாக்குமிக்க பாத்திரங்களில் உயர்மட்ட பதவிகளுக்கு தயாராக உள்ளனர்.

சமூக மதிப்பீடு மற்றும் வியாக்கியானம் செய்தல்

அரசியல் நிகழ்வுகள், கொள்கைகள் மற்றும் சமூக மாற்றங்கள் உள்ளிட்ட சமூக நிகழ்வுகளின் மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வைக் இது குறிக்கிறது. சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை மதிப்பிடவும், விளக்கவும், தகவலறிந்த விவாதங்களில் ஈடுபடவும், பல்வேறு முன்னோக்குகளை பகுப்பாய்வு செய்யவும் கல்வியானது தனிநபர்களை விமர்சன சிந்தனைத் திறன்களுடன் சித்தப்படுத்துகிறது.

சமூகக் கட்டுப்பாடு

சமூகக் கட்டுப்பாடு என்பது சமூக விதிமுறைகள் மற்றும் விழுமியங்கள் ஆகியவற்றை  கடைப்பிடிக்கும் வழிமுறைகள் மற்றும் செயன்முறைகளைக் குறிக்கிறது.  சமூக நெறிமுறைகளை ஊக்குவித்தல், அறநெறிமுறை நடத்தையை ஊக்குவித்தல் மற்றும் பொறுப்புள்ள குடியுரிமையை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கல்வி முறைமைகள் செல்வாக்கு செலுத்துகின்றன. சமூகத்தை நிர்வகிக்கும் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய அறிவையும் அவர்கள் வழங்க முடியும் மற்றும் மாறுபட்ட நடத்தைகளைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் பங்களிக்க முடியும். இதன் மூலம் கல்வி அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறது. 

சமூக மாற்றம்

கல்வி அறிவு, விமர்சன சிந்தனை திறன் மற்றும் தற்போதுள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்புகளுக்கு சவால் விடும் திறன் ஆகியவற்றுடன் தனிநபர்களை மேம்படுத்துவதன் மூலம் சமூக மாற்றத்திற்கான ஊக்கியாக கல்வி செயல்பட முடியும். கல்வியின் மூலம், தனிநபர்கள் விழிப்புணர்வை வளர்க்கலாம், சமூக நீதிக்காக வாதிடலாம் மற்றும் சமூகத்திற்குள் மாற்றும் செயன்முறைகளுக்கு பங்களிக்க முடியும். எனவே சமூக மற்றம் நாட்டின் அரசியலை நேரடியாக பாதிக்கும். 

முடிவுரை

எந்தவொரு நாட்டினதும் கல்வியும் அரசியலும் பிரிக்க முடியாதவை.  கல்வி, அரசியல் ஆகியன ஒவ்வொன்றும் மற்றயதின் விதியினை தீர்மானிக்கும் வகையில் செல்வாக்கு செலுத்துகின்றவகையில் நெருங்கிய இடைத் தொடர்பை கொண்டுள்ளன  இந்நெருங்கிய தொடர்பு நாட்டினதும், சமூகங்கள் மற்றும் தனிநபர்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்றன. கல்விக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவு சிக்கலானதும் மற்றும் பன்முகத்தன்மை கொண்டதும் ஆகும்.  ஒருபுறம்,  அரசியல் கல்வியில் நேரடியாக செல்வாக்கு செலுத்துகின்றது.  எதைக் கற்பிக்க வேண்டும்,  எப்படிக் கற்பிக்க வேண்டும், யாருக்குக் கற்பிக்க வேண்டும்  என்ற முடிவுகள் அனைத்தும் ஒரு நாட்டின் ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளினால் எடுக்கப்படுகின்றன.  இந்த முடிவுகள் தனிநபர்களின் வாழ்க்கையையும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் எதிர்காலத்தையும் ஆழமாக பாதிக்கலாம்.
மறுபுறம், கல்வி என்பது ஒரு நாட்டின் அரசியல் நிலைமையில் செல்வாக்கு செலுத்துகிறது. கல்வி மூலம் மாணவர்கள் அரசியல் எண்ணக்கருக்களை விளங்கிக் கொள்கின்றனர். கல்வி அரசியல் சமூகமயமாக்கலின் ஒரு கருவியாகும். இதனால் அரசியல் விழிப்புணர்வு கொண்டா மக்கள் கல்வி மூலம் உருவாகலாம்.  இது அந்நாட்டின் அரசுகளின் தரத்தினை வெகுவாக தீர்மானிக்கும்.
பேராசிரியர் கலாநிதி எப்.எம்.நவாஸ்தீன்,
கல்விப்பீடம்  
 இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

--------------


,

 


மனதில் நிழலாடும் நினைவுகள்

 

மனதில் நிழலாடும் நினைவுகள்

வாழ்க்கை என்றொரு பயணத்திலே சிலர் வருவார் போவார் பூமியிலே. வானத்து நிலவாய் சிலர் இருப்பார் எனும் பாடல் வரிகளில் வருவது போல் எம் பாடசாலை நாட்களில் பல ஆசிரியர்களை நாம் சந்தித்ததுண்டு. அவர்களுள் மிகச் சிலரே வானத்து நிலவு போல் எம் மனதில் நிலைத்திருப்பர். அவ்வாறான எனது ஆசான்கள் சிலரை இந்த ஆசிரியர் தினத்தில் நினைவு கூறுவது தகும் என எண்ணுகிறேன்.

யாழ்-ஒஸ்மானியா கல்லூரி

1983 ஜனவரி யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் 6 ம் வகுப்பிற்காக அனுமதிக்கப்பட்ட நாள். 1987 இல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரமும் 1990 இல் கல்விப் பொதுத் தராதரஉயர்தர மாணவனாகவும் இங்கு கல்வி கற்ற நாட்களில் மனதில் என்றும் நிழலாடும் ஆசான்கள் சிலரை இங்கு பதிவிடுகிறேன்:
மர்ஹூம் ஜனாப் ஏ. எச். ஹாமீம் (அதிபர்)

மர்ஹூம் ஜனாப் ஏ. எச். ஹாமீம் (அதிபர்)


ஒஸ்மானியா என்றதும் எனக்கு மட்டுமல்ல யாழ் வாழ் மக்கள் அனைவருக்கும் நினைவில் வருவது ஹாமீம் சேர் அவர்களைத்தான். அவரைப் பொறுத்தவரை பாடசாலை தான் அவரது முதல் குடும்பம். பாடசாலையின் கல்வி மற்றும் ஏனைய துறைகளினை வளர்த்தெடுப்பதில் அவரது அர்ப்பணிப்புக்கள் இன்றும் எம்மக்களினால் சிலாகித்து கூறப்படுவதே அவரின் பெருமைக்கு சான்றாகும். பாடசாலையின் மகுட வாசகமான "கடமை கண்ணியம் கட்டுப்பாடு" என்பதை வெறும் வாசகமாக அன்றி ஒவ்வொரு மாணவர்களிலும் கொண்டுவர அவரது அயராத உழைப்பு மெச்சத்தக்கது.
மர்ஹூம் ஆலிம்ஷா
அவரை அப்படித்தான் நாம் அழைப்போம். அவர் உண்மைப் பெயர் எமக்கு நினைவில் இல்லை. இஸ்லாம் பாடம், இஸ்லாமிய நாகரிகம் என்பவற்றுக்கு ஆசிரியராக இருந்தவர். மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களின் வளர்ச்சியில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார்.
AL செய்யும் போது இரவு நேரங்களில் கூட பெற்றோல் மேக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் எமக்கு பாடம் சொல்லித்தந்தவர்.
நான் 7ம் வகுப்பில் இருந்த போது ஒஸ்மானியாவில் மௌனகுரு சேர் நமக்கு தமிழ் பாடம் சொல்லித் தந்தவர். தமிழ் பாடத்தில் ஓரளவாவது ஈர்ப்பு வர காரணமானவரும் இவரே.
6ம் வகுப்பில் இருந்தே சமூகக்கல்வியை எமக்கு கற்றுத் தந்தவர். இவர் கற்பித்து முடியும் போது கற்று தந்த விடயங்கள் அனைத்தும் அழகான எழுத்திலும் வரிப்படங்களாகவும் கரும்பலகையில் காட்சி தரும். பின்னாட்களில் புவியியலில் நான் ஆர்வம் செலுத்தியமைக்கு தாக்கம் செலுத்திய ஆசிரியர்களில் இவரும் ஒருவராகும்.
மர்ஹூம் மன்சூர் ஆசிரியர்

தமிழ்ப் பாடத்தினை மிக இரசனையுடன் எமக்கு கற்றுத்தந்தவர். வகுப்பு மாணவர்களை சோர்வடையச் செய்யாமல் நகைச்சுவை உணர்வுடன் ஆனால் கண்ணடிப்புடன் கற்றுத்தந்தவர்.
அல்ஹாஜ். எ.சி. நஜிமுதீன் ஆசிரியர்

