நூல் அறிமுகம்: உசாத்துணையிடல் பாணிகள்





நூல் அறிமுகம்: உசாத்துணையிடல் பாணிகள்


திரு. வீ.தியாகராஜா

கல்வி இணைப்பாளர்/சிரேஷ்ட ஆலோசகர்
சமூக விஞ்ஞானங்கள் துறை
இலங்கை திறந்த பலகலைக்கழகம்


நூலின் பெயர்: உசாத்துணையிடல் பாணிகள்
நூலாசிரியர்கள்: கலாநிதி. எப்.எம்.நவாஸ்தீன்  மற்றும் எம்.யூ.எம்.ஸபீர்
நூல் வெளியீடு: ஜீவநதி பதிப்பகம்
பக்கங்கள்: 60
படைப்பாளிகள் எல்லோரும் அரிஸ்ரோட்டிஸாகவோ அல்லது பிளேற்ரோவாகவோ இருக்க முடியாது. படைப்பாளிகளது சிந்தனையாக்கம் மற்றும் அறிவுக் கருவூலங்கள் என்பது அவர்களது அறிவு, பெற்ற பயிற்சி மற்றும் அனுபவங்களை கொண்டமைந்தாலும் தற்காலத்தில் கல்விசார் ஆக்கங்களை உருவாக்கும்போது ஆய்வாளன் அல்லது எழுத்தாளர் தாம் கூற வருகின்ற கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் வகையில் பிற ஆய்வாளர்களது அல்லது படைப்பாளிகளது கருத்துக்களை தமது கட்டுரையில் சேர்க்க வேண்டியவர்களாக உள்ளனர். இதற்காக பல்வேறுபட்ட நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பது மட்டுமல்லாமல் இன்று இலத்திரனியல் சாதனங்களுக்கூடாக பரிமாற்றப்படும் கருத்துக்களையும் இணைத்துக்கொள்ளுகின்றனர். இவற்றை தமது ஆக்கங்களில் உள்ளடக்குவதற்காக விஞ்ஞான ரீதியான அங்கீகரிக்கப்பட்ட முறைகள் சர்வதேச ரீதியாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை கட்டுரையாளர்கள் முறையாக தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.
கட்டுரைகளை அல்லது ஆய்வறிக்கைகளை பூரணப்படுத்தும் போது எத்தரத்தில் ஆய்வு உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். படைப்புக்களில் உள்ள சிந்தனைகள் எங்கிருந்து பெறப்பட்டது என்பதையும் எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டுவது சிறப்பானதாகும். தவறாக மற்றவர்களது கருத்துக்களை அனுமதி பெறாமல் பயன்படுத்துவது கருத்தை அல்லது சிந்தனையை திருடுவதாகவே கொள்ளப்படும். ஒருவரது கருத்தை மற்றவர் திருடுவது ஒரு கடுமையான கல்விசார் கெட்ட நடத்தையாகவே கொள்ளப்படும். அது மட்டுமல்லாமல் இது தண்டணைக்குரிய குற்றமுமாகும். இத்தவறானது மற்றவரது கருத்துக்களை தமது கட்டுரையாக்கத்தில் எவ்வாறு பயன்படுத்துவது அல்லது உள்ளாக்குவது என்பது தெரியாமலே பல ஆய்வாளர்கள் தவறுவிடுகின்றனர்.
எனவே ஆய்வாளர்களை நெறிப்படுத்தும் நோக்கம் கருதி இலங்கை திறந்த பல்கலைக்கழக சிரேஷ;ட விரிவுரையாளரான  கலாநிதி. ப.மு.நவாஸ்தீன் மற்றும் திரு. எம்.யூ.எம். ஸபீர் ஆகியோர் எழுதிய 'உசாத்துணையிடல் பாணிகள்' எனும் நூல் மிகச் சிறப்புமிக்கதாகும். தமிழ்மொழி மூலம் பயிலும் அனைத்து ஆய்வாளருக்கும் இந்நூல் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்நூலில் மேற்கோள்கள் காட்டல் உசாத்துணையிடல் பாணிகள், இதற்கு உதவும் நவீன தொழிநுட்பம், உசாத்துணை நூல் பட்டியல் தயாரித்தல் போன்ற பல விடயங்கள் மிகத் துல்லியமாக எழுதப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச ரீதியாக சமூக விஞ்ஞான துறைசார்ந்த பாடங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் அமெரிக்க உளவியல் சங்கத்தினால் (APA) அறிமுகப்படுத்தப்பட்ட உசாத்துணையிடல் பாணி 6ம் பதிப்பினை அடிபப்டையாகக் கொண்டு இந்நூல் விளக்கம் தருவது மேலும் சிறப்புமிக்கதாகும்.