அல்ஹாஜ். எ.சி. நஜிமுதீன் ஆசிரியர்



1980 களின் பிற் பகுதியில் எமக்கு கிடைத்த முத்துக்களில் ஒன்று. தமிழை இவர் உச்சசரிக்கும் பாங்கு மிக அலாதியானது. இவர் பேசும் போது கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்றிருக்கும். எந்தப் பாடமாயினும் அதனை அனைவரும் எளிதில் விளங்கும் வகையில் விளக்குவதில் இவருக்கு நிகர் இவர்தான். மன்னார் அரச அதிபராக இருந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்பூல் அவர்களுக்கான மாணவர் சார்பாக இரங்கல் உரையினை
நிகழ்த்த என்னை வழிப்படுத்தியவர். எனது முதலாது கட்டுரையினை எழுத்துவற்கு வழிப்படுத்தி அதனைஅல் ஹிக்மா எனும் வெள்ளி விழா மலரில் இடம் பெறச் செய்தவர்.
மர்ஹூம் ஜமீல் ஆசிரியர்
மர்ஹூம் ஜமீல் ஆசிரியர்


பாடசாலை நாட்களில் தரம் 10 வரை கணிதப் பாடம் என் போன்ற பல மாணவர்களுக்கு கசந்தே இருந்தது. கணிதம் எமக்கு விளங்கவில்லை என்பதை விட எமக்கு விளங்கும் வகையில் யாரும் கற்பிக்க வரவில்லை என்பதை இவர் வந்தவுடன் புரிந்து கொள்ள முடிந்தது. கணித எண்ணக்கருக்களை எமக்கு புரியும் வகையில் சொல்லிதந்து OL யில் வெற்றி பெற உதவிய ஆசான்.
ஸியாரத் ஆசிரியர்
உடற்கல்வி மற்றும் சுகாதாரம் பாடங்களை 80களின் பிற்பகுதியில்
எமக்கு கற்று தந்தவர். யாழ் நூலகத்தில் கற்கண்டு இதழில் நான் வாசித்த புவி வெப்பமடைதல் பற்றிய ஒரு விடயத்தை தவணைப் பரிட்சையில் நான் மேற்கோள் காட்டி எழுதியதை வகுப்பில் சிலாகித்து கூறி உற்சாகம் அளித்தவர் (நீ எம். ஜீ.ஆர் டா என பாராட்டியது காரணமாக என்னை சக மாணவர்கள் சில காலம் எம்.ஜீ.ஆர் என பட்டப்பெயர் சூட்டியது வேறு கதை). உடற்பயிற்சி தொடர்பான ஒரு விளையாட்டுப் போட்டியில் எம்மை வழி நடத்தி யாழ் மாவட்டத்தில் இரண்டாம் இட பரிசை பெற்றுக்கொள்ள வைத்தவர்
திரு_தங்கரசா ஆசிரியர்

உயர் தரத்தில் புவியியல் பாட ஆசிரியராக விளங்கியவர். வகுப்பில் வேறு பாடங்கள் நடக்காதபோதும் விடுமுறை நாட்களிலும் எம்மை துரத்தி துரத்தி புவியியல் பாடம் சொல்லித் தந்தவர். எங்கு போனாலும் புவியியல் நோட்ஸ் கொப்பிகளை கொண்டு செல்ல எப்போதும் வற்புறுத்துவார். அதனால் தான் என்னவோ 1990 இல் வடக்கில் இருந்து வெளியேற்றப்படட போது என்னிடம் இருந்த ஒரே ஒரு நோட்ஸ் கொப்பி அவரது பெளதீகப் புவியியல் நோட்ஸ் ஆக இருந்தது. பேராதனை பல்கலைக்கழக காலத்தில் புவியியல் பாடத்தில் சிறப்பு பட்டம் பெற என்னை இட்டுச் சென்ற காரணிகளுல் இவரிடம் கற்றமையும் ஒன்று எனலாம்.
யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் 1988-90 களில் கடமையாற்றிய ஆசிரியர் குழாம்


பல வருடங்கள் ஆகி விட்டன. மாணவனாக இருந்தபோது நீங்கள் எனக்கு கற்றுத் தந்தவைகள், பயிற்சிகள், உங்கள் ஆளுமைகள் என்னை இவ்வளவு தூரம் பயணிக்க உதவியுள்ளன. இன்னும் உங்கள் மாணவன் எனக் கூறுவதில் பெருமை கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் ஈருலகிலும் அருள் புரிய என்றென்றும் பிரார்த்தனை செய்கிறேன்.
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

பாடசாலை மாணவர் தலைவர்கள் 1989/90


ஆக்கம்: கலாநிதி; எப்,எம்.நவாஸ்தீன்

மர்ஹூம் ஜமீல் ஆசிரியர்

 மர்ஹூம் ஜமீல் ஆசிரியர் 



1983-87 ஆகிய காலப்பகுதியில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் எனது இடைநிலைக் கல்வியை தொடர்ந்திருந்தேன். ஏழ்மை, போர்காலச் சூழல் போன்றவற்றால், என்னைப் போன்ற பலரின் கல்வி பாடசாலையுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்து. டியூஷன் வகுப்புகளைக் கனவிலும் நினைத்தும் பார்த்ததில்லை. அதற்கு எங்களிடம் வசதியும் இல்லை. நாங்கள் கல்வி கற்றிருந்த காலத்தில் ஒஸ்மானியாவில் பல சிறந்த ஆசிரியர்கள் எமக்கு கற்று தந்துள்ளனர். எனினும், பத்தாம் வகுப்பு வரை #கணிதம் எனக்கு கசப்பாகவே இருந்தது. அதற்கு காரணம், அதுவரை அதனை எங்களுக்கு கற்பித்த ஆசிரியர் என்றும் கூறலாம். வருவார், டியுசனுக்கு போய் வரும் சில முன்வரிசை கெட்டிக்கார மாணவர்களுடன் குசுகுசுத்து விட்டு சென்று விடுவார். இதனால், கணிதத்தில் ஆர்வம் இல்லாமலே பத்தாம் வகுப்பு வரை வந்து விட்டோம். க.பொ.த சாதாரண தரத்திற்கு இன்னும், ஒரு வருடமே எஞ்சி இருந்தது. கணிதம் சித்தி பெறா விட்டால் உயர்தரம் கற்க முடியாமல் போய் விடும். இனி யாழ் தையல் கடைகளில் ஒரு தையல்காரனாக சேர்ந்து விட வேண்டியதுதான் என்று கவலை கொண்டிருத்த வேளைதான், பலாலி ஆசிரியக் கலாசாலையில் இருந்து இளம் ஆசிரியர் குழாம், அவர்களின் கற்பித்தல் பயிற்சியின் பொருட்டு வந்து எங்களுக்கு கற்பிக்கத் தொடங்கி இருந்தனர். நாடியில் குழி விழுந்த, இன் முகத்துடன் கூடிய ஓர் இளம் ஆசிரியர் எங்களுக்கு கணிதம் கற்பிக்க வந்திருந்தார். அவரது புதுமையான அணுகுமுறைகள், கணித கற்றலில் ஆர்வமற்று இருந்த என்னைப் போன்ற மாணவர்களை கணித எண்ணக்கருக்களின்பால் எங்கள் ஆர்வத்தை துண்டியது. கற்பித்தல் பயிற்சி காலம் முடிந்து, எங்கள் பாடசாலைக்கே வந்து தொடர்ந்தும் கணிதம் கற்று தந்தார். அவரது இன்முகம், கணித எண்ணக் கருக்களை எங்களுக்கு கற்பித்த விதம் காரணமாக, குறுகிய காலத்தில் கணிதத்தில் சித்தி பெற முடியும் என்ற நம்பிக்கையை எங்களில் ஏற்படுத்தினார். இதற்கிடையில் இந்திய அமைதிப்படைக்கும், போராளிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 1987 இல் நாங்கள் இடம்பெயர வேண்டி இருந்தது. பரீட்சையும் இடம்பெறவில்லை. மீண்டும் 1988 இல் விசேடமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற க. பொ.த சாதாரண தர பரீட்சையை எழுதி கணிதத்தில் சித்தியைப் பெற முடிந்தது. பின்னர் உயர்கல்வியும் சாத்தியமானது. குறுகிய காலத்தில் என்னைப் போன்ற மாணவர்களைச் சித்தி பெற வைத்த, #ஜெமீல்_மாஸ்டர் என்று நாங்கள் அன்புடன் அழைக்கும் #ஜமீல் ஆசிரியர் Jameel Musthafa இன்று (10/09/2021) வபாத்தான செய்தி கேட்டு அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீள முடியவில்லை.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ்விடம் இருந்தே வந்தோம். அவனிடமே மீள செல்ல வேண்டி உள்ளது.
யாருக்கும் நிச்சயமான மரணத்தை நீங்கள் அடைந்து விட்டீர்கள்.
கருணை மிக்க அல்லாஹ் உங்கள் நற்காரியங்களை பொருந்திக் கொண்டு, நல்லடியார்களில் ஒருவராக உங்களை ஏற்று கொள்வானாக. உங்களது மண்ணறை மற்றும் மறுமை வாழ்வு சிறக்க அல்லாஹ்விடம் உங்கள் மாணவர்களில் ஒருவனான நானும் பிரார்த்திக்கிறேன்.

You were not a teacher, but one of awakeners.



#கலாநிதி_எப்_எம்_நவாஸ்தீன்

ஆய்வுப் பிரேரணை / ஆய்வு முன்மொழிவு தயாரித்தல்

 


ஆய்வுப் பிரேரணை / ஆய்வு முன்மொழிவு தயாரித்தல் 

கலாநிதி. எப்.எம். நவாஸ்தீன் 
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்                                                                      


1.0 அறிமுகம்

இக்கட்டுரையானது, ஆய்வு பிரேரணை பற்றி விளக்கும் நோக்கில் எழுதப்படுகிறது.இன்று, பெரும்பாலான உயர் கற்கைகள் ஆய்வு தொடர்பான தேர்ச்சிகளை மாணவர்களிடத்தில் விருத்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. இதன் காரணமாக, ஆய்வு தொடர்பாக உயர் கல்வியை தொடரும் மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். உயர்கல்வியை குறிப்பாக, முதுமாணி, தத்துவமாணி போன்ற  பட்ட மேற் படிப்புகளுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் போது, தாம் மேற்கொள்ளப்ப் போகும் ஆய்வு தொடர்பாக பிரேரணையினை சமர்ப்பிக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதன் போது அவர்கள் சமர்ப்பிக்கும் ஆய்வு முன்மொழிவுகளே, அவர்களது உயர்கல்விக்கான வாய்ப்புக்களைத் தீர்மானிகின்றன என்றால் அது மிகையில்லை. மட்டுமன்றி, பல்வேறு உண்ணாட்டு, சர்வேதச ஆய்வு நிறுவனங்களும் கால முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சினைகளை/ கருப்பொருட்களை மையமாக கொண்டு ஆய்வுகளில் ஈடுபடுவதற்கு ஆய்வாளர்களிடம் இருந்து ஆய்வுப் பிரேரணைகளை கோருவதும், அதனடிப்படையில், சிறந்த ஆய்வுப் பிரேரணைகளை தெரிவு செய்து அவற்றுக்கு நிதி உதவிகளையும் செய்து வருகின்றன. இதன்போதும், ஆய்வுப் பிரேரணைகளின் தரம், இத்தகைய நிதிகளை பெறுவதில் செல்வாக்கு செலுத்துகின்றன. எனவே, சிறந்த ஆய்வுப் பிரேரணையினை எழுதுவது எப்படி என்பது பற்றி ஆய்வு மாணவர்கள் அல்லது ஆய்வில் ஈடுபடுவோர் அறிந்திருப்பது மிக முக்கியமாகும்.

2.0 ஆய்வுப் பிரேரணை  என்றால் என்ன?

Research Proposal என்பதை ஆய்வுப் பிரேரணை அல்லது ஆய்வு முன்மொழிவு என்றுகூறலாம். சிலர் Recommendation (பரிந்துரை) என்பதற்கு  முன்மொழிவு எனும் பதத்தை பயன்படுத்துகின்றனர். இது பிழையானதாகும். 

ஆய்வுப் பிரேரணை  அல்லது ஆய்வு முன்மொழிவு எனின், நாம் மேற்கொள்ள உள்ள ஆய்வு தொடர்பாக தெளிவான விபரங்களை வழங்கும் வகையில் தயாரிக்கப்படும் ஓர் ஆவணம் ஆகும். 

இதன்மூலம், ஒருவர் மேற்கொள்ளவுள்ள (உத்தேச) ஆய்வு தொடர்பான முழுமையான ஆய்வுச் செயன்முறைகள் பற்றிய தெளிவான விபரங்களை வழங்குதல் வேண்டும். இதன் மூலம், ஆய்வுப் பிரேரணை  அல்லது ஆய்வு முன்மொழிவினை வாசிக்கும் ஒருவர் (பரீட்சகர் அல்லது வாசகர்) குறித்த ஆய்வு தொடர்பாக நீங்கள் அவற்றை மேற்கொள்ள போகிறீர்கள் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.  அதாவது உத்தேச ஆய்வு தொடர்பாக, ஒருவர் தனது திட்டத்தினை இதன் மூலம் முன் வைக்க முடியும்.  ஆய்வு முன்மொழிவின் தரத்தினை அடிப்படையாகக் கொண்டே உங்கள் உயர் கல்விக்கான வாய்ப்பு தீர்மானிக்கப்படும் என்பதை மறத்தல் ஆகாது. பொதுவாக சிறந்த ஆய்வு முன்மொழிவு பின்வரும் குறிக்கோள்களைக் கொண்டதாக தயாரிக்கப்படல் வேண்டும்:

  • உத்தேச ஆய்வு தொடர்பாக, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது பற்றிய விவரணம் (What you will do?/ What you intend to study): இதில் உங்கள் ஆய்வு தொடர்பான ஆய்வுப் பிரச்சினை, நோக்கம் குறிக்கோள்கள், ஆய்வு வினாக்கள் பற்றிய விளக்கம் தரப்படல்  வேண்டும்.
  • உத்தேச ஆய்வினை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய விளக்கம் (Why it should be done?): இதில் குறித்த ஆய்வினை மேற்கொள்வதன் முக்கியத்துவம் பற்றிய விளக்கம் தரப்படல்  வேண்டும்.
  • குறித்த உத்தேச ஆய்வினை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறீர்கள்? (How you will do it): இதில் குறித்த ஆய்வினை மேற்கொள்ள எத்தகைய ஆய்வு முறையியலினை பயன்படுத்த போகிறீர் என்ற விளக்கம் தரப்படல் வேண்டும்.
  •  குறித்த உத்தேச ஆய்வினை மேற்கொள்வதால் நீங்கள் அடைய எதிர்பார்க்கும்  பேறுகள்/விளைவுகள்  யாவை? (What you expect will results). குறித்த ஆய்வினை மேற்கொள்ளவதன் மூலம் ஆய்வாளர் அடைந்து கொள்ள எத்ரிபார்க்கும் ஆய்வு தொடர்பான உத்தேச முடிவுகள்/பேறுகளை பற்றிய விளக்கம் தரப்படல்  வேண்டும்..
  •  குறித்த உத்தேச ஆய்வுக்கான கால அளவு (When you will complete the study). இதில் குறித்த உத்தேச ஆய்வினை மேற்கோள்ள உங்களுக்கு தேவையான கால அளவு காட்டப்படல் வேண்டும். 

ஆய்வு முன்மொழிவினை பின்வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் தயாரிக்க வேண்டி இருக்கும்: 

  • முதுதத்துவமானி, முது விஞ்ஞானமானி, கலாநிதி போன்ற பட்ட பின் பயில்நெறிகளுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் போது (தற்காலிக  ஆய்வு முன்மொழிவு ).
  • முதுதத்துவமானி, முது விஞ்ஞானமானி, கலாநிதி போன்ற பட்ட பின் பயில்நெறிகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆய்வாளர் தனது ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்காக குறித்த நிறுவன/பல்கலைக்கழக ஒழுக்கநெறி சபைகளில் அனுமதி கோரும் போது (விரிவான ஆய்வு முன்மொழிவு) 
  • கல்வி அமைச்சு, தேசிய கல்வி ஆணைகுழு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய விஞ்ஞான மன்றம் போன்ற நிறுவனங்கள், ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆய்வு முன்மொழிவுகளை காலத்துக்கு காலம் வேண்டி விளம்பரம் செய்வர். இத்தகைய நிறுவனங்களின் நிதி உதவியுடன் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி ஆய்வு முன்மொழிவுகளை தனியாகவோ, குழுவாகவோ  தயாரிக்க முடியும்.
  • ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நிதி உதவிகளை பெரும் நோக்கில்  நிதி உதவி செய்யும் நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கும் போது ஆய்வு முன்மொழிவுகளை தயாரிக்க வேண்டி இருக்கும். 