இந்நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டமைக்கப்பட்டுள்ளது. முதற் பகுதியில் உசாத்துணையிடலில் உள்ள சில அடிப்படை விடயங்களை விளக்குவதாக உள்ளது இதில் மேற்கோள் காட்டல், உசாத்துணை மற்றும் நூல் விபரப்பட்டியல், குறிப்புரை நூல் விபரப்பட்டியல், குறிப்புரை நூல் விபரப்பட்டியல் வகைகள், உசாத்துணையிடல் பாணிகள், எந்த உசாத்துணை முறைiயினைப் பயன்படுத்துதல், உசாத்துணை பாணிகளும், நவீன தொழில்நுட்பமும் போன்ற தலைப்புகளின் கீழ் விளக்கம் கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது பகுதியில் APA உசாத்தணையிடல் பாணியில் பல்வேறுபட்ட மூலாதாரங்களை கட்டுரைப்பந்திகளில் எவ்வாறு மேற்கோள்காட்டுவது, உசாத்துணைநூல் பட்டியலில் இடுவது போன்ற விடயங்கள் பல உதாரணங்களுடன் விளக்கப்படுத்தப்பட்டுள்ளன. இந்நூலில் பயன்படுத்தப்பட்ட உதாரணங்கள் மூலமாக கல்வியலில் பிரபல்ய எழுத்தாளர்களின் நூல்களைக் கூட அறிந்து கொள்ளக்கூடியதாக இருப்பது மேலும் இந்நூலுக்கு வலுசேர்ப்பதாக உள்ளது. அத்துடன் தமிழ்மொழி மூலமாக மட்டுமல்லாமல் அதற்கு சரிநிகராக ஆங்கில மொழி மூலமான உதாரணங்கள் பயன்படுத்தப்பட்ட விதம் இப்புத்தகத்தின் மீது நம்பகத்தன்மையை வாசிப்போர் மத்தியில் உருவாகுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
APA முறையினை விளக்கும் ஆங்கில மொழி மூலமான நூலை வாசிப்பதை விட தமிழ்மொழி மூலமான மாணவர்கள் இந்நூலை வாசிக்கும் போது அதற்கு சரிநிகராக தமிழ் மொழியில் மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது சிறப்புமிக்கதாகும்.
இந்நூல் உருவாகுவதற்கு காரணமாக இருந்த ஒரு விடயம் எழுத்தாளரால் விளக்கப்பட்டுள்ளமை சிறப்பானதாகும். 'ஆய்வு மாணவர்கள் தமது ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் போது மிகவும் சிரமப்படும் ஒரு விடயமாக இந்த உசாத்துணையிடல் பகுதி அமைந்துள்ளதை பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுடன் கடந்த சில வருடங்களாக பழகியதில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது' என்பதன் மூலம் தனது யதார்த்த அனுபவங்களினூடாக இப்புத்தகம் வெளிவந்தமை பாராட்டுக்குரியதாகும்.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்க யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணி தனது அணிந்துரையில் குறிப்பிட்ட விடயத்தையும் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும். அவர் 'இந்நூல் ஆய்வு மாணவர்களுக்கு மட்டுமன்றி ஆய்வாளருக்கும் பயன்தரக்கூடிய வகையில் உதாரணங்களைத் தந்து சுருக்கமான மொழியில் எளிய நடையில் எழுதியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்' என சுட்டிக்காட்டியள்ளார். இதன்மூலம் உயர் கல்வியை பயிலும் மாணவர்கள் மட்டுமன்றி பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கும் பயனுடையது என்பது தெரிய வருகின்றது.
எனவே உள்ளடக்கம் உதாரணங்கள், மொழி பயன்பாடு, மொழி நடை என்பன மிகச் சிறப்பாக கையாளப்பட்டுள்ளமை ஆய்வாளர்கள் யாவரும் வாசிக்க வேண்டிய நூலாக உள்ளது. இந்நூலின் நவீன வடிவத்தினை மைக்ரோசொப்ரில் (ஆiஉசழளழகவ) எவ்வாறு பயன்படுத்தலாம் என இந்ந}ல் எழுத்தாளர் எடுத்துக்கூறியிருப்பின் மேலும் இந்நூல் சிறப்பு பெறும் என்பது எனது கருத்தாகும்.
                                                                                                                                   திரு. வீ.தியாகராஜா


விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...