3.0 ஆய்வுப் பிரேரணை / ஆய்வு முன்மொழிவில் உள்ளடக்கப்பட வேண்டிய அடிப்படைக் கூறுகள்

ஆய்வு முன்மொழிவில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கிய கூறுகள் உள்ளன. அவை வருமாறு:

  •          ஆய்வுத் தலைப்பு
  •       ஆய்வுச் சுருக்கம்
  •       அறிமுகம்
  •      ஆய்வுப் பிரச்சினை கூற்று அல்லது ஆய்வு பிரச்சினை
  •      ஆய்வு பிரச்சினைக்கான பின்னணி
  •   ஆய்வின் பிரதான நோக்கம், ஆய்வுக் குறிக்கோள்கள்,ஆய்வு வினாக்கள்/ ஆய்வுக் கருதுகோள்கள்
  •        ஆய்வு முக்கியத்துவம் 
  •       இலக்கிய மீளாய்வு
  •      ஆய்வு முறையியல்
  •       வரையறைகளும் எல்லைப்டுத்தலும் 
  •      காலச் சட்டகம்
  •       பாதிடு
  •       நூற்விபரப் பட்டியல் 
  •      பின்னிணைப்புக்கள்

ஆய்வு முன்மொழிவில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கிய கூறுகளாக மேற்கூறப்பட்டவை காணப்பட்டாலும், இவை சிலவேளைகளில் உயர்கல்வி நிறுவனத்துக்கு (பல்கலைக்கழகம்) நிறுவனம் வேறுபட்டு அமையும் என்பதை கவனத்திற் கொள்க. 

ஆய்வு முன்மொழிவினை தயாரிக்க முன்னர், ஆய்வு முன்மொழிவினை அனுப்பவுள்ள உயர் கல்வி நிறுவனம் ஆய்வு முன்மொழிவில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கிய கூறுகள் பற்றிய வழிகாட்டல்கள் எதையாவது தந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது மிக முக்கியம். 

அத்தகைய வழிகாட்டல்கள் தரப்பட்டு இருக்குமாயின், குறித்த வழிகாட்டலுக்கு அமைய ஆய்வு முன்மொழிவினை எழுதுதல் வேண்டும். குறித்த வழிகாட்டலுக்கு மாற்றமாக அனுப்படும் ஆய்வு முன்மொழிவுகள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உதாரணம்: ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு முன்மொழிவில் உள்ளடங்க வேண்டிய கூறுகள் உரு 1 காட்டப்பட்டுள்ளது.

 உரு 1 : ஆய்வு முன்மொழிவில் உள்ளடங்க வேண்டிய கூறுகள்

மூலம்: Faculty of Graduate Studies (2017 P21)

 

உதாரணம் 2: கொழும்பு பல்கலைக்கழக பட்டப்படிப்புகள் நிறுவனத்தின் ஆய்வு

முன்மொழிவுக்கான வழிகாட்டல் உரு 2 காட்டப்படுள்ளது.

உரு 2 : ஆய்வு முன்மொழிவில் உள்ளடங்க வேண்டிய கூறுகள்
 Source: https://fgs.cmb.ac.lk/application-guidelines/

மேலே காட்டபப்பட்ட உதாரணங்கள் மூலம் ஆய்வு முன்மொழிவுக்கான வழிகாட்டல்கள், ஆய்வு முன்மொழிவுக்கான வடிவமைப்புகள் நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும் என்பதை தெளிவாக எடுத்து காட்டுகின்றன. மேலும் இத்தகைய வழிகாட்டல்கள், வடிவமைப்புகள் காலத்துக்கு காலம் மாற்றி அமைக்கப்படும் என்பதையும்  இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இனி, ஆய்வு முன்மொழிவின் முக்கிய கூறுகளை விரிவாக எடுத்து நோக்குவோம் 

3.1 ஆய்வுத் தலைப்பு - Title

ஆய்வு முன்மொழிவில் உத்தேச ஆய்வுக்கான தலைப்பு தெளிவாக தரப்படல் வேண்டும். தமிழில் உங்கள் ஆய்வினை மேற்கொள்வதாக இருப்பின் ஆய்வுத் தலைப்பினை ஆங்கிலத்திலும் தருவது சிறந்தது. ஆய்வு தலைப்பு பின்வரும் பண்புகளை கொண்டிருத்தல் வேண்டும் (Sreeraj. 2015):

  • சுருக்கமான ஆனால் தெளிவான விபரத்தை அளிப்பதாக அமைதல் வேண்டும்.
  • உத்தேச ஆய்வினை பிரதிபலித்தல் வேண்டும்.
  •  கவரக்கூடியதாக அமைதல் வேண்டும்.
  • ஆய்வுத் தலைப்பு சுயாதீன மற்றும் சார்ந்த மாறிகளை உள்ள்டக்கியதாக அமைதல் வேண்டும்.
  • ஆய்வுத் தலைப்பில் இருந்து ஆய்வுக்குரிய கருச் சொற்களை பெறக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
  • தலைப்பில் ஆய்வுக் குடி/ பிரதேசம் உள்ளடக்கப்பட்டு இருத்தல் வேண்டும்.  

3.2 ஆய்வுச் சுருக்கம் – Abstract

ஆய்வு சுருக்கப் பகுதியில், குறித்த ஆய்வு முன்மொழிவின் முக்கிய விடயங்களை மட்டும் சுருக்கமாக எடுத்துரைக்க வேண்டி வரலாம். இதன் போது குறித்த ஆய்வின் ஆய்வு பிரச்சினை, ஆய்வின் பிரதான நோக்கம், ஆய்வுக் குறிக்கோள்கள்,ஆய்வு வினாக்கள்/ ஆய்வுக் கருதுகோள்கள், ஆய்வு முறையியல், ஆய்வின் மூலம் எதிர்பார்க்கப்படும் பேறுகள் போன்றவற்றை 300 சொற்களுக்குள் (இந்த சொற்களுக்கான வரையறை வேறுபடக்கூடியது) எழுதிக் காட்டல் வேண்டும். எனினும், சகல ஆய்வு முன்மொழிவுகளிலும் ஆய்வுச் சுருக்கம் கோரப்படுவதில்லை என்பதையும் இங்கு கவனத்திற் கொள்க.

3.3 ஆய்வு முன்மொழிவுக்கான அறிமுகம்

ஆய்வு முன்மொழிவின் ஆரம்பத்தில், உத்தேச ஆய்வு தொடர்பான பின்னணி விபரங்களை அளித்தல் வேண்டும். ஆய்வு முன்மொழிவின் அல்லது ஆய்வின் ஒரு தொடக்க புள்ளியாக இந்த அறிமுகம் அமையும் எனலாம். "அறிமுகம் என்பது ஆய்வு அறிக்கையின் (ஆய்வு முன்மொழிவின்) ஒரு பகுதியாகும்,  

இது ஆய்வறிக்கையில் (ஆய்வுமுன்மொழிவில்) முன்மொழியப்பட்ட அல்லது  அறிக்கையிடப்பட்ட ஆய்வுக்கான  பின்னணி தகவலை வாசகர்களுக்கு வழங்குகிறது. அதன் நோக்கம் ஆய்வுக்கான  ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும், இதனால் அது மற்ற ஆய்வுகளுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்” ( Wilkinson, 1991). 

ஆய்வு முன்மொழிவுக்கான  அறிமுகத்தினை எழுதும் போது , ஆய்வாளர் பின்வரும் விடயங்களை கவனத்திற் கொள்வது சிறந்ததாகும்  (Creswell, 1994):

  • ஆய்வு தலைப்பு தொடர்பாக  வாசகர் ஆர்வத்தை உருவாக்குதல்,
  • ஆய்வுக்கு வழிவகுக்கும் ஆய்வுப் பிரச்சனைக்கு பரந்த அடித்தளத்தை அமைத்தல்.
  • அறிவார்ந்த இலக்கியத்தின் அடிப்படையில்  குறித்த ஆய்வை முன்வைத்தல் , மற்றும்
  • ஆய்வு முன்மொழிவு அல்லது ஆய்வு அறிக்கை எத்தகைய பார்வையாளர்களை கருத்தில் கொண்டு எழுதப்ப்டுகின்றதோ, அத்தகைய ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களை அணுகும் வகையில் ஆய்வு அறிமுகம் எழுதப்படல் வேண்டும். 

எனவே, ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட தலைப்பு, ஆய்வு பிரச்சினைக்கானபின்னணித் தகவல்கள், குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பான தகவல்களை உரிய உரை மேற்கோள்காட்டல்களுடன் எடுத்துரைக்க வேண்டும். இதனை வாசிக்கும் ஒருவர், நீங்கள் மேற்கொள்ளப் போகும் ஆய்வு தொடர்பான ஓர் தெளிவான  விளக்கத்தினை பெறக் கூடியதாக இது அமையும் எனலாம்.

3.4 ஆய்வு பிரச்சினை அல்லது   ஆய்வுப் பிரச்சினை கூற்று மற்றும் ஆய்வு பிரச்சினைக்கான பின்னணி

ஆய்வு முன்மொழிவின்  அடிநாதம் குறித்த ஆய்வுக்கான ஆய்வுப் பிரச்சினையே  ஆகும். ஆய்வு முன்மொழிவில், ஆய்வு பிரச்சினையை, தெளிவாக எடுத்துரைக்க வேண்டி இருக்கும். 

இது ஒரு சவாலான ஒரு விடயமே. ஆய்வு முன்மொழிவில், வாசகர் எளிதாக இனம் கண்டு கொள்ளும் வகையில் ஆய்வுப் பிரச்சினை தனித்து காட்டப்படல்வேண்டும்.  

ஆய்வு முன்மொழிவுக்கான வழிகாட்டலில் சில வேளைகளில் ஆய்வுப் பிரச்சினை பற்றி மட்டும் கேட்கப்படுவதுண்டு. இதன்போது, கருத்தில் கொள்ளப்படும் ஆய்வு பிரச்சினை, தற்போதைய அறிவில் ஆய்வு பிரச்சினை தொடர்பாக உள்ள இடைவெளிகள், குறித்த விடயம் ஏன் மேலும் ஆராயப்படல் வேண்டும் என்ற விடயங்களை தெளிவாக விளக்கிக் கூறல் வேண்டுமாகின்றது. 

இதன்போது, குறித்த ஆய்வு பிரச்சினை நீர் ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட சூழமைவில் காணப்படுவதற்கான சான்றுகளையும் முன்வைக்க வேண்டி இருக்கும்.

சில ஆய்வு முன்மொழிவுக்கான வழிகாட்டலில் ஆய்வு பிரச்சினைக் கூற்றினை  தருமாறு கோரியிருப்பர். இதன் போது,  நீர் ஆய்வுக்காக தெரிவு செய்ய ஆய்வுப் பிரச்சினையினை, முதலில் ஒரு சில வரிகளில் சுருக்கமாகவும், தெளிவாகவும் வரையறுத்து எடுத்துரைத்தல் வேண்டும். பின்னர், குறித்த ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக தறபோதைய அறிவில் (இலக்கியத்தில்)  உள்ள இடைவெளிகள், குறித்த விடயம் ஏன் மேலும் ஆராயப்படல் வேண்டும், ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட சூழமைவில் காணப்படுவதற்கான சான்றுகள் போன்ற விடயங்களை தெளிவாக விளக்கிக் கூறல் வேண்டுமாகின்றது.

சில நேரங்களில், தெளிவற்ற மற்றும் மோசமாக வடிவமைக்கப்பட்ட ஆய்வு  பிரச்சினையினை, ஆய்வு முன்மொழிவில்   நீண்ட விபரணங்களினை எழுதுவதன் மூலம் ஆய்வாளர் மறைத்து விடுவதுண்டு.  

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஆய்வு முன்மொழிவை பரீட்சிக்கும் பரீட்சகர்கள் அல்லது ஆய்வு முன்மொழிவு அங்கீகார குழு உறுப்பினர்கள் ஆய்வு முன்மொழிவின் ஆய்வு பிரச்சினையை விளங்கிக் கொள்ள முடியாமல் போகும். இதன் போது குறித்த ஆய்வு முன்மொழிவுகள் நிராகரிக்கப்படும்.

3.5 ஆய்வின் பிரதான நோக்கம்

உத்தேச ஆய்வுக்கான குறிப்பான, துல்லியமான நோக்கத்தினை குறிப்பிட்டுக் காட்டுவது முக்கியமாகின்றது. ஆய்வாளர், தனது உத்தேச ஆய்வில் ஒட்டு மொத்தமாக எதனை செய்ய விரும்புகிறாரோ அதுவே ஆய்வின் பிரதான நோக்கமாக அமையும். இது ஆய்வுக்கான தலைப்புடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். ஆய்வாளர் தான்ன மேற்கொள்ளப் போகும் ஆய்வின் பிரதான நோக்கத்தினை எடுத்துக் காட்ட முடியாவிட்டால்குறித்த ஆய்வு முன்மொழிவை வாசிக்கும் பரீட்சகர்கள் உங்கள் ஆய்வு பற்றிய தெளிவினை பெற மாட்டார்கள். எனவே ஆய்வு முன்மொழிவில் உங்கள் உத்தேச ஆய்வின் பிரதான நோக்கத்தினை தெளிவாக எழுதிக் காட்டுதல் வேண்டும்.

3.6 ஆய்வுக் குறிக்கோள்கள்

ஆய்வின் பிரதான நோக்கத்தினை அடைந்து கொள்ளும் பொருட்டு உருவாக்கப்படும் பிரதான படிகள் ஆய்வுக் குறிக்கோள்கள் எனப்படும். ஆய்வுக் குறிக்கோள்கள் பின்வரும் பண்புகளைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்:

  • தர்க்கரீதியான மற்றும் ஒத்திசைவானவானதாக எழுதப்படல் வேண்டும். (Logical and coherent).
  • சாத்தியமான குறிகோள்களாக இருத்தல் வேண்டும் (feasible)
  • யதார்த்தமான குறிகோள்களாக அமைதல்வேண்டும்., (realistic)
  • அளவிடப்படக் கூடியதாக குறிக்கோள்கள் காணப்படல் வேண்டும்  (measurable).
  • ஆய்வின் பிரதான நோக்கத்தினை அடையும் வகையில் (தொடர்புபட்டதாக) குறிக்கோள்கள் தெளிவாக எழுதப்பட்டு  இருத்தல் வேண்டும். (phrased to clearly meet the purpose of the study).
  • ஆய்வுக் குறிக்கோள்கள் எழுதும் போது ஆய்வுக்கான சார்ந்த, சாரா மாறிகளை தொடர்புபடுத்தி (தனித்த மாறி, இருமாறிகள், பலமாறிகள் கொண்டதாக) எழுதுதல் வேண்டும்.

ஆய்வுக் குறிக்கோள்களை எழுதும் போது அவை (செயல்) வினைச் சொற்களைக் கொண்டதாக எழுத வேண்டும்.

  • கண்டுபிடிக்க (to find out)
  • இனங்காண (to Identify)
  • தீர்மானிக்க (to determine)
  • ஒப்பிட (to compare)
  • கணிப்பிட (to calculate)
  • சரிபார்க்க (to verify)
  • பரிசீலிக்க (to examine)

தெளிவற்ற (செயல்) வினைசொற்கள் அல்லாத பதங்களை கொண்டு குறிக்கோள்களை எழுத வேண்டாம் (உதாரணம்: பாராட்ட - to appreciate, புரிந்து கொள்ள - to understand, நம்ப - to believe).

3.7 ஆய்வு வினாக்கள்/ ஆய்வுக் கருதுகோள்கள்

ஆய்வுக் குறிக்கோள்களை அடையும் வகையில், குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் வினாக்கள், ஆய்வு வினாக்கள் எனப்படும். இவை ஒவ்வொரு ஆய்வுக் குறிக்கோள்கள் அடையும் வகையில் பிரதான வினாக்களாகவோ, சிறு சிறு  வினாக்களாகவோ எழுதப்படும். ஆய்வு வினாக்களிலும், ஆய்வுக்கான மாறிகளை ((தனித்த மாறி, இருமாறிகள், பலமாறிகள் கொண்டதாக) பொருத்தமான முறையில் தொடர்புபடுத்தி வினாக்களை உருவாக்குதல் வேண்டும்.  

கோட்பாட்டு ரீதியான ஆய்வுகளை முன்னெடுக்கும் போது ஆய்வுக் கருதுகோள்களை அமைத்துக் கொள்ள முடியும். தொகைசார்ந்த ஆய்வுகளிலேயே கருதுகோள்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும். மாறிகளுக்கு இடையில் எத்தகைய தொடர்புகள்/வேறுபாடுகள் உள்ளன எனபது தொடர்பாக ஆய்வாளரது தற்காலிக எதிர்பார்ப்பு அல்லது தற்காலிக விளக்கமே ஆய்வுக் கருதுகோள் எனப்படும். 

3.8 ஆய்வின் முக்கியத்துவம்

குறித்த ஆய்வினை ஏன் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆய்வினை மேற்கொள்வதன்  மூலம் அடையப் பெரும் விளைவுகள்/ தாக்கங்களை (implications) குறிப்பிடுவதன் ஊடாக ஆய்வின் முக்கியத்துவத்தை அறிக்கைப்படுத்த வேண்டும். 

எவ்வாறு உங்கள் உத்தேச ஆய்வின் முடிவுகள் 

  • தற்போதைய அறிவில், 
  • கோட்பாடுகளில், 
  • கல்விக் கொள்கைகளில், 
  • கல்வி நடைமுறைகளில், 
  • கலைத்திட்டதில்,
தாக்கம் செலுத்தும் என்பதை குறித்துரைத்தல் வேண்டும். 

ஆய்வின் முக்கியத்துவத்தை எழுதும் போது பின்வரும் வினாக்களை மனதிற் கொள்க:
  • ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படும் கோட்பாட்டு சட்டகத்தில் ஆய்வு முடிவுகள் எத்தகைய தாக்கங்களை செலுத்தும்? (What will results mean to the theoretical framework that framed the study?)
  • ஆய்வின் முடிவுகளில் இருந்து அடுத்த ஆய்வுகளுக்கு எவ்வாறான பரிந்துரைகள் எழக் கூடும்? (What suggestions for subsequent research arise from the findings?)
  • ஆய்வு முடிவுகள் தற்போதைய நிகழ்ச்சித் திட்டங்களில், முறைகளில், எத்தகைய தாக்கங்களை கொண்டிருக்கும்?   (Will results influence programs, methods, and/or interventions?)
  • ஆய்வு முடிவுகள் கல்வி சார் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளுக்கு  பங்களிப்பு செய்யுமா?  (Will results contribute to the solution of educational problems?)
  • ஆய்வு முடிவுகள் கல்வி சார் கொள்கை தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்துமா? (Will results influence educational policy decisions?)
  • உத்தேச ஆய்வின் முடிவுகளினால் எத்தகைய மாற்றங்கள் நிகழலாம்  அல்லது எத்தகைய மேம்பாடுகள் அடையப்பெறும்?  (What will be improved or changed as a result of the proposed research?)
  • ஆய்வு முடிவுகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் அதானால் எத்தகைய புத்தாக்கங்கள் உருவாகும்? (How will results of the study be implemented, and what innovations will come about?).


3.9 இலக்கிய மீளாய்வு

ஆய்வு முன்மொழிவில், தெரிவு செய்த ஆய்வுத் தலைப்பு/ ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக, ஆய்வாளர் தான் அறிந்துள்ளவற்றை வெளிகாட்டும் பகுதி இலக்கிய மீளாய்வு ஆகும். இலக்கிய மீளாய்வானது ஆய்வு பிரச்சினைக்கான பின்னணி மற்றும் சூழமைவு விபரங்களை தருவதாக அமைகின்றது. இது ஆய்வுக்கான தேவையையும், ஆய்வு பரப்பு தொடர்பாக ஆய்வாளரின் அறிவினையும் குறித்துரைப்பதாக இது எழுதப்படல் வேண்டும். “The review of the literature provides the background and context for the research problem. It should establish the need for the research and indicate that the writer is knowledgeable about the area” (Wiersma, 1995). ஆய்வு முன்மொழிவுக்கான இலக்கிய மீளாய்வில் பின்வரும் அம்சங்கள் உள்ளடக்கப்ப்ட்டு இருத்தல் வேண்டும்.

  • கோட்பாட்டு மீளாய்வு – ஆய்வுப் பிரச்சினையுடன் தொடர்புடைய கோட்பாடு இனங் காணப்பட்டு, விவரிக்கப்படல் வேண்டும். குறித்த கோட்பாடு  உத்தேச ஆய்வில், எவ்வாறு பயன்படுத்தப் போகிறது எனபது பற்றிய விளக்கம் அளிக்கப்படல் வேண்டும். 
  • சார்பிலக்கிய மீளாய்வு – ஆய்வுடன் தொடர்புபட்ட பிற முக்கியமான ஆய்வுகள் பற்றிய விமர்சன் ரீதியான பகுப்பாய்வு.
  • ஆய்வு இடைவெளி: சார்பிலக்கிய மீலியாவினை மேற்கொள்ளுமபோது தற்போதைய அறிவில் குறித்த ஆய்வுத் தலைப்புடன் தொடர்புபட்ட வகையில் காணப்படும் இடைவெளிகளை துல்லியமாக இனங் கண்டு அவை பற்றி விளக்கப்படல் வேண்டும். ஆய்வு இடைவெளியானது தற்போதைய அறிவில் உள்ள எண்ணக்கருக்கள், கோட்பாட்டு பிரயோகம், ஆய்வு அணுகுமுறை, ஆய்வு முறையியல் போன்றவற்றில் எதாவது ஒன்றில் அல்லது பலவற்றில் உள்ள இடைவெளிகளாக இனங் காணப்படலாம்.
  • ஆய்வு தொடர்பான பிற முக்கியமான எண்ணக்கருக்கள். 

 



3.10 ஆய்வு முறையியல்

ஆய்வு முன்மொழிவின் இதயமே ஆய்வு முறையியல் ஆகும். உத்தேச ஆய்வினை நீங்கள் எவ்வாறு மேற்கொள்ளப் போகிறீர்கள் எனபது பற்றிய திட்டத்தினை ஆய்வு முறையியலில் எடுத்துக் காட்டப்படுகிறது. 

குறித்த ஆய்வின் ஒவ்வொரு ஆய்வுக் குறிக்கோள்களையும் அல்லது ஆய்வு வினாக்களையும் அடைந்து கொள்ள பயன்படுத்தப்படும்   படிமுறைகளை,  ஆய்வு முறையியல் விளக்கி நிற்கிறது. இதில் பின்வரும் விடயங்களை தெளிவாக விளக்கிக் கூறல் வேண்டுமாகிறது:

  • ஆய்வு அணுகுமுறையும் ஆய்வு வடிவமும் அதற்கான நியாயிப்பும்: உங்கள் உத்தேச ஆய்வினை எத்தகைய அணுகுமுறையில் (தொகை சார் அணுகுமுறை, பண்புசார் அணுகுமுறை, கலப்பு அணுகுமுறை) மேற்கொள்ளப் போகிறீர் என்பதை தெளிவாகக் கூறல் வேண்டும். மேலும்,குறித்த ஆய்வினை மேற்கொள்ள எத்தகைய ஆய்வு வடிவத்தை நீர் தெரிவு செய்துள்ளீர் என்பதையும் அதற்க்கான நியாயிப்பினையும் சுருக்கமாக எடுத்துரைத்தல் வேண்டும், இதன் போது ஆய்வு அணுகுமுறை, ஆய்வு வடிவம் என்றால் என்ன என்பதற்கான தேவையற்ற விளக்கங்களை தவிர்த்தல் வேண்டும்.

  • ஆய்வுக் குடி: உத்தேச ஆய்வினை மேற்கோள்ள நீர் கருத்தில் கொள்ளும் ஆய்வுக் குடி பற்றிய விளக்கம் தரப்படல் வேண்டும்.  
  • ஆய்வு மாதிரியும் , மாதிரியெடுப்பு முறையும் அதற்கான நியாயிப்பும்: ஆய்வுக் குடியில் இருந்து தெரிவு செய்யப்படப் போகும் ஆய்வுக்கான மாதிரி பற்ற்யும், குறித்த ஆய்வு மாதிரிகள், எத்தகைய மாதிரியெடுப்பு முறையினை நீர் தெரிவு செய்துள்ளீர் என்பதையும் விளக்குதல் வேண்டும்.மேலும் நீர் குறித்த  மாதிரியெடுப்பு முறையினை ஏன்  தெரிவு செய்தீர் என்பதற்கான காரணத்தையும் குறிப்பிடல் வேண்டும்.
  •  தரவு சேகரிப்பு கருவிகள்: ஆய்வுக் குறிக்கோள்களுக்கு /ஆய்வு வினாக்களுக்கு விடை தேடுவதற்காக நீங்கள் பயன்படுத்தவுள்ள பொருத்தமான தரவு சேகரிப்பு கருவிகளை தெளிவாக குறிப்பிடல் வேண்டும். இதன்போது, பின்வரும் அட்டவணையை பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாகும்.

ஆய்வுக் குறிக்கோள் /ஆய்வு வினா

மாதிரி

தரவு சேகரிப்பு கருவி

ஆய்வு ஆய்வுக் குறிக்கோள் /ஆய்வு வினா 1

n = 100 ஆசிரியர்கள்

வினாக்கொத்து

ஆய்வு ஆய்வுக் குறிக்கோள் /ஆய்வு வினா 2

n = ?

?

ஆய்வு ஆய்வுக் குறிக்கோள் /ஆய்வு வினா 3

n = ?

?

  • தரவு சேகரிப்பு கருவிகளின் விருத்தி படிநிலைகள்  : நீர், தரவு சேகரிப்புக்காக அடையாளம் கண்ட தரவு சேகரிப்பு கருவிகளை எவ்வாறு விருத்தி செய்யப் போகிறீர்கள் என்பது பற்றிய தெளிவான விளக்கம் தரப்படல் வேண்டும்.
  • தரவு சேகரிப்பு கருவிகளுக்கான தகுதியுடமை (Validity), நம்பத்தன்மையை (Reliability)  உறுதிப்படுத்துவதற்கான திட்டம்: தரவு சேகரிப்புக்காக விருத்தி செய்யப்பட்ட கருவிகளின் தகுதியுடமை, நம்பத்தன்மையை உறுதிப்படுத்திக் காட்டுவது ஆய்வுச் செயன்முறையில் மிக முக்கியமான படிநிலையாகும்.  தரவு சேகரிப்பு கருவிகளின் தகுதியுடமை, நம்பத்தன்மையை உறுதிப்படுத்திக்காட்டுவதற்கு நீர் பின்பற்றவுள்ள படிநிலைகளை ஆய்வு முன்மொழிவில் எடுத்துக் காட்டல் வேண்டும்.
  • தரவு பகுப்பாய்வு தொடர்பான திட்டம்: ஆய்வு முன்மொழிவில் உள்ள ஆய்வுக் குறிக்கோள்கள் அல்லது ஆய்வு வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தேடுவதற்காக பயன்படுத்திய ஆய்வு கருவிகளின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளை எவ்வாறு பகுப்பாய்வு செய்யப் போகிறீர்கள் என்பதை தெளிவாக குறித்துரைத்தல் வேண்டும். சிலர் தரவு பகுப்பாய்வு பகுதியில் தெளிவற்ற வாசகங்களை எழுதுகின்றனர். (உதாரணம்: தரவுப் பகுப்பாய்வுக்காக விவரண புள்ளியியல் முறை பயனபடுத்த படும்.பொருத்தமான நுட்பங்களை கொண்டு பகுப்பாய்வு செய்யப்படும் போன்ற). இது பிழையானதாகும்.  ஆய்வுக் குறிக்கோள்கள் அல்லது ஆய்வு வினாக்கள் ஒவ்வொன்றிலுமுள்ள மாறிகளை (தனித்த மாறி, இரு மாறிகள், பல் மாறிகள் ) அடையாளம் கண்டு அவற்றின் போக்குகளை,  அவற்றுக்கு இடையில் உள்ள தொடர்புகள், இணைபுகள் , வேறுபாடுகள் ஆகியவற்றை வெளிக்கொணரும் வகையில் துல்லியமான பகுப்பாய்வு நுட்பங்களை குறிப்பிடல் வேண்டும். இதன் போது தரவுப் பகுப்பாய்வு தொடர்பாக நீங்கள் கொண்டுள்ள  தெளிவினை வெளிக்காட்ட முடியும். இதன்போதும், பின்வரும் அட்டவணையை நீங்கள் பயன்படுத்த முடியும்.

ஆய்வுக் குறிக்கோள் /ஆய்வு வினா

மாதிரி

தரவு சேகரிப்பு கருவி

தரவுப் பகுப்பாய்வு

ஆய்வு ஆய்வுக் குறிக்கோள் /ஆய்வு வினா 1

n = 100 ஆசிரியர்கள்

வினாக்கொத்து

இடை, நியம விலகல், பார் வரைபு

ஆய்வு ஆய்வுக் குறிக்கோள் /ஆய்வு வினா 2

n = ?

?

 

ஆய்வு ஆய்வுக் குறிக்கோள் /ஆய்வு வினா 3

n = ?

?

 

 

·         3.11 ஆய்வின் வரையறைகளும் எல்லைப்படுத்தலும்

உத்தேச ஆய்வில் காணப்படும் வரையறைகள் (Limitations) மற்றும் எல்லைப்படுத்தல் (delimitation) பற்றி ஆய்வாளர் தெளிவாக எடுத்துக் கூறல் வேண்டும். உங்கள் ஆய்வில் உள்ள சாத்தியமான பலவீனங்களை அடையாளம் கண்டு அவை பற்றி குறித்துரைப்பது வரையறைகள் (Limitations) எனப்படும். 

இந்த பலவீனங்கள், உங்கள் ஆய்வின் மாதிரி, தரவு சேகரிப்பு கருவிகள், தகுதியுடைமை  நம்பகத்தன்மை, தரவு பகுப்பாய்வு ஆகியவற்றில் உங்களால் தவிர்க்க முடியாத விடயங்கள்,  காணப்படலாம். இவற்றை இனம் கண்டு அவற்றை விபரித்தல் வேண்டும் (limitation identifies potential weaknesses of the study. Think about your analysis, the nature of self-report, your instruments, the sample. Think about threats to internal validity that may have been impossible to avoid or minimize).

மேலும், உங்கள் ஆய்வின் நோக்கப் பரப்பு எவ்வாறு சுருக்கப்பட்டுள்ளது,  எவ்வாறு எல்லைப்படுத்தப்பட்டுள்ளது எனபதை எடுத்துரைப்பது ஆய்வின் எல்லைப்படுத்தல்  (delimitation)  எனப்படும். 

உங்கள் உத்தேச ஆய்வில் நீங்கள் செய்யாத விடயங்களை விளக்குவதற்கான பகுதியே இதுவாகும். இலக்கிய மீளாய்வில், கோட்பாட்டு தெரிவில், ஆய்வு குடி, மாதிரி, தரவு சேகரிப்பு கருவிகளில், பகுப்பாய்வில் நீங்கள் தெரிவு செய்த விடயங்களையும், தவிர்த்த  விடயங்களையும் இதில் உரிய காரணங்களுடன்  குறிப்பிட்டு காட்டல் வேண்டுமாகிறது.  (A delimitation addresses how a study will be narrowed in scope, that is, how it is bounded. This is the place to explain the things that you are not doing and why you have chosen not to do them—the literature you will not review (and why not), the population you are not studying (and why not), the methodological procedures you will not use (and why you will not use them). Limit your delimitations to the things that a reader might reasonably expect you to do but that you, for clearly explained reasons, have decided not to do.)

·         3.12 கால சட்டகம்

       உத்தேச ஆய்வில் உள்ள ஒவ்வொரு செயற்பாடுகளையும்செய்து முடிப்பதற்கான கால   அளவு தொடர்பான ஒரு திட்டமிடலை கால சட்டகத்தில், ஆய்வாளர் எடுத்துக் காட்ட வேண்டும்.  இதற்காக  கான்ட் வரைபு (Gantt Chart) பரவலாக பயன்படுத்தபடுகிறது. உங்களது உத்தேச ஆய்வின் ஒவ்வொரு செயற்பாடுகளை (ஆய்வுச் செயன்முறைபல்வேறு படிநிலைகளில் உள்ள செயற்பாடுகள்)  ஓர் அட்டவணையில் நிரல்களில் இட்டு அவற்றை செய்து முடிப்பதற்கான கால அளவை நாட்களில்/வாரங்களில்/மாதங்களில் அட்டவணையின் வரிசைகளில் குறிப்பிட்டுக் காட்டுவதே கால சட்டக வரைபு ஆகும். ஆய்வினை உரிய காலத்துக்குள் செய்து முடிக்க இந்த கால சட்டகம் உங்களுக்கு உதவுவதாக இருக்கும்.  (கான்ட் வரைபு - Gantt Chart கான உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது)

 


3.13 பாதிடு

உத்தேச ஆய்வில் உள்ள ஒவ்வொரு செயற்பாடுகளையும்  செய்து முடிப்பதற்காக ஆய்வாளருக்கு ஏற்படும் செலவீனங்களை குறிப்பிட்டுக் காட்டுவது ஆய்வு முன்மொழிவின் இன்னொரு முக்கிய கூறாக உள்ளது. ஆய்வின் ஒவ்வொரு செயற்பாடுகளை  அட்டவணை நிரலில் இட்டு அவற்றுக்கு ஏற்படும் செலவுகளை குறிப்பிட்டு கட்டுதல் வேண்டும். மேலும் குறிப்பிட்ட செலவீனங்களை ஆய்வாளர் எவ்வாறு சமாளிக்கப்  போகிறார்,  என்பதையும் குறிப்பிட்டு கூறுதல் வேண்டும்.

 

 3.14 நூல்­வி­ப­ரப்­ பட்­டியல் 

ஆய்வு முன்மொழிவுகளை  தயா­ரிக்கும் போது. சம்­பந்­தப்­பட்ட நிறு­வனம், பல்­க­லைக்­க­ழகம் எந்த உசாத்­து­ணை­யிடல் முறை­யினை பின்­பற்ற வேண்டும் என்ற வழி­காட்டல் குறிப்­புக்­களை நிச்­சயம் வழங்கி இருப்­பார்கள். அதனை பின்­பற்றி உங்கள் ஆய்வு முன்மொழிவின் உசாத்­து­ணை­யிடல் அல்லது நூற்பட்டியலை தயாரித்துக் கொள்ளல்வேண்டும்.  

குறிப்­பிட்ட வழி­காட்­டல்­களை கவ­னத்தில் கொள்­ளாமல் அனுப்­பப்­படும் ஆய்வு முன்மொழிவுகள்  அதி­க­மான வேளை­களில் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­துண்டு . ஆய்வு முன்மொழிவின் உட்பகுதிகளில் பிற ஆக்கங்களில் இருந்து பெற்ற கருத்துக்களை உரிய முறையில் உரை மேற்கோள் காட்டுதல் வேண்டுமாகின்றது. ஆய்வு முன்மொழிவுகளில்  உசாத்துணைகளுக்கு பதிலாக நூற்பட்டியலை அதிகமான சந்தர்ப்பங்களில் ஆய்வாளர் இணைத்திருப்பர். இதன்போது ஆய்வாளர்  உரை  மேற்கோள் காட்டல், உசாத்துணை, நூல்விபர பட்டியல் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை அறிந்து வைத்திருப்பது முக்கியமாகும். 

  • மேற்கோள் காட்டல், என்­ப­தனை ஆங்­கி­லத்தில் Citation என்­ற­ழைப்பர். Reference எனும் போது அது உசாத்­துணை எனவும் Bibliography என்­பது நூல்­வி­ப­ரப்­பட்­டியல் அல்­லது நூற்­றொகை என்றும் அழைக்­கப்­ப­டு­கின்­றன. 
  • கல்வி சார்ந்த ஆக்­கங்­களை குறிப்­பாக, கட்­டு­ரைகள், ஒப்­ப­டைகள், ஆய்வு முன்­மொ­ழி­வுகள், ஆய்வுக் கட்­டு­ரைகள், நூல்கள் போன்­ற­வற்றை எழுதும் போது, அவற்றில் நாம் எழுதும் அநேக கருத்­துக்கள், எமது வாசிப்பின் ஊட­கவோ, கேட்­பொலி, காணொளி­கள்­ ஆ­கி­ய­வற்றின் ஊடாகவோ பெற்­றுக்­கொண்ட அறிவு, தக­வல்கள், தர­வுகள் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்கிக் காணப்­படும். மட்­டு­மன்றி, எமது கருத்­துக்­க­ளுக்கு வலு சேர்க்கும் வகையில், எமது வாசிப்­பி­னூ­டான பல்­வேறு சான்­று­களை முன்வைக்க வேண்­டிய தேவை­களும் ஏற்­படும். எமது வாசிப்­பி­னூ­டாக பெற்­றுக்­கொண்ட பிற­ரது சிந்­த­னைகள், கருத்­துக்கள், தர­வுகள் ஆகி­ய­வற்றை எமது கட்­டு­ரை­களில் எழுதும் போது, அவற்றை எங்­கி­ருந்து வாசித்து, கேட்டு, பார்த்து அறிந்து கொண்­டோமோ அவற்றின் மூலங்­களை குறிப்­பிட்டுக் காட்­டு­வது முக்­கி­ய­மாகும். இன்றேல், பிறர் கருத்­து­களை நாம் நக­லாக்கம் செய்த குற்­றத்­துக்கு ஆளாகி விடுவோம். கல்வி சார்ந்த பல்­வேறு ஆக்­கங்­களில் இத்­த­கைய நக­லாக்க குற்­றத்தை தவிர்க்கும் பொருட்டு குறித்த கருத்­துக்­களை எழுதும் போது அதன் மூலத்­தினை (source) அதா­வது அக்­க­ருத்­துக்கு உரிய உண்­மை­யான ஆசி­ரியர் பெய­ரினை குறிப்­பிட்டுக் காட்­டு­வது மேற்கோள் காட்டல் எனப்­ப­டு­கின்­றது. இதனை ஆங்­கி­லத்தில் In-text citation என்று கூறுவர்.
  • கல்வி சார்ந்த ஆக்­கங்­­ளான கட்­டு­ரைகள், ஒப்­­டைகள், ஆய்வு முன்­மொ­ழி­வுகள், ஆய்வுக் கட்­டு­ரைகள், நூல்கள் போன்­­வற்றின் உட்­பந்­தி­களில் (In-text) மேற்கோள் காட்­டிய அனைத்­தி­னதும் முழு­மை­யான விவ­ரங்­களை அதா­வது, நூலா­சி­ரியர் பெயர், வரு­டத்­துடன், குறித்த ஆக்­கத்தின் பிர­சுர விட­யங்­களை முழு­மை­யாக, எமது கல்­விசார் ஆக்­கங்­களின் இறுதி பக்கத்தில் பட்டி­­லிட்டு காட்­டு­­தையே, உசாத்­துணை (Reference) எனப்படு­கி­றது. எனவே, உசாத்­துணை என்ற தலைப்பில் பட்­டியல் இடும் நூல்கள், கட்­டு­ரைகள் என்­­­வற்றின் உட்­­கு­தி­களில், மேற்கோள் இடப்­பட்­­தா­கவோ, எடுத்­துக்­காட்­டப்­பட்­­தா­கவோ இருத்தல் வேண்டும். 
  • மாறாக, எமது கல்­விசார் கட்­டு­ரை­களின் உட் பந்­தி­களில் மேற்கோள் காட்­டி­­வற்­றுடன், மேற்கோள் காட்­டாத நூல் விவ­ரங்­­ளையும் இணைத்து வரும் பட்­டியல், நூல்­வி­­ரப்­பட்­டியல் அல்­லது நூற்­றொகை (Bibliography) என்­­ழைக்­கப்­படும். 
  • அதி­­மான ஆய்வு மாண­வர்கள், இவ்­வே­று­பாட்­டினை புரிந்து கொள்­ளாமல் உசாத்­துணை பட்­டியல் கோரப்­படும் ஆய்வுக் கட்­டு­ரை­களில் நூல்­வி­­ரப்­பட்­டியல் அல்­லது நூற்­றொ­கை­யினை எழுதி விடு­கின்­றனர். ஆய்­வு­களில் ஈடு­­டுவோர், பல்­வேறு கட்­டு­ரை­களை எழு­துவோர், உசாத்­துணை மற்றும் நூல்­வி­­ரப்­பட்­டியல் ஆகி­­வற்­றி­லுள்ள இந்த வேறு­பாட்டை அறிந்து செயற்­­டு­வது முக்­கி­­மாகும்.

3.15 பின்னிணைப்புகள்

ஆய்வு முன்மொழிவின் இறுதியில் ஆய்வு முன்மொழிவுக்கான பின்னிணைப்புகளை இணைத்தல் வேண்டும். பொதுவாக பின்வரும் அம்சங்கள் பின்னிணைப்பில் சேர்த்துக் கொள்ளப்படும்.

  • ஆய்வுக் கருவிகள்
  • தரவு சேகரிப்புக்கான அனுமதி கோரல் கடிதம்
  • தரவு சேகரிப்பவர்களிடம் அவர்களது விருப்பத்தை பெறுவதற்க்கான கடிதம்
  •  ஏனையன

      4.0 முடிவுரை 

    மேலே கூறப்பட்ட ஆய்வு முன்மொழிவின் முக்கிய கூறுகளை உள்ளடக்கிய வகையில் ஆய்வு முன்மொழிவினை சீராக கணணி தட்டச்சு செய்து , பிழைகள் இல்லாத வகையில் அனுப்பி வைத்தல் வேண்டும். ஆய்வு முன்மொழிவுக்கு குறித்த நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் தந்துள்ள வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டே ஆய்வு முன்மொழிவுகள் தயாரிக்கபடல் வேண்டும். இதன் போது மேலே கூறப்பட்ட சகல கூறுகளும் அவற்றின் வரிசை ஒழுங்கு முறையும் மாறி இருக்கும் என்பதை மனதில் கொள்க.  


        உசாத்துணைகள்  

American Psychological Association (APA). (2001). Publication manual of the American Psychological Association (Fourth edition). Washington, DC: Author.

Armstrong, R. L. (1974). Hypotheses: Why? When? How? Phi Delta Kappan, 54, 213-214.

Creswell, J. W. (1994). Research design: Qualitative & quantitative approaches. Thousand Oaks, CA: Sage.

Guba, E. G. (1961, April). Elements of a proposal. Paper presented at the UCEA meeting, Chapel Hill, NC.

Faculty of graduate studies (2021) http://graduate.sjp.ac.lk/wp-content/uploads/2016/02/FGS-Guidelines-2017-2021.pdf

Faculty of graduate studies (2021) Detailed Research Proposal for Ethics Review, University of Colombo https://fgs.cmb.ac.lk/application-guidelines/

Fraenkel, J. R. & Wallen, N. E. (1990). How to design and evaluate research in education. New York: McGraw-Hill.

Kerlinger, F. N. (1979). Behavioral research: A conceptual approach. New York: Holt, Rinehart, & Winston.

Krathwohl, D. R. (1988). How to prepare a research proposal: Guidelines for funding and dissertations in the social and behavioral sciences. Syracuse, NY: Syracuse University Press.

Locke, L. F., Spirduso, W. W., & Silverman, S. J. (1987). Proposals that work: A guide for planning dissertations and grant proposals (2nd ed.). Newbury Park, CA: Sage.

Marshall, C., & Rossman, G. B. (1989). Designing qualitative research: Newbury Park, CA: Sage.


Shavelson, R. J. (1988). Statistical reasoning for the behavioral sciences (second edition). Boston: Allyn and Bacon.

Sreeraj S R  (2015). Writing a research proposal https://www.slideshare.net/sreerajsr/writing-a-research-proposal-56071106

Wiersma, W. (1995). Research methods in education: An introduction (Sixth edition). Boston: Allyn and Bacon.

Wilkinson, A. M. (1991). The scientist’s handbook for writing papers and dissertations. Englewood Cliffs, NJ: Prentice Hall.

 



விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...